ஹதீஸ்
ஹதீஸ்களை
முஸ்லிம்கள் எப்படி பார்க்கின்றனர்?
================≠====================
திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பாளர், மவ்லவீ B.M. கலீலுர் ரஹ்மான் மன்பயீ M.A., M.Phil
இமாம் : மஸ்ஜித் தக்வா மதரஸா பிலால் சாந்தோம் சென்னை.
23.12. 2025 அன்று லால்பேட்டையில் மன்பயீ பேரவை ஒன்று கூடல் நிகழ்வு நடந்தது; அன்றைய தினமே புகாரி ஷரீஃப் ஐம்பதாம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. அதில் வெளியிடப்பட்ட மலரில் இந்த கட்டுரை இடம் பெற்றுள்ளது.
====================================
ஹதீஸ் என்பது நபி (ஸல்) அவர்கள் பேசிய பேச்சுகள், செய்த செயல்கள், நபித்தோழர்கள் பேசியதை நபிகளார் கேட்டு ஆமோதித்தவை, நபிகள் நாயகத்திற்கு எதிரில் ஸஹாபாக்கள் செய்த செயல்களில் அங்கீகரித்தவை ஆகியனவே ஹதீஸ்கள் எனப்படும்.
திருக்குர்ஆன் இஸ்லாமியக் கல்வித் துறைகளுக்கு இதயமாக திகழ்வது போல் ஹதீஸ் கலை, அனைத்து கல்வித் துறைகளுக்கும் இரத்தத்தை பாய்சுகின்ற நாடி நரம்பாகத் திகழ்கிறது.
ஹதீஸ்கள் மூலம் இஸ்லாமியக் கல்வித் துறை உயிர்ப்புடனும், துடிப்புடனும் இன்றும் என்றும் இருந்து வரும்.
கடந்த 1500 ஆண்டுகளாக குர்ஆனுக்கு அடுத்தபடியாக ஹதீஸ்களை முஸ்லிம்கள் ஆதாரமாக பயன்படுத்தி வருகிறார்கள்.
ஒவ்வொரு முஸ்லிமுடைய அன்றாட வாழ்விலும் ஹதீஸ் இரண்டர கலந்துள்ளது. அதிலும் புகாரி முஸ்லிம் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ள ஹதீஸ்களை மிக உயர்வாக கருதுகிறார்கள்.
அன்றாட வாழ்வில் முஸ்லிம்களுடைய ஆன்மிகம் சார்ந்த விஷயங்களில் ஹதீஸ்களின் கருத்துகளே வழிகாட்டுகிறது.
இவ்வாறு ஹதீஸ்களை முழுமையாக முஸ்லிம்கள் பின்பற்றுவதால் குர்ஆனும் அவர்களின் வாழ்வில் ஒரு அங்கமாக மாறி நல்வழிப்படுத்துகிறது.
நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்கு பிறகு முதல் இரண்டு தலைமுறை மனிதர்களால் ஹதீஸ்கள் அவ்வளவாக சேகரிக்கப்படவில்லை.
அதற்குப் பிறகு சேகரிக்க முனையும் பொழுது யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களில் மாற்றுக்கருத்து உடையவர்கள் என ஒவ்வொரு சாராரும் சில ஹதீஸ்களில் சில இடை செருகல்களை செருகி விட்டார்கள்.
அதனால் அந்த ஹதீஸ்களில் நம்பகத்தன்மை கேள்விக்குறியானது. மூன்றாம் தலைமுறை மனிதர்கள் அதாவது முதல் நூற்றாண்டின் இறுதி காலங்களில் இவ்வாறான குறைகளை எல்லாம் நீக்கி மிகவும் சரியான நபி மொழிகளை பல ஆய்வாளர்கள் திரட்டினார்கள். அவை இன்று நம்மிடையே வந்து சேர்ந்துள்ளது.
ஹதீஸ்களை திரட்டியவர்கள் நம்பகமான ஹதீஸ் எது? நம்பகம் இல்லாத ஹதீஸ் எது? ஒவ்வொரு ஹதீஸிலும் இடைசெருகளாக சொருகப்பட்டுள்ள வார்த்தைகள் எது என்பது போன்றெல்லாம் பல்லாயிரக்கணக்கான அறிஞர்களால் ஆய்வு செய்யப்பட்டு தெளிவுபடுத்தப்பட்டு ஹதீஸ்களின் தரங்களுக்கு ஏற்ப நூல்கள் எழுதப்பட்டுள்ளது.
ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கு புகாரி, முஸ்லிம் இருப்பது போலவே ஆதாரம் இல்லாத ளயீஃப் - ஹதீஸ்களுக்கு அல் மவ்ழூஅது வழ் ழயீஃபது அலா அல்ஸினதில் குதபாயீ வந்துஆதி, அத்தஹ்ஃபதுல் கரீமா ஃபீ பயானி பஃலுல் அஹாதீஸில் மவ்வூழதி வஸ்ஸகீமா போன்ற நூல்களும் தொகுக்கப்பட்டுள்ளது.
எனவே இன்று முஸ்லிம் சமூகம் ஹதீஸ்கள் குறித்த எந்த சந்தேகத்திற்கும் செல்லத் தேவையில்லை; ஏனென்றால் இது சார்ந்த ஆய்வுகள் அனைத்தும் 1200 வருடங்களுக்கு முன்னதாகவே நமது முன்னோர்கள் செய்து எழுத்து வடிவில் நமக்கு வழங்கிச் சென்று இருக்கிறார்கள்.
உலகில் எந்த சமூகமும் தமது மதம் சார்ந்த செய்திகளை அதன் அறிவிப்பாளர் தொடருடன் நம்பகத்தன்மையோடு பாதுகாப்பதற்கு முயற்சி செய்யவில்லை.
முஸ்லிம்கள் மட்டுமே பெரும் தியாகங்கள் செய்து, தமது உயிரினும் மேலான நபி (ஸல்) அவர்களின் வாழ்வையும், வாக்கையும் பாதுகாத்தனர்; இன்றும் பாதுகாத்து வருகின்றனர்.
யூத, கிறிஸ்தவ மதங்கள் முழுமையாக வழித்தவறி போனதற்குக் காரணம் அவர்களில் இதுபோன்ற ஒரு குழு இல்லாமல் போனது தான்.
குர்ஆனை உண்மைப்படுத்தும் ஹதீஸ்கள் :
=================================
وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ
இந்த வேதத்தை (நபியே) உமக்கு நாம் அருளினோம்; காரணம் இதை நீங்கள் மக்களுக்கு தெளிவாக விளக்கி வைக்க வேண்டும் என்பதற்காக.....16:44
இந்த வசனத்திற்கு இமாம் அவ்ஜாயீ (ரஹ்) அவர்கள் விளக்கம் கூறுவதாவது;
குர்ஆனின் கருத்துக்களை தெளிவுபடுத்த நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களே வந்திருக்கிறது; ஆனால் குர்ஆன், ஹதீஸ்களை தெளிவுபடுத்த வரவில்லை.
நூல்: அல் மதக்கல் இலஸ்ஸுனன்.
மேலும் திருக்குர்ஆன் ஹதீஸ்களின் பக்கம் மிக மிக தேவை உடையதாக இருக்கின்றது; ஆனால் ஹதீஸ்கள் குர்ஆனின் பக்கம் அவ்வளவு தேவை உடையதாக இல்லை எனவும் கூறுகிறார்கள்.
மேலும் நபி மொழிகளே குர்ஆனின் பொருளை தீர்மானிக்கிறது; குர்ஆன் ஹதீஸ்களின் பொருளை தீர்மானிப்பது இல்லை.
நூல்: ஜாமிவு பயானில் இல்ம்.
ஹதீஸ்களை தவிர்த்து விட்டு குர்ஆனை விளங்க முடியாது என்பதே மேற்கூறப்பட்ட கருத்துக்களின் நோக்கம்; திருக்குர்ஆனின் கண்ணியத்தையும் மதிப்பையும் குறைத்து மதிப்பிட்டதாக நினைத்து விடாதீர்.
وَمَا يَنطِقُ عَنِ الْهَوَىٰ (3) إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَىٰ
தன் மனம் விரும்பியவாறு அவர் பேசவும் இல்லை. (அவர் பேசும் பேச்சுகள் யாவும்) அறிவிக்கப்படும் வஹியே தவிர வேறு எதுவும் இல்லை. 53: 3,4.
அதாவது ஹதீஸ் என்பது அல்லாஹ்வினால் நபிகளாருக்கு வஹீ வழியாக அறிவிக்கப்பட்ட கருத்துக்கள்; அவை நபிகளாரின் சொந்த வார்த்தைகளால் எடுத்துரைக்கப்பட்டுள்ளது; எனவே ஹதீஸ் என்பது ஓதப்படாத வஹீ ஆகும்.
ஹதீஸ் மறுப்பு
தோற்றமும் வரலாறும் :
==========================
நபி (ஸல்) அவர்கள் பிற்காலத்தில் தோன்றவிருக்கும் குழப்பங்கள் குறித்து முன்கூட்டியே எச்சரித்துள்ளார்கள்.
ஹதீஸ்கள் தேவை இல்லை; குர்ஆன் மட்டுமே போதும் என்று கூறும் ஒரு கூட்டம் தோன்றும் என்பதை முன்னரே சொல்லி இருக்கிறார்கள்.
عن المقدام ابن معد يكرب إن رسول الله صلى الله عليه وسلم قال يوشك الرجل متكنا على أريكته يحدث بحديث من حديثي فيقول بيننا وبينكم كتاب الله عز وجل ما وجدنا فيه من حلال استحللناه وما وجدنا فيه من حرام حرمناه الا ان ما حرم رسول الله مثل ما حرم الله
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒருவர் தமது சொகுசு இருக்கையில் சாய்ந்திருக்க அவரிடம் நான் கூறிய ஹதீஸ் ஒன்று எடுத்துரைக்கப்படும்.
அப்போது அவர் எனக்கும் உங்களுக்கும் இடையே அல்லாஹ்வின் வேதம் உள்ளது; அதில் அனுமதிக்கப்பட்டதாகக் காண்பதை நாமும் அனுமதிக்கப்பட்டதாகக் கருதுவோம்; அதில் தடை செய்யப்பட்டதாகக் காண்பதை நாமும் தடை செய்யப்பட்டதாகக் கருதுவோம் என்று கூறும் நிலைக்குச் சென்றுவிடுவார்.
அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் தூதர் தடைசெய்துள்ளதும் அல்லாஹ் தடை செய்ததைப் போன்றதே ஆகும்.
நூல்: திர்மிதீ 2666, இப்னுமாஜா, அபூதாவூத்
நபித்தோழர்கள் வாழ்ந்து கொண்டிருந்த முதல் நூற்றாண்டில் நிகழ்ந்த ஒரு நிகழ்வைப் பாருங்கள்.
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து ஒரு கேள்வி கேட்டார்! அதற்கான பதிலாக ஒரு ஹதீஸை அறிவித்தார்கள்.
உடனே அவர், "குர்ஆனிலிருந்து சொல்லுங்கள்; வேறு எதையும் அறிவிக்காதீர்கள்" என்று கூறினார்.
மற்றொரு அறிவிப்பில் அம்மனிதர் நீங்கள் பல செய்திகளை எங்களுக்கு அறிவிக்கிறீர்கள்; "ஆனால் குர்ஆனில் அதற்கு எந்த அடிப்படையும் காண முடியவில்லையே!" என்று சொன்னதாக வருகிறது.
இதன் இன்னொரு அறிவிப்பில் அவர், "குர்ஆனைத் தவிர வேறு எதையும் எங்களிடம் சொல்லாதீர்கள்" என்று கூறியதாக வருகிறது.
அவருக்கு ஹதீஸ்கள் தொடர்பாக ஏதோ சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் அவரை அருகில் அழைத்து நீ ஒரு முட்டாள் என கோபமாக கூறியதுடன் அவரிடம் சில கேள்விகள் கேட்டார்கள்.
குர்ஆன் போதும் என்கிறாயே அதில் லுஹர் நான்கு ரக்அத்துக்கள் என்றும், அஸர் நான்கு ரக்அத்துக்கள் என்றும், மஃரிப் மூன்று ரக்அத்துக்கள் என்றும் வந்துள்ளதா?.
குர்ஆன் மட்டும் போதும் என்கிறாயே அதில் இறை இல்லம் கஅபாவை ஏழு சுற்று சுற்ற வேண்டும் என்றோ, ஸஃபா மர்வாவில் ஏழு முறை சுற்றி வர வேண்டும் என்றோ கூறப்பட்டுள்ளதா?
குர்ஆன் போதும் என்கிறாயே! அதில் நாற்பது ஆடுகளுக்கு ஒரு ஆடு ஸகாத்தாக வழங்க வேண்டும் என்றோ; இத்தனை ஒட்டகங்களுக்கு இத்தனை ஒட்டகங்கள் வழங்க வேண்டும் என்றோ கூறப்பட்டுள்ளதா?
இவ்வாறு ஒவ்வொன்றாகக் கேட்டுக் கொண்டே வந்தார்கள். அதற்கெல்லாம் அவர் இல்லை, இல்லை என்றே பதிலளித்து வந்தார்.
அப்படியானால் இந்த நடைமுறைகளை எல்லாம் யாரிடம் இருந்து கற்றுக் கொண்டீர்கள்? எங்களிடமிருந்து தானே! நாங்கள் நபி அவர்களிடம் இருந்து எடுத்துக் கொண்டோம்.
அல்லாஹ் கூறுவதை நீங்கள் கேட்கவில்லையா? "இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்; எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ அதை விட்டு நீங்கள் விலகியிருங்கள்" (59:7)
மேலும் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறினார்கள்; மக்களே! நபித்தோழர்களாகிய எங்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்; இல்லையேல் அல்லாஹ்வின் மீதாணையாக வழிதவறி விடுவீர்கள்.
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களின் இந்த விளக்கத்தைக் கேட்டு அம்மனிதர் தமது தவறை உணர்ந்து கொண்டார்.
இமாம் ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அந்த மனிதர் பின்னாளில் முஸ்லிம்களின் சட்ட மேதைகளில் ஒருவராகத் தான் மரணித்தார்.
நூல் : மிஃப்தாஹுல் ஜன்னா, ஜாமிவுல் பயான்,அல் கிஃபாயா, அல் மதகல்.
அபூபக்ர், உமர், உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர் காலங்களில் ஹதீஸ் சார்ந்த குழப்பங்கள் எதுவும் உருவாகவில்லை.
உஸ்மான் (ரலி) அவர்களுடைய இறுதி ஆறு வருடங்களில் அரசியல் சார்ந்த குழப்பங்கள் உருவாகி அதுவே பிற்காலத்தில் அலி (ரலி) அவர்கள் ஆட்சியின் போது ஹதீஸ் சார்ந்த குழப்பங்களாகவும் மாறின.
அலீ (ரலி) அவர்களுக்கு பிறகு சமூகத்தில் மூன்று பிரிவுகள் தோன்றின. 1. அஹ்லுஸ் ஸுன்னா 2. காரிஜியாக்கள் 3. ஷியாக்கள். இந்தப் பிரிவினர் உருவானதில் இருந்தே ஹதீஸ்கள் குறித்த கண்ணோட்டங்கள் மாறத் தொடங்கியது.
அஹ்லுஸ்ஸுன்னாவைப் பொறுத்தவரை அவர்களது பெயருக்கு ஏற்ப ஹதீஸ்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தார்கள். குர்ஆனும் ஹதீஸும் மார்க்கத்தின் இருகண்களாகக் கருதி வருகின்றனர்.
ஹதீஸ்களைக் கண்ணியப்படுத்துவதில் அவர்களுக்கு நிகர் எவருமில்லை. இவர்களே நேர்வழியில் நடக்கும் கூட்டம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால் மற்ற பிரிவினர் ஹதீஸ்கள் குறித்து வேறுபடுகின்றனர்.
மூன்று வகை ஹதீஸ் மறுப்பாளர்கள் :
======================================
ஹதீஸ் மறுப்பாளர்களை மூன்று வகையினராக மவ்லானா தகி உஸ்மானி அவர்கள் பிரித்துள்ளார்கள்.
1. நபி (ஸல்) அவர்களுக்கு குர்ஆனுடைய வஹீ மட்டுமே அருளப்பட்டது; ஹதீஸ் என்று எதுவும் இல்லை. குர்ஆனை விளங்குவதற்கு ஹதீஸ் தேவையில்லை.
2. நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்கள் நபித்தோழர்களுக்கு மட்டுமே ஆதாரமாகும்: நமக்கு அது ஆதாரம் அல்ல.
3. ஹதீஸ்கள் முழு மனித குலத்திற்கும் ஆதாரம் என்றாலும் ஹதீஸ்கள் நமக்கு நம்பகமான முறையில் வந்து சேரவில்லை. குர்ஆன் எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி நமக்கு வந்து சேர்ந்துள்ளது. ஆனால் ஹதீஸ்கள் நமக்கு ஆதாரப்பூர்வமாக வந்து சேரவில்லை. உறுதியற்ற தகவல்களைப் பின்பற்றுவதை குர்ஆன் தடைசெய்கிறது. எனவே நாம் அதைப் பின்பற்றத் தேவையில்லை என ஹதீஸ் குறித்த சந்தேகத்தில் மூன்று வகையினர் இருக்கிறார்கள்.
இந்த மூன்று கண்ணோட்டங் களையும் ஆய்வு செய்யும்போது நமக்குத் தெரிவது, "ஒரு பிரிவினர் ஹதீஸ் என்பதே அறவே இல்லை" என்கின்றனர்; இவர்களை 'முன்கிருல் ஹதீஸ்' என்று ஹதீஸ் துறை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மற்றொரு பிரிவினர் ஹதீஸ்கள் உண்டு; ஆனால் அது ஆதாரமற்றவை! அதனால் இவர்கள் ஹதீஸ்களை மறுக்கிறார்கள்; இவர்களை ஹதீஸ் துறை ஆய்வாளர்கள் 'முன்கிரு ஹுஜ்ஜிய்யதில் ஹதீஸ்' என கூறுகின்றனர்.
மூன்று வகை
மறுப்பாளர்களுக்கான பதில்:
================================
முதல் வகை : மலக்கு இல்லாமல் மனிதராக இருக்கக்கூடிய ஒருவரையே நபியாக அல்லாஹ் தேர்ந்தெடுத்து அனுப்புவதே வழக்கம். (17:93) ஒவ்வொரு மொழி பேசுவோருக்கும் ஒரு நபியை அல்லாஹ் அனுப்பி இருக்கிறான்.(14:4) நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் உலக மக்கள் அனைவருக்கும் நபியாக அனுப்பி இருக்கின்றான். 34:28
எனவே மனிதர்தான் நபியாக வருவார்கள்; அதில் நபி (ஸல்) அவர்கள் அனைத்து மொழி பேசுவோருக்குமான ஒரே நபியாக இருப்பார் என மேற்கண்ட வசனங்களில் தெரிய வருகிறது.
வஹீ மூன்று வகைகளில் அருளப்பட்டு வந்தது. 1. மலக்குகளின் (ஜிப்ரயீல்) வாயிலாக வஹீ அறிவித்தல், 2. அல்லது திரை மறைவாக (மூஸா நபி உரையாடியது போல) உரையாடுதல், 3. அல்லது நபிமார்களின் உள்ளங்களில் ஏற்படுத்துகிற எண்ணங்கள் ஆகிய (மூன்று முறை அல்லாமல்) வேறு எந்த முறையிலும் அல்லாஹ் எந்த மனிதனிடமும் உரையாடுவது கிடையாது. 43: 51
இந்த மூன்றாவது வகை வஹீ குர்ஆன் அல்ல! அது நபிமார்கள் தெரிந்து கொள்வதற்காக இறைவன் பேசிய ஒரு முறையாகும்.
இதற்கு ஆதாரம் சொல்ல வேண்டுமானால் சில தகவல்களைக் கூறலாம். 2:144,155 ஆகிய வசனங்களில் கஃபத்துல்லாஹ் கிப்லாவாக ஆக்கப்பட வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் நினைத்ததாகவும் பின்னர் கிப்லாவாக ஆக்கப்பட்டதாகவும் இந்த வசனம் சொல்கிறது.
நமக்கெல்லாம் தெரியும் நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த முதல் 18 மாதங்கள் பைத்துல் முகத்தஸை முன்னோக்கி தொழுதார்கள்.
பைத்துல் முகத்தஸை முன்னோக்கி தொழுவதற்கு எந்த வஹீ அவர்களுக்கு சட்டமாக்கியது? பைத்துல் முகத்தஸை முன்னோக்கி தொழுங்கள் என்று திருக்குர்ஆனில் எந்த வசனமும் இல்லை.
அதைப்போல் ரமலான் மாத இரவுகளில் உடலுறவு கொள்வது, உறங்கி எழுந்த பிறகு உண்பது, குடிப்பது ஆகியன தடுக்கப்பட்டிருந்தது. இதையும் திருக்குர்ஆனில் எந்த வசனம் சட்டமாக்கி இருந்தது?
பத்ரு போரில் அல்லாஹ் இரண்டு குழுவினரில் ஒரு குழுவினர் உங்களுக்கு கிடைத்து விடுவர் என்று வாக்களித்தான்; இந்த வாக்களிப்பு குறித்து திருக்குர்ஆனில் இல்லை; ஆனால் வாக்களித்தோம் என 8: 7 ஆம் வசனத்தில் கூறுகிறான்.
இதுதான் அந்த மூன்றாவது வகை வஹியைச் சார்ந்தது. மேலும் நபி (ஸல்) அவர்கள் பேசிய அனைத்து பேச்சுகளும் இந்த வகை வஹியைச் சேர்ந்ததாகவே கருதப்படுகிறது.
ஹதீஸ்கள் இல்லாமல் குர்ஆனை விளங்க முடியாது. 9:36 வது வசனத்தில் அல்லாஹ் 12 மாதங்களில் நான்கு மாதங்கள் புனிதமானது என்று சொல்லுகிறான்; அந்த நான்கு மாதங்கள் எது என்பதை திருக்குர்ஆன் விளக்கவில்லை; நபிகள் நாயகம் அவர்களே கூறி இருக்கிறார்கள்.
2:203 ஆம் வசனம்: குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்; இரண்டு நாட்கள் முடிந்ததும் விரைவாக திரும்புபவர் மீது குற்றமில்லை; மேலும் ஒரு நாள் தாமதிப்பவர் மீதும் குற்றமில்லை.
மேற்கண்ட வசனம் என்ன வகையான கருத்தை சொல்ல வருகிறது என்று புரிகிறதா?
மேற்கண்ட வசனம் ஹஜ்ஜுடைய ஆறு நாட்கள் குறித்து பேசுகின்றது. அதை நபி (ஸல்) அவர்கள் தான் விவரித்து சொல்லியிருக்கிறார்கள்.
பல ஆயிரம் வருடங்கள் பல ஆயிரம் முறை திரும்பத் திரும்ப மேற்கண்ட வசனத்தை படித்தாலும் விளங்கிக் கொள்ள இயலாது; மீண்டும் ஒரு முறை நீங்களும் அந்த வசனத்தைப் படித்துப் பாருங்கள்.
இரண்டாம் வகை : நபித்தோழர்களுக்கு மட்டும்தான் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்கள் ஆதாரம்; நமக்கு ஹதீஸ்கள் தேவையில்லை என்பதின் விளக்கம்.
25:1, 34:28, 7:158, ஆகிய வசனங்கள் நபி (ஸல்) அவர்கள் பிறந்ததிலிருந்து உலகம் அழிகிற வரை வாழும் மனிதர்கள் அனைவருக்குமான நபியாகவே அனுப்பப்பட்டுள்ளார் எனக் கூறுகிறது.
நபிகளாரின் விளக்கம் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினருக்கு மட்டுமே தேவை மற்றவர்களுக்கு தேவை இல்லை என்று சொல்வது திருக்குர்ஆனையே மறுப்பதற்கு சமமானது.
குர்ஆன் அருளப்படும் பொழுதே நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களுக்கு விளக்கம் சொல்ல தேவை என்றால், நபியே இல்லாத இந்த காலகட்டத்தில் நபிகளாரின் விளக்கங்கள் (ஹதீஸ்கள்) எந்த அளவிற்கு தேவை உடையதாக இருக்கிறது என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும்.
மூன்றாம் வகை: ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது அல்ல? அதில் சந்தேகங்கள் இருக்கின்றன என்று கூறுகின்றனர்.
இறை நம்பிக்கை கொண்டவர்களே! பாவி ஒருவன் உங்களிடம் ஒரு செய்தியை கூறினால் (அது உண்மையா? பொய்யா என்று) நன்கு ஆய்வு செய்து கொள்ளுங்கள்; (இல்லையானால் அவனுடைய பொய் செய்தியை நம்பி) நீங்கள் அறியாமையினால் ஒரு சமூகத்தாருக்கு தீங்கிழைத்து விட நேரிடும்; பின்னர் நீங்கள் செய்ததற்காக வருத்தப்படுவீர்கள். 49:6
ஒரு தீயவன் ஒரு செய்தியை கூறினால் அதை முழுமையாக நிராகரிக்க வேண்டும் என இந்த வசனம் சொல்லவில்லை; மாறாக அந்த செய்தியை விசாரித்து எது உண்மையோ அதை செயல்படுத்துங்கள் என்று இந்த வசனம் கூறுகிறது.
எனவே ஹதீஸ்களில் எது குறையுள்ளதாக காண்கிறோமோ அதை ஒதுக்கி விட்டு, எதை நிறைவாக காணுகிறோமோ அதை கொண்டு அமல் செய்ய வேண்டும் என்பதை மேற்கண்ட வசனம் கூறுவதாக எடுத்துக் கொள்ளலாம்.
தவ்ராத் இஞ்சீல் போன்ற வேதங்களில் பல்வேறு மாற்றங்களை அந்தந்த மதத்தினர் செய்துவிட்டாலும் அதையும் அல்லாஹ் திருக்குர்ஆனில் தவ்ராத் என்றும் இஞ்சீல் என்றும் தான் சொல்கிறான்; அதில் மாற்றங்கள் நிகழ்ந்து விட்டதால் அதை வேறு வார்த்தைகளில் இறைவன் சொல்லவில்லை. அதுவும் இறைவேதம் தான் என இறைவன் கூறுகிறான்.
எனவே ஹதீஸ்களில் குறைகள் இருந்தாலும் அவை எந்த மாதிரியான குறைகள் என்பதை நமக்கு முன்னோர்கள் வகுத்து தெளிவுபடுத்தி கொடுத்து விட்டார்கள். எனவே ஹதீஸ்களில் சந்தேகம் ஏற்படுவதே மிகப்பெரும் தவறு. ஹதீஸ்களை முழுமையாக ஏற்று நடைமுறைப்படுத்த வேண்டும்.
இந்தியாவிலும் தமிழகத்திலும் ஹதீஸ்களை மறுப்போர் :
==================================
இந்தியாவில் ஹதீஸ்களை மறுப்பவர்கள் கி.பி. 1850 கள் வரை எவரும் இல்லை.
இந்தியாவை முழுமையாக ஆங்கிலேயர் ஆட்சி செய்யத் தொடங்கிய பிறகு தமது பிரித்தாலும் சூழ்ச்சியால் முஸ்லிம்களை பிரிப்பதற்காக மிர்ஸா குலாம் அஹமத் காதியானி என்பவனை நபியாக வாதிடச் செய்து குழப்பத்தை உண்டாக்கி மக்களை பிரித்தான்.
மற்றொருபுறம் சர் சையது அஹ்மது கான் அஸ்லம் ஃபதஹ்பூரி, அப்துல்லாஹ் ஜக்டாலவி போன்ற மவ்லவிகளுக்கு பதவிகளையும், பட்டங்களையும் வழங்கி அஹ்லுல் குர்ஆன் - குர்ஆன் மட்டும் போதும் ஹதீஸ்கள் தேவையில்லை எனும் கொள்கையை மக்களிடையே பரப்பினார்கள்; ஆனால் அது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
தமிழகத்தில் 1980 களுக்கு பிறகு நஜாத் பத்திரிக்கை ஆசிரியர் அபூ அப்துல்லாஹ் என்பவன் முதன் முதலில் இந்த கொள்கையை பேசவும், எழுதவும் தொடங்கினான்.
1990 களுக்குப் பிறகு இந்தக் கொள்கையில் ஈர்க்கப்பட்ட அல்லது விலைப்போன பல மவ்லவிகள் ஹதீஸ் மறுப்பு கொள்கையை பிரச்சாரம் செய்தார்கள். 2000 காலகட்டத்தில் இது உச்சநிலையை அடைத்து 2015 களுக்கு பிறகு ஹதீஸ் மறுப்பு கொள்கை சார்ந்த மவ்லவிகள் பலரும் பெண்கள் விவகாரத்தில் சிக்கி சிதைந்து போனார்கள். அந்தக் கொள்கையும், கொள்கையாளர்களும் இன்று மௌனித்து இருக்கிறார்கள்.
"பொதுவாகவே ஹதீஸ் கலை தொடர்பான ஆய்வுகளை புரிந்து கொள்ளும் அறிவு பொதுமக்களுக்கு இல்லை; எனவே அவர்களுக்கு இதை விவரிக்கக் கூடாது; சில நேரங்களில் இதனால் அவர்கள் ஹதீஸ்களை மொத்தமாக மறுத்து விடும் வாய்ப்பும் ஏற்படும்" என இமாம் அபூதாவூத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
அலி (ரலி) அவர்கள் கூறினார்கள்; மக்கள் எதை தெரிந்து வைத்துள்ளார்களோ அதைப்பற்றி மட்டும் அவர்களிடம் பேசுங்கள்; மக்கள் புரிந்து கொள்ள முடியாத விஷயங்களை விட்டு விடுங்கள்; ஏனெனில் புரிந்து கொள்ள முடியாததை நீங்கள் பேசினால் அவர்கள் மார்க்கத்தையே பொய்யாக்க கூடும்; அதைத்தான் நீங்கள் விரும்புகிறீர்களா!
நூல்: புகாரி, முஸ்லிம்.
மேற்கண்ட கருத்துக்களின் அடிப்படையில் மௌனமாக இருக்காமல் எதை எதையோ பேசி மக்களை பிரித்து விட்டார்கள்; ஆதரவும் எதிர்ப்பும் மூர்க்கத்தனமாக இருந்தது.
எனது மஹல்லாவில் டாக்டர் சகோதரர்கள் என்ற அடைமொழி யோடு வலம் வந்தடாக்டர் பஸ்லுர் ரஹ்மான், டாக்டர் சித்திக் ஜமால் ஆகிய இருவரும் ஆரம்பத்தில் அஹ்ல ஹதீஸ் கூட்டத்தினரோடு சேர்ந்து இருந்தார்கள்.
பின்னர் அதில் இருந்து விலகி வந்து குர்ஆன் மட்டும் போதும் எனும் அஹ்லுல் குர்ஆன் கொள்கையை சார்ந்து அதிலும் 19 பிரிவோடு இணைந்து செயல்பட்டார்கள்; அதிலேயே இருவரும் இருந்த நிலையில் மரணித்து விட்டார்கள். (இவர்கள் இருவரும் எழுத்தாளர் M.R.M. அப்துல் ரஹீம் அவர்களுடைய தம்பி M.R.M. அப்துல் கரீம் வழக்கறிஞர் அவர்களுடைய மகன்கள் ஆவார். வழக்கறிஞர் சீதேவியான நல்ல மனிதர் ஆவார்.)
இன்று தமிழகத்தில் வஹாபிகள் பல நூறு பிரிவினராக பிரிந்து சிதைந்துப் போனார்கள்.
அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் எனும் கொள்கை உடையோர் அன்று முதல் இன்று வரை இருந்து வருகிறார்கள்.
எனவே ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமாக அமைந்து விட்டால் அதை மதிக்க வேண்டும்; போற்ற வேண்டும். நாம் பின்பற்றுகிற இமாமுடைய கருத்துக்கு மாற்றமாக இருந்தாலும் சரி, ஹதீஸை ஏற்க வேண்டும்.
அதை அலட்சியப்படுத்தும் விதமாக எந்த ஒரு சொல்லும் நம்மிடமிருந்து வெளிப்படக் கூடாது. நமது இமாம் ஏன் அதை எடுத்துக்கொள்ள வில்லை அதற்கான விளக்கத்தை தன்னடக்கத்தோடு பணிவோடு நாம் எடுத்துரைக்க வேண்டும். இதுவே ஹதீஸிற்கு நாம் தர வேண்டிய உண்மையான மரியாதையாகும்.
பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதை தடுக்காதீர்கள். இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ், அதை இன்று நாம் கடைப்பிடிப்பதில்லை . இக்காலத்திற்கு அது ஏற்புடையதுமல்ல! பெண்கள் வீட்டில் தொழுவதை வலியுறுத்தும் ஹதீஸ்களை நாம் முன்வைத்து இந்த கருத்தை வலியுறுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும்; அதுதான் ஹதீஸிற்கு நாம் வழங்கும் உண்மையான மரியாதை ஆகும்.
அபூபக்ர் (ரலி) அவர்கள் எழுதி வைத்திருந்த ஹதீஸ்கள் :
============================÷÷÷=====
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது; என் தந்தை நபி (ஸல்) அவர்களது ஹதீஸ்களைத் திரட்டி வைத்திருந்தார்கள். அதில் 500 ஹதீஸ்கள் இருந்தது. ஒரு நாள் காலையில் எழுந்ததும் மகளே! உன்னிடம் இருக்கின்ற ஹதீஸ்களின் திரட்டை எடுத்து வா என்றார்கள். நான் அதை அவர்களிடம் கொண்டுவந்து கொடுத்தேன். நெருப்பைக் கொண்டுவரச் சொல்லி அப்பிரதிகளை நெருப்பிலிட்டு எரித்துவிட்டார்கள்.
1. பிறகு காரணம் கூறினார்கள்; நான் இதில் சில நபிமொழிகளைச் சேகரித்து வைத்துள்ளேன்; ஒருவேளை இது என்னிடம் இருக்கும் நிலையில் நான் மரணித்து விட்டால் அதைப் பார்க்கும் மக்கள் நபித்தோழர்களில் அதிகம் அறிந்தவர்கள் அபூபக்ர் (ரழி) அவர்கள் தான். எனவே அவரது இந்த ஏட்டில் பெறப்படுபவை மட்டுமே ஹதீஸ்கள்; இதில் இடம் பெறாதவை நபிமொழிகளே அல்ல.
ஏனெனில் அப்படி இருந்திருந்தால் அபூபக்ர் (ரழி) அவர்கள் பதிவு செய்திருப்பார்களே! என்று கூறி இந்த ஏட்டில் இடம்பெறாத நபிமொழிகளை மறுத்து விடக்கூடும்; எனவே எரித்து விடுவதே சிறந்தது எனக் கருதி எரித்து விட்டார்கள்.
2. இந்த நூல் என்னிடம் இருக்கும் நிலையில் எனக்கு மரணம் வந்து விடுமோ என நான் அஞ்சுகிறேன்; காரணம் இதில் இடம் பெற்றுள்ள நபிமொழிகள் நபி (ஸல்) அவர்கள் ஒரு நோக்கத்தில் சொல்லியி ருக்கலாம். நான் அதை வேறு கருத்தில் விளங்கி எனது வார்த்தைகளில் எழுதியிருக்கலாம்.
ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் சொன்ன அதே வார்த்தைகளை நான் எழுதவில்லை. மாறாக அவர்கள் சொன்னதை விளங்கி நான் எழுதி வைத்துள்ளேன்;
ஒருவேளை நான் விளங்கிக் கொண்டது தவறாகவும் இருந்திருக்கலாம்; அப்படியிருக்க அது மக்களிடம் சென்றடைவது சரியல்ல; எனவே எரித்து விட்டேன்.
நூல்: தத்கிரதுல் ஹுஃப்பாள்
நபித்தோழர்கள் ஒவ்வொருவரும் ஹதீஸுகளுக்கு இவ்வளவு முக்கியத்துவமும் மரியாதையும் வழங்கி இருக்கிறார்கள்.
இவர்கள் நபி மொழிகளை அடுத்த தலைமுறையினரிடம் எவ்வளவு கவனமாகவும், அக்கறையாகவும் எத்தி வைத்திருப்பார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள்.
அல்லாஹ்வின் மீது இவ்வளவு அச்ச உணர்வு இருப்பவர்களா தவறு செய்வார்கள்?
ஹதீஸ்கள் பாதுகாக்கப்பட்ட விதம் நான்கு:
====================÷÷÷÷÷÷========
1. தஆமல் - நபி அவர்கள் வழங்கிய அத்தனையும் அவர்களின் காலத்திலிருந்து இன்று வரை நடைமுறைப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
2. ஹிஃப்ழு - குர்ஆனைப் போலவே ஹதீஸ்களும் மனனம் செய்யப்பட்டு அதன் மூலமும் பாதுகாக்கப்பட்டது.
3. ரிவாயத் : ஹதீஸ்களை அறிவிப்பதன் வழியாகவும் பாதுகாக்கப்பட்டது.
4. கிதாபத்: எழுத்துப் பூர்வமாகவும் பாதுகாக்கப்பட்டது.
நபி (ஸல்) அவர்கள் பேசிய பேச்சுகள், செய்த செயல்கள் மேற்கண்ட நான்கு முறைகளில் நம்மிடம் பாதுகாப்பாக வந்து சேர்ந்து இருக்கிறது; இதில் எப்படி நாம் சந்தேகம் கொள்ள முடியும்?
நபிகளார் காலத்தில் எழுதப்பட்ட ஹதீஸ் நூல்கள் :
===================================
நபி (ஸல்) அவர்கள் பேசிய பேச்சுகளை சில நபித்தோழர்கள் எழுதி வைத்தார்கள். விவரமான நபி தோழர்கள் எழுதியதை தடுக்கவில்லை.
வேறு சிலர் எழுதியதை நபிகளார் தடுத்து, ஹதீஸும் குர்ஆனும் கலந்து விடுமோ என நான் அஞ்சுகிறேன் எனவே ஹதீஸ்களை எழுதாதீர்கள் எனக் கூறினார்கள்.
அதே சமயம் நபி (ஸல்) அவர்கள் தம்மை சுற்றி இருந்த யூதர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியவர்களோடு செய்து கொண்ட அரசியல் ஒப்பந்தங்கள் அவை எழுதி பாதுகாக்கப்பட்டு இருக்கின்றது. இவற்றை இமாம் இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்கள் 6553 முதல் 6559 வரை ஏழு ஹதீஸ்களை பதிவு செய்து இருக்கிறார்கள்.
நபித்தோழர்களில் சிலர் ஹதீஸ்களை தொகுத்து இருக்கிறார்கள்; அந்த விவரங்களைக் காண்போம்.
1. ஸஹீஃபத்து அம்ரு பின் ஹஸ்ம் : அம்ரு பின் ஹஸ்ம் (ரலி) அவர்கள் எமனுக்கு செல்லும்பொழுது நபி (ஸல் ) அவர்கள் ஜகாத் சட்டங்கள் எழுதிக் கொடுத்து அனுப்பினார்கள்.
2. கிதாப் அஸ்ஸதகாத்: ஜகாத் சம்பந்தமாக நபி (ஸல்) அவர்கள் சொல்ல சொல்ல எழுதப்பட்ட ஒரு நூல்.
3. ஸஹீஃபத்து அலீ (ரலி) / அலீ ரலி அவர்கள் எழுதி வைத்திருந்த ஹதீஸ்கள். 4. அஸ்ஸஹீஃபா அஸ்ஸாதிகா - அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் எழுதி வைத்திருந்த ஹதீஸ்கள். 5. ஸுஹுஃபு அபூ ஹுரைரா (ரலி) 6. ஸஹீஃபத்து ஹம்மாம் - அபூஹுரைரா (ரலி) அவர்களின் மாணவர் ஹம்மாம் பின் முனப்பிஹ் அவர்கள் எழுதி வைத்திருந்த ஹதீஸ் தொகுப்பு.
7. ஸஹீஃபா பஷீர் பின் நஹீக் - பஸராவைச் சேர்ந்த இவர் அபூ ஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து கேட்டு எழுதிய தொகுப்பு. 8. ஸஹீஃபத்து அனஸ் (ரலி) 9. ஸஹீஃபத்து ஜாபீர் (ரலி)
10. ஸஅத் பின் உபாதா ரலி அவர்கள் எழுதி வைத்திருந்த தொகுப்பு. 11. ஸஹீஃபா ஸமூரா பின் ஜுன்துப் ரலி அவர்கள் எழுதி வைத்திருந்த தொகுப்பு. 12. ஸஹீஃபா இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் எழுதி வைத்திருந்த தொகுப்பு.
13. ஸஹீஃபா இப்னு மஸ்ஊத் ( ரலி) அவர்கள் எழுதி வைத்திருந்த தொகுப்பு என நபித் தோழர்களால் ஹதீஸ்கள் எழுதி வைக்கப்பட்டு இருந்ததாக வரலாறு சொல்கிறது.
இரண்டாம் மற்றும் மூன்றாம் நூற்றாண்டுகளில் அனேக அறிஞர் பெருமக்களால் பல ஹதீஸ் நூல்களும் அது சார்ந்த சட்ட நூல்களும் வரலாற்று நூல்களும் எழுதப்பட்டது. ஐந்தாம் நூற்றாண்டின் இடைக்காலம் வரை (ஹிஜ்ரி 450 வரை) ஹதீஸ்கள் நேரடியாக சேகரிக்கும் பணி நடைபெற்று வந்ததாக வரலாறு சொல்கிறது.
பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் நமது முன்னோர்கள் தம் உயிரைக் கொடுத்து ஹதீஸ்களை சேகரித்து, அதன் உண்மை தன்மைகள் குறித்தும் சொல்லிவிட்டு சென்றிருக்க, இன்று இருப்பவர்கள் அவற்றை எப்படி மறுக்கிறார்கள்?
பொதுவாகவே இன்று அரபு மொழி ஹதீஸுகள் அனைத்தும் காலத்திற்கு ஏற்ற முறையில் இன்டர்நெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல நூல்கள் pdf வடிவில் கிடைக்கின்றது.
எந்த மொழியில் வேண்டுமானாலும் இன்டர்நெட்டிலேயே மொழிபெயர்த்து படித்துக் கொள்ளும் வசதிகளும் இன்று வந்துவிட்டது. எனவே இந்த காலகட்டத்தில் ஹதீஸ்கள் குறித்த சந்தேகம் எழுந்தால் உடனே அதனை நிவர்த்தி செய்து கொள்ள முடியும்.
சரியான முறையில் கம்ப்யூட்டர், லேப்டாப், டேப், மொபைல் ஃபோன் ஆகியவற்றை பயன்படுத்தத் தெரிந்தால் ஹதீஸ்கள் குறித்த தெளிவை உடனுக்குடன் பெறலாம்.
தமிழ்நாட்டில் இன்று, முதல் தரமான ஆறு ஹதீஸ் நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது; மேலும் சில நூல்களும் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்து கொண்டிருக்கிறது. நான்கு தஃப்ஸீர்கள் முழுமையாக வெளிவந்திருக்கிறது; மற்றும் பல தஃப்ஸீர்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
எனவே ஹதீஸ்களில் சந்தேகம் உள்ளவர்கள் நபிமொழி நூல்கள், தஃப்ஸீர்கள் உள்ளடக்கிய பத்து நூல்களை முழுமையாக படித்து விட்ட பிறகும் சந்தேகம் இருக்கிறது என்று சொல்வோர் என்னை அணுகுங்கள்; அதற்கான முழுமையான விளக்கங்களை நான் சொல்கிறேன்.
நபியை நேசிப்போம்!
நபிமொழிகளை வாசிப்போம்!!
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
துல்கிஃப்ல் (அலை) அவர்களுக்கு ஏன் துல்கிஃப்ல் என பெயர் சூட்டப்பட்டது?
=================================
حدثنا قتادة ، عن كنانة بن الأخنس قال : سمعت الأشعري يعني أبا موسى رضي الله عنه ، وهو على هذا المنبر يقول : ما كان ذو الكفل نبيا ، ولكن كان رجلا صالحا يصلي كل يوم مائة صلاة ، فتكفل له ذو الكفل من بعده يصلي كل يوم مائة صلاة فسمي ذا الكفل . ورواه ابن جرير من طريق عبد الرزاق ، عن معمر ، عن قتادة قال : قال أبو موسى الأشعري فذكره منقطعا .
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறுவதாவது;
அல் யஸவு (அலை) அவர்கள் ஒவ்வொரு நாளும் நூறு ரக்அத்கள் தொழுது வந்தார்கள். அவருக்குப் பிறகு, அதைத் தொழுவதாக துல்கிஃப்ல் (அலை) அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். அவ்வாறே அவர் ஒவ்வொரு நாளும் நூறு ரக்அத்கள் தொழுது வந்தார். எனவே, அவருக்கு துல்கிஃப்ல் எனப் பெயரிடப்பட்டது".
நூல்: முஸ்னது அப்துற் றஜ்ஜாக்
https://beauties-east.com/%D9%82%D8%B5%D8%A9-%D8%A7%D9%84%D9%86%D8%A8%D9%8A-%D8%B0%D9%88-%D8%A7%D9%84%D9%83%D9%81%D9%84-%D8%B9%D9%84%D9%8A%D9%87-%D8%A7%D9%84%D8%B3%D9%84%D8%A7%D9%85/


Comments
Post a Comment