தஃப்ஸீர்
உலகின் முதல்
முன்மாதிரி மனிதர் நபிகள் நாயகம்
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
لَّقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا
அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது; ( யாருக்கு என்றால் ) அல்லாஹ்வையும், மறுமை நாளையும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்வோருக்கு தான்.
(அல்குர்ஆன் 33:21)
உஸ்வத் - முன்மாதிரி என்றால், "ஒருவரது செயல்களையும், நடவடிக்கைகளையும் பார்த்து அவரை அப்படியே பின்பற்றி நடப்பது" என்று பொருள்.
33:21 வது வசனம் "அதீஉல்லாஹ வ அதிஉ ரஸூல - அல்லாஹ்விற்கும் அவன் தூதருக்கும் கட்டுப்படுங்கள்" ( 3 : 32) எனும் வசனத்தின் மறு பிரதிபலிப்புதான் என்று சொன்னால் மிகையல்ல!
ஏனென்றால் அல்லாஹ்வின் தூதர் இடத்தில், நீங்கள் பின்பற்றி நடக்க வேண்டிய பல அழகிய முன்மாதிரிமிக்க நற் செயல்கள் இருக்கின்றது நீங்கள் பின்பற்றுங்கள்" என்பதுதான் 33:21 வது வசனத்தின் பொருள்.
உஸ்வதுன் ஹஸனா என்பதின் பொருள், "நீர் மகத்தான நற் நற்குணத்தில் இருக்கின்றீர் ;68:4" என்பதைத் தான் குறிப்பிடுகிறது என அநேக விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள்.
மனித இனத்தில் எவருக்கும் வாய்க்கப்படாத நற்குணம் நபி (ஸல்) அவர்களிடத்தில் இருந்தது; அந்த குணம் குடிகொண்டிருந்த கோமான் நபி (ஸல்) அவர்களைப் பார்த்துதான் அல்லாஹ் "உஸ்வதுன் ஹஸனா " என சொல்கிறான்.
நபி (ஸல்) அவர்களுக்கு முழுமையாக கட்டுப்பட்டு நடப்பதும், அவர்களுக்கு எந்த வகையிலும் மாற்றம் செய்யாமல் இருப்பதுமே இதன் பொருள் என திர்மிதீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
أُسْوَةٌ حَسَنَةٌ எனும் சொல் திருக்குர்ஆனில் மூன்று இடங்களில் இடம்பெற்றுள்ளது. 33 : 21 / 60 : 4,6/
33 : 21 ஆம் வசனம் நபி (ஸல்) அவர்களின் வாழ்வியலை பேசுகிறது. 60 : 4,6 ஆகிய இரண்டு வசனங்களும் இப்ராஹீம் (அலை) அவர்களையும் அவரோடு இருந்த முஸ்லிம்களின் வாழ்க்கை முறையையும் குறித்துப் பேசுகிறது.
இன்றைய, "21 ஆம் நூற்றாண்டில் வாழ்வோரும் நபி (ஸல்) அவர்கள் மற்றும் இப்ராஹீம் (அலை) அவர்கள் மற்றும் இப்ராஹீம் (அலை) அவர்களோடு வாழ்ந்த முஸ்லிம்கள் ஆகிய மூவரை நீங்கள் கண்மூடித்தனமாக பின்பற்றி நடங்கள்; அவர்களின் வாழ்வியல் உங்களுக்கு அழகிய வழிகாட்டுதலை தரும்" என அல்லாஹ் சாட்சி அளிக்கிறான்.
நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களையும் இணைத்துக் கொண்டு, "என் தோழர்களில் எவரை நீங்கள் பின்பற்றினாலும் நேர்வழி அடைவீர்கள்" ( திர்மிதீ ) என்று சொல்லி அவர்களையும் உஸ்வத்துன் ஹசனா எனும் உயரிய சொல்லில் இணைத்திருக்கிறார்கள்.
நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் மக்கமா நகரத்தை பாதுகாக்கப்பட்ட நகரமாகவும், அருள் வளம் நிறைந்த நகரமாகவும் ஆகுவதற்கு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். அவ்வாறே அல்லாஹ்வும் ஏற்றுக் கொண்டான்.
நபி (ஸல்) அவர்கள் மதீனாவை நோய் நொடியில் இருந்து பாதுகாக்கப்பட்ட நகரமாகவும், மக்காவை விட அதிக அருள் வளம் நிறைந்த நகரமாகவும் ஆகுவதற்கு பிரார்த்தனை செய்தார்கள். அல்லாஹ் அதனையும் ஏற்றுக் கொண்டான்.
அந்த வரிசையில் தான் இப்ராஹீம் நபியும் அவரோடு இருந்தவர்களும் அழகிய முன்மாதிரியாக இருப்பது போன்று நபி (ஸல்) அவர்களும் அவரோடு வாழ்ந்த தோழர்களும் அழகிய முன்மாதிரி என்னும் சொல்லாடலுக்குள் கட்டுப்படுவார்கள்.
நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் மற்றும் இவ்விருவரை பின்பற்றியவர்களின் வாழ்வியலை நாம் பின்பற்றி வாழ பொது அனுமதி இருக்கிறது .
ஆனால் நம்மிடையே நபி இப்ராஹிம் (அலை) மற்றும் அவரைப் பின் துயர்ந்தவர்களின் ஆதாரப்பூர்வமான வரலாறு இல்லை.
எனவே ஆதாரப்பூர்வமான வரலாறு உள்ள நபி (ஸல்) அவர்களையும் அவர்களின் தோழர்களையும் நாம் பின்பற்றி நடக்க கடமைப்பட்டுள்ளோம்.
அதைப்போல் மற்றொரு கருத்தையும் நாம் இங்கு நினைவு கூர வேண்டும்.
ஸூரதுல் அஹ்ஸாப் அருளப்பட்ட வரிசையில் 90 வது சூராவாகும். இந்த சூராவில் தான் 33 : 21 வசனம் அமையப் பெற்றுள்ளது. ஸூரதுல் மும்தஹினா அருளப்பட்ட வரிசையில் 91 வது சூராவாகும். இந்த சூராவில் தான் 60 : 4 ,6 ஆகிய வசனங்கள் இடம் பெற்றுள்ளது.
இப்ராஹிம் (அலை) அவர்களையும் அவருடைய தோழர்களையும் பின்பற்றுங்கள் என்று அல்லாஹ் சொல்லி இருந்தாலும் அல்லாஹ் திருக்குர்ஆன் வழியாக முதன் முதலில் நபி (ஸல்) அவர்களைத்தான் "உஸ்வத்துன் ஹசனா - அழகிய முன்மாதிரி இருக்கிறது அவரை நீங்கள் பின்பற்றுங்கள்" என்று சொல்லி இருக்கிறான்.
அதற்குப் பிறகுதான் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் குறித்தும் அவருடைய தோழர்கள் குறித்தும் சொல்லி இருக்கிறான் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
எனவே இறைவனால் உஸ்வத்துன் ஹசனா என முதன் முதலில் முன்மொழியப் பட்டவர் நபி (ஸல்) அவர்கள் ஆவார்கள். அவர்களை கண்மூடித்தனமாக நாம் பின்பற்றலாம்.
மேலும், "குர்ஆன் மட்டும் போதும் நபிகளாரின் வழிகாட்டுதல் தேவை இல்லை, நபி மொழிகளை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை" என்று சிலர் சொல்லுகிறார்கள். அவர்கள் 33 : 21 வது வசனத்தை கவனிக்க வேண்டும்.
"நபியிடத்தில் அழகிய முன்மாதிரிகள் இருக்கின்றது எனவே இவறை நீங்கள் பின்பற்றி நடங்கள்" என்று இந்த வசனம் சொல்வதால், குர்ஆனை மட்டும் பின்பற்றுவோர் இந்த வசனத்தை புறக்கணித்தவர்களாக ஆகிவிடுகிறார்கள் என்பதை அவர்கள் கவனிக்க தவறி விட்டார்கள்.
மேலும், மறுமை நாளை நம்புவோருக்கும் அல்லாஹ்வை நினைவு கூருவோருக்கும் நபியின் வாழ்க்கையில் அழகிய முன்மாதிரி இருக்கிறது என்றும் இந்த வசனம் பேசுகிறது.
அப்படி என்றால் மறுமை நாளை நம்பாதவருக்கும், ஏக இறைவனான அல்லாஹ்வை நினைக்காதவர்களுக்கும் நபி (ஸல்) அவர்கள் அழகிய முன்மாதிரி இல்லையா? என்ற ஒரு கேள்வியை இந்த வசனம் உருவாக்கித் தருகிறது.
ஆமாம்! உண்மைதான்!! அல்லாஹுவையும் நபி (ஸல்) அவர்களையும் ஏற்றுக் கொண்டவர்கள் தான் நபியின் வாழ்வை பின்பற்றுவார்கள். இஸ்லாத்தை ஏற்காதவர்கள், நபியை உளப்பூர்வமாக ஒப்புக் கொள்ளாதவர்கள் நபியின் வாழ்வை எப்படி உண்மைப்படுத்துவார்கள்?
அதைப்போல், ஒருவர் அல்லாஹ்வை அதிகமாக நினைக்கும் போது அவர் ரசூலின் பக்கம் தேவையாகுவார்.
ஏனென்றால் அல்லாஹ்வை எப்படி நினைவு கூருவது என்று ரசூல் தான் வழிகாட்டி இருக்கிறார்.
எனவே ரசூலின் வழிகாட்டுதலை பின்பற்றுவதற்காக ரசூல் குறித்து தொடர் ஆய்வில் ஈடுபடுவோர் தொடர்ந்து ரசூலின் வழியில் பயணிப்பார். ரசூலை நோக்கிய அவரது பயணத்தின் முடிவு மிக மிகச் சிறந்ததாகவே இருக்கும்.
'குர்ஆன்' எழுத்து வடிவிலும், புத்தக வடிவிலும் நம்மிடையே இருக்கின்றது. இதே குர்ஆன் நடமாடும் மனித வடிவில் காண வேண்டுமானால் யாரைக் காண்பது என்பதற்கு பதிலாகத் தான் அல்லாஹுத்தஆலா இந்த வசனத்தை அருளி, நபிகள் நாயகத்தை நமக்கு முன்னிலைப்படுத்தி இருக்கின்றான்.
நபி (ஸல்) அவர்களை நாம் எந்த அளவிற்கு பின்பற்றுகிறோமோ அந்த அளவிற்கு அல்லாஹ்வின் பொருத்தம் நம் மீது உண்டாகும்.
நபி (ஸல்) அவர்கள் அழகிய முன்மாதிரிமிக்க நபராக இருப்பது போல் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் ஒவ்வொரு இன மக்களும் அழகிய முன்மாதிரிமிக்க மனிதர்களாக வாழ வேண்டும் என்பதுதான் இந்த வசனத்தின் உண்மையான நோக்கம்.
இவ்வாறு ஒவ்வொரு பகுதியிலும் முன்மாதிரிமிக்க பலர் வாழும் போது அவர்களைப் பார்த்து மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை ஏற்பதற்கும் அவர்கள் அழகிய வாழ்வியலை தேர்ந்தெடுப்பதற்கும் இது காரணமாக அமையும்.
எனவே அத்தகைய முன்மாதிரிமிக்க மாமனிதரின் வாழ்வியலை வாழ்ந்து காட்ட வாருங்கள் என அல்லாஹ் வரவேற்கின்றான்.
அருளப்பட்ட பின்னணி :
======°°°°°°°°°°==========
அஹ்ஸாப் - அகல் யுத்தம் நடைபெற்ற நேரத்தில் இந்த வசனம் அருளப்பட்டது. பத்தாயிரத்திற்கும் அதிகமான எதிரிகள் மதீனாவைச் சுற்றி முற்றுகை இட்டிருந்தபோது முஸ்லிம்கள் கலக்கத்தோடும், நடுக்கத்தோடும், பதற்றத்தோடும் இருந்தார்கள்.
ஆனால் நபி (ஸல்) அவர்கள் பொறுமையாகவும், விழிப்புணர்வோடும், எதிரிகளைக் கண்காணித்த வண்ணமும் அமைதியாக இருந்தார்கள்.
பதட்டத்தோடும் பரிதவிப்போடும் இருந்த முஸ்லிம்கள் பெருமானார் (ஸல்) அவர்கள் அமைதியாக இருப்பது போன்று முஸ்லிம்களும் அமைதியாக இருக்க வேண்டும் என்று விரும்பிய அல்லாஹ், " நபிகளாரின் வாழ்வில் அழகிய முன்மாதிரி இருக்கிறது அவரைப் போன்று நீங்களும் இருங்கள்" என்று இந்த வசனத்தை அருளினான்.
உஹது யுத்தத்தில் நபி (ஸல்) அவர்களின் பல் உடைந்த போதும், தலையில் அடிபட்டு ரத்தம் வழிந்த போதும் மற்றும் சொல்ல முடியாத பல துன்பங்கள் நேர்ந்த போதும் நபி (ஸல்) அவர்கள் போர்க்களத்தில் இருந்து புறமுதுகு காட்டாமல் அதே இடத்தில் நின்று யுத்தத்தை எதிர் கொண்டார்கள்.
அதுபோலவே இப்பொழுது அல் அஹ்ஸாப் போரிலும் நபி (ஸல்) அவர்கள் உறுதியாக நிற்கிறார்கள். அவ்வாறே ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயமும் நபிகளாரை பின்பற்றி போரில் இருந்து பின் வாங்காமல் உறுதியாக நின்று நபிகள் நாயகத்தின் கைகளை வலுப்படுத்த வேண்டும் என அல்லாஹ் இந்த வசனத்தின் மூலம் ஸஹாபாக்களிடம் கூறுகிறான்.
உலக வரலாற்றை புரட்டிப் போட்ட உத்தமரின் முன்மாதிரி :
================================
மூடப்பழக்க வழக்கங்களில் மூழ்கித் திளைத்த அரபியர்கள், எவருடைய பேச்சையும் கேட்க முன்வராத மூடர்கள், தாம் வணங்கி வந்த வழிபாட்டு முறையை முற்றிலும் துறந்து, மற்றொருவரின் சொல்லை கேட்டு அவரைப் பின்பற்றி, அவர் கூறிய வழிபாட்டு முறையையும், வாழ்வியல் முறையையும் தமதாக்கி இருக்கிறார்கள் என்றால் அந்த உத்தம நபியின் வாழ்க்கை முறை எவ்வளவு முன்மாதிரியாக இருந்திருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.
இதற்குக் காரணம் நபி (ஸல்) அவர்களின் சிறு பருவம் முதல் நடந்து கொண்ட விதம் என்று சொல்லலாம்.
நபி (ஸல்) அவர்கள் இறைத் தூதராக ஆகுவதற்கு முன்பு அந்த மக்களோடு வாழ்ந்த நாற்பது வருட காலத்தில் அவர்கள் தங்களது உயரிய நற்குணத்தின் வாயிலாக பெற்றிருந்த நம்பிக்கையும், நற்பேரும்தான் அந்த மக்களை இஸ்லாத்தின் பால் வசீகரித்தது என்றால் அது மிகையாகாது.
நபி (ஸல்) அவர்கள் சிறு வயதிலிருந்தே ‘அல் அமீன், அஸ்ஸாதிக்' என்ற சிறப்புப் பெயர்களால் நம்பிக்கையாளர், உண்மையாளர் என்று சமுகத்தினரால் அடையாளம் காணப்பட்டவர் ஆவார்.
மேலும் முன்மாதிரி என்றால் ஒருவர், தான் வாழும் காலத்தில் இருந்த கலை, இலக்கியம், தலைமைத்துவம் போன்ற அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கிய ஒருவரைப் பார்த்து தான், "முன்மாதிரி மிக்க மனிதர்" என சொல்ல இயலும்.
அந்த வகையில் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்திலும், இனி உலகம் உள்ளளவும் நபி (ஸல்) அவர்களே அனைத்துத் துறையினருக்கும் வழிகாட்டும் ஒளி விளக்காக முன்மாதிரி மிக்க மா மனிதராக அன்றே வாழ்ந்து இருக்கிறார்கள் என்பதே உண்மை!
இவ்வளவு காலம் கடந்த பின்பும் கூட அவர்களது முன்மாதிரியானது அதனை அறியும் மக்களிடையே பெரும் தாக்கத்தையும், வாழ்வியல் புரட்சியையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பது அதிசயத்திலும் அதிசயம்.
ஒட்டுமொத்த மனித இனத்திலும் தான் அனுப்பிய நபி குறித்து அல்லாஹ் அறிமுகப்படுத்தும் போது, "அவர் ஓர் அழகிய முன்மாதிரி" என்று சொல்லி அறிமுகப்படுத்துகிறான் என்றால் அல்லாஹுவின் நற்சான்றிதழை பெற்ற மாமனிதரின் மேன்மை குறித்து நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வுலகில் வாழ்ந்த எந்த தலைவருடையதும் அல்லது எந்த மதகுருமார்களுடையதும் அல்லது வரலாற்று நாயகர்களுடையதும் வரலாறு இவ்வளவு நுணுக்கமாக மற்றும் ஆதார பூர்வமாக பதிவு செய்யப்பட்டதில்லை.
மனித வாழ்வோடு சம்பந்தப்பட்ட எல்லா துறைகளுக்கும் நபி (ஸல்) அவர்களுடைய வாழ்விலிருந்து அழகிய முன்மாதிரியைக் காணமுடிகிறது.
அவர் வீட்டுக்கு உள்ளே வாழ்ந்த வாழ்க்கையும், அவர் வீட்டுக்கு வெளியே வாழ்ந்த வாழ்க்கையும் என அனைத்துமே இங்கு பதிவாகி இருக்கின்றது.
அவர் கூறிய வார்த்தைகள், அவர் செய்த செயல்கள் , பிறர் செய்யக் கண்டு அவர் அங்கீகரித்த செயல்கள் என அனைத்தும் இன்று இஸ்லாமிய சட்டங்களுக்கு அடிப்படையாகி இருக்கின்றது.
புகழ்மிக்க மனிதர்கள் அனைவரும் பேரரசுகளை நிறுவினார்கள். ஆயுதங்களை உருவாக்கினார்கள். சட்டங்களை இயற்றினார்கள். இவை, அவர்கள் வாழும் காலத்திலேயே சிதைந்து விழுந்ததை கண்கூடாகக் கண்டார்கள்.
ஆனால் நபிகள் நாயகம் அவர்கள், அன்று மூன்றில் ஒரு பகுதி நிலப்பரப்பில் வாழ்ந்து வந்த கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டார்கள்.
வென்றெடுக்க முடியாத வழிப்பாட்டு தலங்களையும், சமய நெறிகளையும், பல்வேறு கருத்துகளையும், கொள்கைகளையும், நம்பிக்கைகளையும், மனித மனங்களையும் ஈர்த்து, அவற்றில் தமது கருத்துகளைப் பதித்தார்கள்.
மக்காவில் இருக்கும் போது எவ்வித ஆடம்பரமற்ற சாதாரண வாழ்க்கையை வாழ்ந்தார்களோ, அதே போன்று மதீனாவிலும் தாங்கள் அரசராய், எல்லாவித பொருள் வசதி, பணியாள் வசதி, இருப்பிட வசதி போன்றன இருந்தும் எளிய வாழ்க்கை முறையை மேற்கொண்டார்கள்.
Is the role model super man? -
ரோல் மாடல் சூப்பர் மேனா?
=================================
நமது வீட்டுப் பிள்ளைகளை நாம் சரியாக வளர்ப்பதற்கு முன்னுதாரணமாக காட்டத் தகுதியானவர் நபிகள் நாயகம் அவர்கள் மட்டுமே!.
பொதுவாகவே ஒன்றைப் பார்த்து தான் மற்றொன்றை உருவாக்க முடியும். ஒன்றைக் காட்டி தான் இது போன்று எனக்கு வேண்டும் என சொல்ல முடியும்.
அந்த வகையில் தான் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்தது போன்று நமது பிள்ளைகளும் வாழ வேண்டும் என நாம் ஆசைப்படுகிறோம்.
ஆனால் இன்று உலகம் முழுவதும் உள்ள வியாபாரிகள் சக்திமான், ஸ்பைடர் மேன் , சூப்பர் மேன், அக்வா மேன், பேட்மேன், அயன் மேன் , பிளாக் பேந்தர், கேப்டன் அமெரிக்கா, ஹல்க், தார், அவெஞ்சர்ஸ் டீம் போன்ற கார்ட்டூன் வழி கதாநாயகர்களை உருவாக்கி, "இவர்களை நீங்கள் பின்பற்றுங்கள்; நீங்கள் நேர்வழி அடைவீர்" என்பது போன்று தொலைக்காட்சித் தொடர்களையும், சினிமாக்களையும், பிளே ஸ்டோரில் லட்சக்கணக்கான கேம் விளையாட்டுகளையும் எடுத்து நமது இல்லத்திற்கே கொண்டு வந்து சேர்க்கிறார்கள்.
இதனால் நமது பிள்ளைகளும், இளைஞர்களும், இளைஞிகளும் நாம் எவ்வாறான வாழ்வை வாழ்வது என்பதில் பெரும் தடுமாற்றத்தில் இருக்கிறார்கள்.
அதே நேரம் இந்த சூப்பர் மேன் உருவாக்கத்தில் மற்றொரு கருத்தும் மறைந்திருக்கிறது. மேற்சொல்லப்பட்ட அத்தனை 'மேன்'களும் மக்களை காப்பது போலவும், உலகத்தை காப்பது போலவும் வடிவமைத்திருக்கிறார்கள்.
இவர்களைப் போன்று நீங்கள் இருக்க வேண்டும் என்றுதான் அந்த கதாபாத்திரங்களை உருவாக்கியவர்கள் சொல்ல வருகிறார்கள்.
சமூகம் மிகப்பெரிய அளவில் சீரழிந்து வரும் வேளையில் இவ்வாறான கதாபாத்திரங்களை மனிதர்கள் யோசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி இவ்வாறான கதாபாத்திரங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள் .
ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே அனைத்து நற்குணங்களையும், நற்செயல்களையும் ஒருங்கே பெற்ற உண்மை நாயகரான அண்ணல் நபி (ஸல்) அவர்களை நமக்கு அல்லாஹ் வழங்கி இருக்கின்றான்.
எனவே உங்கள் வீட்டுப் பிள்ளைகள் நல்லவர்களாக, உலகம் போற்றும் உத்தமர்களாக வளர வேண்டுமானால் நபிகள் நாயகம் குறித்த நற்செய்திகளை, வரலாறுகளை, சம்பவங்களை உங்களின் எல்லா சந்தர்ப்பங்களிலும் உங்கள் பிள்ளைகளுக்கு நினைவு படுத்திக் கொண்டே இருங்கள்.
அவர்களின் காதுகளுக்கும், கண்களுக்கும் சென்றடையும் வகையில் புத்தகங்களாக, பென்டிரைவுகளாக, புகைப்படங்களாக, வீடியோ காட்சிகளாக கண்ணுக்கு முன்னால் வையுங்கள்.
நீங்களும் கூட அதாவது பெற்றோரும், தாத்தா பாட்டிகளும் பிள்ளைகள் வீட்டில் இருக்கும்போது நபிகள் நாயகம் குறித்தும், இஸ்லாம் குறித்தும் பேசுங்கள்; படியுங்கள்; காட்சி ஊடகங்களில் பாருங்கள்.
அதன் காரணமாக உங்கள் பிள்ளைகள் வாழ்வின் எல்லா சந்தர்ப்பங்களிலும் நபிகள் நாயகத்தை பின்பற்றி வாழ்வதற்கு தன்னை தயார் படுத்திக் கொள்வார்கள்.
உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளாத வரை, உங்கள் பிள்ளைகளை எந்த வகையிலும் நீங்கள் மாற்றிட இயலாது.
அறிவு ஜீவிகள்
போர்வையில் மூடர்கள் :
============÷=÷=÷÷÷÷====
சிலுவைப் போர்கள் நடைபெற்று வந்த காலத்தில் வாழ்ந்த உலக அறிஞர்கள் அனைவரும் நபிகள் நாயகம் குறித்து தவறாகவே பேசியும் எழுதியும் வந்தார்கள். அந்த வரலாறு இன்று நம்மையும் வந்தடைந்து இருப்பதை நாம் கண்டிருப்போம்.
சிலுவை யுத்தங்கள் முடிவுற்ற பிறகு தோன்றிய அறிஞர்கள் அனைவரும் நபிகள் நாயகம் குறித்து தமது எழுத்துக்களிலும், பேச்சுக்களிலும் நல்லதையே சொல்லி வந்தார்கள். அதையும் இன்று நாம் அறிவோம்.
ஆனால் இந்த நிமிடம் வரை உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அறிஞர் பெருமக்களில் யாரும் நபிகள் நாயகம் அவர்கள் சொல்லி வந்த உண்மையான இறை நம்பிக்கையையும், அவரின் வாழ்வியலையும் முழுமையாகப் பின்பற்றி வாழ்ந்திட எவரும் முன்வரவில்லை. அதாவது இஸ்லாத்தில் இணையவில்லை. இது அவர்களின் அறியாமை என்று சொல்வதா?
அல்லது நபிகள் நாயகத்தை புகழ்வதின் மூலம் தாமும் புகழை பெறலாம் என எண்ணியதா?
என்று நமக்குள் அனேக கேள்விக்குறிகள் இருந்தாலும் அதையும் அல்லாஹ் விபரமாகவே தன் திருமறையில் கூறுகிறான்.
இறுதி நாளை உறுதியாக நம்புவோருக்கு இறுதித் தூதரிடம் முன்மாதிரி இருக்கிறது என்று (33 : 21 ) இந்த வசனம் கூறுகிறது.
எனவே அறிஞர்கள் என்று தம்மை சொல்லிக் கொண்டும், ஒரு மதத்துக்குள் இருந்து கொண்டும் பேசுகிற இவர்கள் மறுமை நாளை நம்பாதவர்களாக இருக்கிறார்கள்.
மேலும் தமது கிறிஸ்தவ, அல்லது யூத மதத்தின் அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்றான மறுமையை கூட நம்பாமல் தம் மதத்திற்கு துரோகம் செய்திருகிறார்கள் என்பதே உண்மை.
உலக மக்களில் அந்தந்த காலத்தில் வாழ்ந்த அனைவருக்கும், நிகழ்காலத்தில் வாழ்கிற மக்களுக்கும், உலகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களுக்கும், ஒரே மாதிரியான வழிகாட்டுதலை வகுத்துத் தந்த ஒரே மாமனிதர் நபிகள் நாயகம் அவர்கள், இறைவனின் இறுதி இறை தூதர் என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனது ஏனோ!
நாம் நபியை எவ்வளவு பின்பற்றி இருக்கின்றோம்? :
===========================
நபி (ஸல்) அவர்கள் பிறந்த ரபியுல் அவ்வல் மாதம் ஒவ்வொரு வருடமும் நம்மை வந்தடைகிறது.
நபி (ஸல்) அவர்களை நபி தோழர்கள் 23 ஆண்டு காலங்களாக கொஞ்சம் கொஞ்சமாக பின்பற்றியது போன்று நாமும் கூட நபி (ஸல்) அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக பின்பற்றி வர வேண்டும்.
அந்த வகையில் நாம் இப்பொழுது இந்த ஆண்டு நபி (ஸல்) அவர்களை எந்த அளவிற்கு பின்பற்றி இருக்கிறோம் என்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
நபித் தோழர்கள் 23 ஆண்டுகளில் பின்பற்றியதை நாம் 70 ஆண்டுகளிலோ, 80 ஆண்டுகளிலோ நபிகளாரை முழுமையாக பின்பற்றிட வேண்டும் என்பதை நினைவூட்டவே ஒவ்வொரு வருடமும் ரபியுல் அவ்வல் நம்மை வந்தடைகிறது.
இப்பொழுது உங்களுக்கு வயது என்ன? நீங்கள் நபி (ஸல்) அவர்களை எவ்வளவு தூரம் பின்பற்றி இருக்கிறீர்கள் என்பதை யோசித்துப் பாருங்கள்.
அல் ஹகீமுத் திர்மிதீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்; நான் நிலத்தில் விழுந்த பெருமழை.
மழை நீர் செடி கொடிகளைச் செழித்து வளர வைக்கிறது.
நீரற்ற பூமி வறண்டு விடுகிறது.
தூதை ஏற்பது மழை பெறும் பூமியை போன்றது.
தூதை மறுப்பது மழையற்ற வறண்ட பூமியை போன்றது.
அழகிய தூதரில் உஸ்வத் (அழகிய முன் மாதிரி) இருக்கிறது என்பது நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதும் அவர்களின் வழிகாட்டலில் இருந்து மாறாதிருப்பதும் என்பதே பொருள்.
எனவே மழையை ஏற்றுக்கொள்ளும் பூமியை போன்று நபியை ஏற்றுக்கொள்ளும் மனநிலை உடையவராக நாம் ஆகிவிட வேண்டும்.
மழை நீரை பருகிய மண் மகசூலை தருகிறது.
மா நபியை உள்வாங்கிக் கொண்டவர், தானும் இன்புற்று பிறவையும் இன்புறச் செய்வார்.
இன்றைய உலகில் தவறான வழிகளில் சென்று பல தோல்விகளையும், மீள முடியாத பிரச்சனைகளையும் அனுபவித்த பிறகு தான் சிலர் தமக்கு ஒரு ரோல் மாடல் - முன்மாதிரிமிக்க ஒரு மனிதரின் அனுபவங்கள், அவர் வெற்றி பெற்ற ரகசியங்கள் தேவை என தேடுகிறார்கள்.
"எவருடைய பேச்சையும் நான் கேட்க மாட்டேன், எவருடைய Advice - அறிவுரையும் எனக்கு தேவையில்லை, எனக்கென யாரும் Role Model- முன்மாதிரி இல்லை, நானே பெரிய அறிவாளி தான், எனக்கும் சொந்த புத்தி இருக்கிறது" என்று சொன்ன பலர் நெருக்கடியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.
அவர்களில் சிலர் அன்றாட பொலப்பு ஓட்டுவதற்கும் சிரமப்படுகிறார்கள். நோய் நொடிகளுக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாகி புகைப்பழக்கம், போதைப் பழக்கம் போன்ற தவறான பழக்கங்களுக்கு ஆளாகி தன்னையும் சிரமத்தில் ஆழ்த்தி, பிறரையும் சிரமத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
தீய பழக்க வழக்கங்கள், தீய பேச்சுகள், தீய சிந்தனைகள், தீய பார்வைகள், தீய நடத்தைகள் உள்ளவர்களை Role Model - முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு செயல்பட்ட அனைவரையும் ஒரே இடத்தில் பார்க்க விரும்பினால் சிறைச்சாலைக்குச் சென்று பார்க்கலாம்.
படித்து உயர் பதவியில் இருப்பவர்கள், பொருளாதாரத்தில் முன்னேறி இருப்பவர்கள், மக்களால் புகழப்படும் மாமனிதர்கள் போன்ற அனைவருக்கும் கண்டிப்பாக ஒரு Role Model - முன்மாதிரிமிக்க ஒரு மனிதர் இருந்திருப்பார்.
அந்த ரோல் மாடலையும், அவரைப் பார்த்து வாழ்வில் வெற்றி பெற்றவர்களையும் நாம் நம் அன்றாட வாழ்வில் ஆங்காங்கே ஏசி அறைகளில் காணலாம்.
ஒரு நல்ல அரசியல்வாதி, ஒரு நல்ல அரசு உயர் அதிகாரி போல் ஆக வேண்டும் என நினைக்கும் ஒருவர் அதற்கான வழிகளை பின்பற்றத் தொடங்கினால் அவர் அந்த அதிகாரியாகவோ, அரசியல்வாதியாகவோ ஆகும் வரை தன் முயற்சியில் பின்வாங்க கூடாது.
பின்வாங்கும் மனநிலை உடையவர்களாக இருந்தால் அந்த காரியத்தில் இறங்கவே கூடாது.
அல்லது தன் திறமைக்கு எது செய்தால் சாத்தியமாகும் என தீர்க்கமாக ஆலோசித்து , அதில் ஒரு துறையை தேர்ந்தெடுத்து, அந்தத் துறை சார்ந்தவர்களில் யார் ரோல் மாடல் - முன்மாதிரி மிக்கவராக இருக்கிறாரோ அவரை பின்துயர்ந்து வாழ்வில் வெற்றி பெறுவது அவசியம்.
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
இலக்கணம் மாறாமல்
இறைவன் திட்டினான்
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷
إِنَّ شَانِئَكَ هُوَ الأبْتَرُ
நபியே! உங்களை வெறுப்பவனே சந்ததியற்றவன் ....
திருக்குர்ஆனுடைய அத்தியாயங்களில் ஆகச்சிறிய அத்தியாயம் அல் கவ்ஸர். இதில் மூன்று வசனங்கள் இருக்கின்றது. மூன்று வசனங்களும் மூன்று வகையான கருத்துக்களைப் பேசுகிறது.
மூன்றாவது வசனம் தான் இது! இந்த வசனத்தின் விளக்கங்களை விரிவாகக் காண்போம். இந்த வசனம் ஆஸ் பின் வாயில் என்பவன் குறித்தும் மற்றும் சிலர் குறித்தும் அருளப்பட்டுள்ளது.
பின் வாயில் என்பவன் மிகச்சிறந்த அறிவாளிகளில் ஒருவன். யாருக்கும் தோன்றிடாத சிந்தனைகளுக்குச் சொந்தக்காரன். இவன் கேட்ட கேள்விகளுக்கு திருக்குர்ஆனுடைய பல வசனங்கள் இருக்கின்றன.
அறிவாளியாக இருந்ததனாலதானோ என்னவோ இவனுக்கு இஸ்லாம் ஆகும் பாக்கியம் கிடைக்கவில்லை. அபுல் ஹிகம் எனும் அபூலஹபைப் போல! ஷைத்தானைப் போல!
நபி (ஸல்) அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் விவரம்:
அல்-காசிம் பின் முஹம்மது 598–601
ஜைனப் பின்த் முஹம்மது 599–629
ருகையா பின்த் முஹம்மது 601–624
உம்மு குல்சூம் பின்த் முஹம்மது 603–630
ஃபாத்திமா பின்த் முஹம்மது 605/15–632
அப்துல்லா பின் முஹம்மது 611–615
நபி (ஸல்) அவர்களுக்கு முதல் குழந்தை ஆண் குழந்தையாகவும், இறுதிக் குழந்தை ஆண் குழந்தையாகவும் பிறந்து இருந்தார்கள்.
அன்னை கதீஜா (ரலி) அவர்கள் மூலம் மொத்தம் ஆறு குழந்தைகள் பிறந்திருந்தார்கள். அவர்களின் இறுதியானவரான அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் ஒரு நாள் இரவில் காலமாகி விட்டார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு ஆண் குழந்தைகளே இல்லை. பெண் மக்கள் மட்டுமே எனும் நிலை உருவானது.
நபி (ஸல்) அவர்களுக்கு உடன் பிறந்த சகோதரர்கள் என்று எவருமில்லை. நபி (ஸல்) அவர்களுக்கு பிறந்த ஆண் குழந்தைகளில் எவரும் உயிருடன் இல்லை.
இவன், கொள்கைக்கு வாரிசு இல்லாதவன்=
÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷
இந்நிலையில் நபி (ஸல்) அவர்கள் குரைஷிகளை மட்டும் கஅபா வளாகத்திற்குள் வரச் செய்து அவர்களுக்கு இஸ்லாமியப் பிரச்சாரம் செய்ய அழைப்பு விடுத்திருந்தார்கள்.
அவர்கள் அனைவரும் கஅபாவின் வளாகத்தில் நபிகளாரின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.
அப்பொழுது நபி (ஸல்) அவர்கள் 'பனீ ஸஹம்' எனும் வாசல் வழியாக கஅபா வளாகத்திற்குள் நுழைந்தார்கள்.
அச்சமயம் கஅபா வளாகத்தினுள் பேசிக் கொண்டிருந்த குரைஷி தலைவர்களில் ஒருவரான ஆஸ் பின் வாயில் என்பவன் "அவரை விடுங்கள் அவர் சந்ததியற்றவர்; அவருக்கு வழி தோன்றல்கள் யாரும் கிடையாது; அவர் இறந்து விட்டால் அவரது கதை அத்தோடு முடிந்து விடும்" என்று கூறினான்.
அங்கு கூடியிருந்த அனைவரும் இவ்வாறு கேலிப் பேசி சிரித்து மகிழ்ந்தார்கள். இவரைக் குறித்து தான் இந்த வசனம் அருளப்பட்டது.
பிற்காலத்தில் இவரை சிலர் இஸ்லாத்திற்கு அழைத்தார்கள். அப்பொழுது இவர், "நான் இறந்த பிறகு மீண்டும் உயிர்பெற்று வந்தாலும் முஹம்மதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்" என்று கூறினான்.
இவருடைய ஒட்டகங்களை இவர் மேய்த்துக் கொண்டிருக்கும் போது கருவேலமுள் ஒன்று இவரது காலில் குத்தியது.
அதனால் இவருடைய கால் வீங்கி சீல் சலம் வைத்து மிகப்பெரும் புண்ணாக ஆனது. மக்கா மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்த அனைத்து மருத்துவர்களும் சிகிச்சை அளித்தும் முள் குத்தியதை சரி செய்ய இயலவில்லை.
சீல் சலம் வடிவதால் இவரை பார்க்க எவரும் வருவதில்லை. இவர் நதன் - நாற்றம் எடுத்த மனிதராக ஆகிப் போனார். இவருடைய குடும்பத்தினர் கூட மிகச் சிரமப்பட்டே இவரைக் கவனித்துக் கொண்டார்கள்.
இவருடைய மகன் ஹிஷாம் அவர்கள், "கைதேர்ந்த நல்ல மருத்துவரை சிரியாவிலிருந்து அழைத்து வருகிறேன்" என்று சொல்லிவிட்டு சென்றார். அவர் மருத்துவரை அழைத்துக் கொண்டு மக்காவிற்கு வந்த போது அவருடைய தந்தை இறந்து சில நாட்கள் ஆகி இருந்தது.
இவர் நபியை "அப்தர் - ஆண் சந்ததி இல்லாதவர்" என பலித்துப் பேசியதால், எந்த ஆணும், எந்தப் பெண்ணும் இவரை நெருங்க முடியாத அளவிற்கு அல்லாஹ் தூரமாக்கி விட்டான்.
இவரும் ஒரு வகையில் அப்தர் - மக்கள் தொடர்பு இல்லாதவராக ஆகி விட்டார்.
இவருக்கு ஹிஷாம், அம்ரு என இரு ஆண் மக்கள் இருந்தனர். இவர்கள் இருவரும் பிற்காலத்தில் இஸ்லாத்தில் இணைந்து விட்டார்கள். இவர்கள் ஹிஷாம் பின் அல் ஆஸ், அம்ரு பின் அல் ஆஸ் (ரலி) என அழைக்கப்பட்டார்கள்.
அல்லாஹ் சொன்னது போல் ஆஸுடைய கருத்துகளுக்கும் கொள்கைகளுக்கும் வாரிசாக எவரும் இல்லாமல் ஆகிவிட்டனர்.
இந்த வசனம் அபூ ஜஹலை குறிப்பதாகவும், உக்பா பின் அபி முஐத் என்பவனை குறித்து அருளப்பட்டதாகவும் ஹதீஸ்களில் காணப்படுகிறது.
நூல் : தஃப்ஸீர் இப்னு கஸீர்,
தஃப்ஸீர் குர்துபி
இறைவன் யார் யாரைத் திட்டினான் ?
•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; மதீனாவைச் சேர்ந்த கஅப் பின் அஷ்ரஃப் என்பவன் மக்காவிற்கு வந்திருந்த போது குரைஷியர்கள் "நீங்கள் மதீனாவில் உள்ள மனிதர்களில் சிறந்தவர்; அவர்களின் தலைவரும் கூட" என்று கூறினார்கள்.
அதற்கு கஅப் பின் அஷ்ரஃப் " ஆமாம் உண்மைதான்" என்று கூறினான்.
குரைஷிகள் " அவர் ஒரு புடை கட்டை ( வாழை மரத்தின் வேரிலிருந்து துளிரும் புடை கட்டைகள் எந்தப் பயனும் இல்லாதது; அதை வீணாகவே வெட்டி எறிவார்கள்;) தன் கூட்டத்தில் சந்ததி இல்லாத ஒரே மனிதர்; அவர் நம்மை விடச் சிறந்தவர் என நினைத்துக் கொண்டிருக்கிறார்; நாங்கள் தான் சிறந்தவர்கள், தோட்டம் துறவு உள்ளவர்கள்; கஅபே! நீங்கள் தான் அவரை விடச் சிறந்தவர்" என்று கூறினார்கள்.
அப்பொழுதுதான் "நபியே! உங்களை வெறுப்பவர்களே சந்ததியற்றவர்" எனும் இந்த வசனத்தை அல்லாஹ் அருளினான்.
நூல்: நஸாயீ , இப்னு ஹப்பான்.
أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ أُوتُوا نَصِيبًا مِّنَ الْكِتَابِ يُؤْمِنُونَ بِالْجِبْتِ وَالطَّاغُوتِ وَيَقُولُونَ لِلَّذِينَ كَفَرُوا هَٰؤُلَاءِ أَهْدَىٰ مِنَ الَّذِينَ آمَنُوا سَبِيلًا
வேதத்தில் சிறிதளவு (ஞானம்) கொடுக்கப்பட்ட சிலரை (நபியே! நீர்) பார்க்கவில்லையா? அவர்கள் சிலைகளையும், அட்டகாசம் செய்யும் (ஷைத்தான்களையும்,) நம்பிக்கை கொள்கிறார்கள்; அவர்கள் இறை மறுப்பாளர்களைக் காட்டி, "இவர்கள் இறை நம்பிக்கை கொண்டவர்களை விட நேர்வழி அடைந்தவர்கள்" என்று கூறுகிறார்கள். 4 : 51
இந்த வசனத்தில் "இவர்கள் இறை நம்பிக்கை கொண்டவர்களை விட நேர்வழி அடைந்தவர்கள்" எனும் இந்த சொல், குறைஷியர்கள் 'கஅப் பின் அஷ்ரஃப்' என்பவனை சிறந்தவன் என்று சொன்னதை குறிப்பிடுகின்றது என தஃப்ஸீர் விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள்.
அதாவு பின் அபீ ரபாஹா (ரலி) அவர்கள் கூறுவதாவது; இந்த வசனம் அபூ லஹப் குறித்து அருளப்பட்டது.
நபி (ஸல்) அவர்களின் மகன் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் இறந்திருந்த போது அபூ லஹப் தன் நண்பர்களிடம் சென்றிருந்தான். அப்போது, "இன்று இரவு முஹம்மது சந்ததி அற்றவராக ஆகிவிட்டார்" என்று சொல்லி ஆனந்தம் அடைந்தான். அப்பொழுதுதான் இந்த வசனம் அருளப்பட்டது.
நூல்: தஃப்ஸீர் ராஜி
நபி (ஸல்) அவர்கள் குறித்துத் தவறாகப் பேசிய ஆஸ் பின் வாயில், அபூ லஹப், அபூ ஜஹல் ஆகிய மூவரும் ஒரே கருத்தையே திரும்பத் திரும்ப வெவ்வேறு இடங்களில் கூறினார்கள். அதனால் அவர்கள் கூறிய சொல் அவர்களுக்கே உரியது என அல்லாஹ் வழி மொழிந்த வார்த்தை தான் 'அப்தர்'.
"ஒரு வார்த்தை வெள்ளும் ஒரு வார்த்தை கொல்லும்" என தமிழில் ஒரு பழமொழி சொல்லுவார்கள்.
அவர்கள் சொன்ன வார்த்தை அவர்களுக்கே உரித்தாகிவிட்டது.
"Happy Ramzan Same to you - ரமலான் வாழ்த்துக்கள் ; அதுவே உனக்கும்" என்று இன்றைய நவ நாகரீக உலகத்தில், வார்த்தைகளை குறைத்து அதே நேரம் அழகிய மொழிநடையிலும், இலக்கண முறையிலும் பேசுவது போல் அன்றே அல்லாஹ் பேசி இருக்கின்றான். (இல்லை! அவன் பேசியது போல் இன்று நாம் பேசி வருகிறோம்.)
"அவர்கள் இன்னஹு அப்தர்" என்றார்கள். அல்லாஹ், "இன்னக்க அப்தர்" என்று சொல்லி முடித்துக் கொண்டான்.
இலக்கண இலக்கியங்களில் கைதேர்ந்த அரபியர்களிடம் அல்லாஹ்வும் இலக்கிய முறைப்படி பேசி இருக்கின்றான்.
நபியே !
நீங்கள் இல்லை
அவர்கள்தான்......!
÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×
إِنَّ شَانِئَكَ هُوَ الأَبْتَرُ
எனும் இந்த வசனம் மட்டும் மக்காவில் அருளப்பட்டது. மற்ற இரண்டு வசனங்களும் மதீனாவில் அருளப்பட்டது.
'சந்ததியற்றவர்' எனும் சொல் வாழ்நாள் முழுவதும் நபிகளாரின் மனதை மிகப்பெரும் அளவில் பாதித்தது. மனம் காயப்பட்டு இருந்தது.
காயம்பட்ட கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் இதயத்தை ஆறுதல் படுத்தவே முதல் இரண்டு வசனங்களை அல்லாஹ் மதீனாவில் அருளினான். அதனால் நபி (ஸல்) அவர்கள் ஓரளவு ஆறுதலும் அடைந்தார்கள்.
அதே சமயம் மதீனாவில் அன்னை மாரியா கிப்தியா (ரலி) அவர்கள் மூலம் இப்ராஹிம் (ரலி) அவர்கள் நபிகளாருக்கு மகனாகப் பிறந்தார்கள். அதனால் நபி (ஸல்) அவர்கள் முழுமையாக அந்த வார்த்தையின் நினைவில் இருந்து வெளிவந்து சந்தோசமாக வாழ்தார்கள்.
நபிகளாரை சோதிக்கும் விதமாக அல்லாஹ் மீண்டும் இப்ராஹிம் (ரலி) அவர்களையும் தன்னளவில் அழைத்துக் கொண்டான்.
அதனால் மக்கா இறை மறுப்பாளர்கள் சொன்னதை நினைத்து நபி (ஸல்) அவர்கள் வாழ்நாள் முழுவதும் வருத்தப்பட்டார்கள்.
நபிகளாரை ஆறுதல் படுத்தவே....
====================
ஜுர்ஜானீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இந்த வசனத்தில் உள்ள 'இன்ன' எனும் சொல்லும், 'ஹுவ' எனும் சொல்லும், அல் அப்தர் என்பதில் உள்ள 'அல்' எனும் சொல்லும் " கண்டிப்பாக, உறுதியாக எனும் பொருளைத் தரக் கூடியது.
எனவே இதைச் சொன்னவர்கள்தான் "கண்டிப்பாக, உறுதியாக, நிச்சயமாக சந்ததி அற்றவர்கள்" என இறைவன் உறுதிமொழி அளிக்கின்றான்.
அதாவது நபி (ஸல்) அவர்களை நம்ப வைப்பதற்காகவும், ஆறுதல் படுத்துவதற்காகவும் அரபு மொழியில் உறுதியளிக்கும் மூன்று சொற்களைப் பயன்படுத்தி அல்லாஹ் பேசி இருக்கின்றான்.
நபி (ஸல்) அவர்களை எந்த சொல்லைச் சொல்லி எதிரிகள் திட்டினார்களோ அதே சொல்லையே அல்லாஹ் சொல்லி அவர்களை திட்டினான்.
மனிதர்கள் நபி (ஸல்) அவர்களைத் திட்டினார்கள். ஆனால் அல்லாஹ் நபிகளாரை திட்டியவர்களை திட்டியிருக்கின்றான். அல்லாஹ் சில மனிதர்களை திட்டியது தான் உயர்ந்த நிலை!
அண்ணலருக்காக
அல்லாஹ் பேசிய வார்த்தை அப்தர்....
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷
மக்காவில் நபி (ஸல்) அவர்கள் ஓர் இறை கோட்பாட்டை முன்மொழிந்ததும் கருத்தியல் அடிப்படையிலான எதிரிகள் அதிகரித்தார்கள்.
அதனால் முஸ்லிம்களுக்கோ நபி (ஸல்) அவர்களுக்கோ ஏதேனும் ஒரு வகையில் பின்னடைவு , மீள முடியாத நெடுந் துயரங்கள் ஏற்பட்டால் எதிரிகளான இறை மறுப்பாளர்கள் சந்தோஷப்பட்டார்கள்.
அப்படி அவர்கள் சந்தோஷப்பட்டு சொன்ன ஒரு வார்த்தை தான் அப்தர் - நபியே! நீர் சந்ததி இல்லாதவர்.
பொதுவாகவே அரபியர்களிடம் பத்தர் - சந்ததியற்றவன் நாதியற்றவன் எனும் வார்த்தை புழக்கத்தில் இருந்தது.
ஆகக் கீழ்த்தரமாக, கேவலமாக ஒருவரைச் சாடவே அரபியர்கள் இந்த வார்த்தையை பயன்படுத்தி வந்தார்கள்.
இப்படிப்பட்ட ஒரு வார்த்தையை நபிகளார் மீது பயன்படுத்தியதால் அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.
எதிரிகள் திட்டிய நேரம், காலம் அனைத்தும் அவர்களுக்குச் சாதகமாக இருந்தது . நபி (ஸல்) அவர்களுக்கு அந்த சூழல் எதிராக இருந்தது.
அதனால் நபி (ஸல்) அவர்கள் அந்த வார்த்தைகளை காதில் கேட்டும், மௌனமாக அந்த இடத்தைக் கடந்தும் சென்றார்கள்.
ஆனால் அல்லாஹ் தன் ஹபீபை - நேசத்திற்குரியவரை திட்டியதை சகிக்க இயலாமல் எவன் சொன்னானோ அவனைப் பார்த்து அப்தர் - நீதான் சந்ததி அற்றவன் என்று பதில் கூறினான்.
நபி (ஸல்) அவர்களுக்காக அல்லாஹ் இவ்வாறு பல்வேறு சமயங்களில் பேசி இருக்கின்றான் என்பது குறிப்பிடத்தக்கது.
நூல் : தஃப்ஸீர் குர்துபீ
ஒற்றைச் சொல்லால்
உருகுளைந்த குடும்பங்கள் :
`•`•`•`•`•`•`•`•`•`•`•`•`•`•`•`•`•`•`•`•
அபூ லஹபும்
அவனது குடும்பமும் :
=====================
அபூ லஹப் என்பவனுக்கு மூன்று ஆண் குழந்தைகள் இருந்தனர் உத்பா, முஅத்தப், உதைபா மற்றும் மூன்று பெண் மக்களும் இருந்தனர்.
நபி (ஸல்) அவர்களின் மகளை திருமணம் செய்து இருந்த உதைபாவை சிங்கம் கடித்து சாகடித்தது. தந்தை அபூ லஹப் இருக்கும்போதே மகன் இறை மறுப்பாளனாகவே இறந்து விட்டான். உத்பா, முஅத்தப் ஆகிய இருவரும் ஃபதஹ் மக்காவிற்கு பிறகு இஸ்லாத்தில் இணைந்து விட்டார்கள்.
அபூ லஹபிற்கு மூன்று பெண் மக்கள் இருந்தனர். துர்ரா, ஸபீஆ ஆகிய இருவரும் இஸ்லாத்தில் இணைந்து விட்டார்கள். தந்தை இருக்கும்போதே உஜ்ஜா என்பவர் இறை மறுப்பாளராக இருந்து விட்டாள்.
அபூ ஜஹலும்
அவனதுகுடும்பமும் :
===================
அபூ ஜஹலுக்கு நான்கு மனைவிகள் இருந்தனர். அபூ ஜஹல் பத்ர் போரில் கொலை செய்யப்பட்டான். இவனுக்கு மூன்று ஆண் மக்களும் நான்கு பெண் மக்களும் பிறந்தனர்.
அபூ ஹாஜிப், அபூ அல்கமா என இரண்டு ஆண் மக்கள் இருந்தனர். இவ்விருவருக்கும் குழந்தை பாக்கியம் இல்லை. அபூ அல்கமா அறியாமை காலத்திலேயே தந்தை இருக்கும் போதே எமனில் கொலை செய்யப்பட்டு விட்டான்.
மூன்றாவது இக்ரிமா ரலியல்லாஹு அன்ஹு - இவர் இஸ்லாத்தில் இணைந்து குழந்தைகளோடு தாயிஃபில் நீண்ட காலம் வாழ்ந்தார்.
ஹுனஃபா, ஸக்ரா, அஸ்மா, ஜுவைரியா என்ற நான்கு பெண்மக்கள் பிறந்தனர்.
இவர்கள் நால்வரும் இஸ்லாத்தில் இணைந்து விட்டார்கள். அன்னை ஃபாத்திமா (ரலி) அவர்கள் இருக்கும் போதே அலீ (ரலி) அவர்கள் இந்த நான்கு பெண் மக்களில் ஒருவரை திருமணம் செய்ய பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். இதனை அறிந்த நபி (ஸல்) அவர்கள்
واللَّهِ لا تَجْتَمِعُ بنْتُ رَسولِ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ وبِنْتُ عَدُوِّ اللَّهِ عِنْدَ رَجُلٍ واحِدٍ، فَتَرَكَ عَلِيٌّ الخِطْبَةَ.
அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்வின் தூதருடைய மகளும், அல்லாஹ்வின் எதிரி உடைய மகளும் ஒரே மனிதரிடத்தில் இருப்பது சாத்தியமல்ல" என்று கூறினார்கள். உடனே அலீ (ரலி) அவர்கள் அந்த பேச்சு வார்த்தையை முடித்துக் கொண்டார்கள்.
நூல் :புகாரி
கஅப் பின் அஷ்ரஃப் என்பவன் மஸ்லமா (ரலி) அவர்கள் மூலம் கொலை செய்யப்பட்டான். இவனுடைய மரணத்திற்குப் பிறகு இவனை குடும்பத்தினரும் அழிந்து போனார்கள்.
ஆஸ் பின் வாயில் என்பவனுடைய முடிவை ஏற்கனவே பார்த்து விட்டோம்.
இவ்வாறு நபி (ஸல்) அவர்களை அப்தர் - சந்ததியற்றவர் என்று சொன்னதால் இவர்கள் அனைவரும் சிறுவயதில் மரணித்தது மட்டுமின்றி இவருடைய ஆண்மக்கள் பலர் சிறுவயதிலேயே இறந்துப் போனார்கள். எஞ்சி இருந்த பிள்ளைகள் அனைவரும் இஸ்லாத்தில் இணைந்து விட்டார்கள்.
அதனால் இவர்களுடைய இறை மறுப்பு கொள்கையை அடுத்த தலைமுறையினருக்குச் சொல்ல எவரும் இல்லாமல் ஆகி விட்டார்கள்.
இவர்கள் கொள்கை பிடிப்போடு இருந்தது போல் இவருடைய சந்ததிகளில் எவரும் கொள்கையில் உறுதியாக இருக்கவில்லை. அதைத்தான் அல்லாஹ், "அவர்கள் கொள்கைக்கு சந்ததி அற்றவர்கள்" என்று சொல்லிக் காட்டுகிறான்.
நபி (ஸல்) அவர்களின் ஆண் மக்கள் அனைவரும் இறந்தது ஏன்?
•~×~×~×~×~×~×~×~×~×~×~×~×~×~×~×~×~•
அல்லாஹ்வின் நாட்டப்படியே அனைவரும் மரணித்தார்கள் என்பதே உண்மை. இதில் இரு வேறு கருத்துக்கள் இல்லை என்பதே உண்மை.
பொதுவாகவே அரபியர்கள் தமக்கு ஆண் பிள்ளைகள் இருப்பது பெருமை என்றும், பலம் என்றும், சமூகத்தில் அந்தஸ்தை உயர்த்தித் தரும் என்றும் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். அதில் உறுதியாகவும் இருந்தார்கள்.
ஆனால் நபி (ஸல்) அவர்களுக்கு ஆண் குழந்தைகளே இல்லாமல், சமூகத்தில் அந்தஸ்தையும், மரியாதையையும் வழங்கி அல்லாஹ் கௌரவப்படுத்தி இருக்கின்றான்.
பொதுவாகவே அல்லாஹ்வின் வல்லமை என்னவென்றால், எதை மனிதர்கள் மதிக்கிறார்களோ அது இல்லாமலே அல்லாஹ் மதிப்பையோ அந்த தேவையையோ நிறைவேற்றி விடுவான்.
உதாரணமாக கன்தக் - அகல் யுத்தத்தில் இரண்டு மூன்று நபர்கள் சாப்பிடும் அளவிற்கு இருந்த பாதாம் பிஸ்தா பேரித்தம் பழம் போன்றவற்றின் மீது நபி (ஸல்) அவர்கள் கையை வைத்து துஆ செய்த பிறகு அந்த துணியில் கிடந்த nuts - நட்ஸ்களை பல நூறு பேர் சாப்பிட்டார்கள்.
அதைப்போல் ஜாபிர் (ரலி) அவர்கள் ஐந்தாறு பேருக்கு சமைத்த உணவில் நபி (ஸல்) அவர்கள் துஆ செய்த பிறகு ஆயிரக்கணக்கானோர் சாப்பிட்டார்கள்.
ஒரு சிலருக்கு மட்டுமே போதுமான உணவை ஒரு ஆயிரம் பேர் சாப்பிடும் அளவிற்கு அதில் விசாலத்தை வழங்கியது அல்லாஹ் ஆவான்.
ஆயிரம் நபர்களுக்குத் தேவையான உணவை தயார் செய்து வைத்துக் கொண்டு விருந்துக்கு அழைப்பவர்கள் சாதாரண மனிதர்கள்.
ஐந்தாறு நபர்களுக்கான உணவை வைத்துக் கொண்டு ஆயிரக் கணக்கானவர்களை அழைக்க சொல்பவன் அல்லாஹ். இதுதான் இறைவனுடைய ஸ்டைல் - நடைமுறை.
அல்லாஹ் பின்புறத்தில் இருந்து உதவி செய்து, நபி (ஸல்) அவர்களை அனைத்து நிலைகளிலும் உயர்த்தி காட்டினான்.
பொதுவாக ஒரு தந்தையின் கருத்தை, சீரான ஆட்சி முறையை மகன்கள் தான் எடுத்துச் செல்வார்கள்.
ஆனால் நபி (ஸல்) அவர்களுக்கு மகன்கள் இல்லாமலே நபித் தோழர்கள் அதைச் சுமந்து, உலகம் முழுவதும் சென்றடையச் செய்தார்கள்.
பனு இஸ்ரவேலர்களில் தோன்றிய நபிமார்களின் மகன்கள் நபியாக இருந்திருக்கிறார்கள்.
இப்ராஹிம் (அலை) அவர்களின் மகன் இஸ்மாயில் (அலை) ஒரு நபி ஆவார். யாகூப் (அலை) அவர்களின் மகன் யூசுஃப் (அலை) அவர்கள் ஒரு நபி ஆவார். தாவூத் (அலை) அவர்களின் மகன் சுலைமான் (அலை) அவர்கள் ஒரு நபி ஆவார். ஜகரியா (அலை) அவர்களின் மகன் யஹ்யா ஒரு நபி ஆவார்.
1. ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறுதி நபி என இறைவன் முத்திரையிட்டு முடிவு செய்து விட்டதால், அவர்களுக்கு ஆண் வாரிசு இல்லாமல் அல்லாஹ் ஆக்கிவிட்டான்.
அதேநேரம் நபி (ஸல்) அவர்களை இறுதி நபியாக அல்லாஹ் அறிவித்ததால் அவர்களுக்கு மகன் இருந்தால் மக்கள் நபியாக அறிவிக்கவோ, மன்னராட்சி முறையில் மன்னராக ஆக்கவோ சாத்தியக் கூறுகள் உண்டு என்பதால் அல்லாஹ் நபிகளாருக்கு ஆண் வாரிசு இல்லாமல் செய்துவிட்டான் என முஹம்மது ஸப்ரீ அப்துல் ரஹீம் மக்கீ அவர்கள் கூறுகிறார்கள்.
இந்தக் கருத்தை வலு சேர்க்கும் இரண்டு ஹதீஸ்களைப் பாருங்கள்.
عن الصحابي الجليل أنس بن مالك -رضي الله عنه- أنّه قال: (لو عاش إبراهيمُ لكان صدِّيقًا نبيًّا) رواه الألباني، في صحيح الجامع ومسند احمد .
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்ராஹிம் (ரலி) அவர்கள் மட்டும் இருந்திருந்தால் அவர் உண்மையான நபியாக இருந்திருப்பார்.
நூல் : முஸ்னது அஹ்மத்
عن إسماعيل بن أبي خالد قال: (قُلتُ لِابْنِ أبِي أوْفَى: رَأَيْتَ إبْرَاهِيمَ ابْنَ النبيِّ صَلَّى اللهُ عليه وسلَّمَ؟ قالَ: مَاتَ صَغِيرًا، ولو قُضِيَ أنْ يَكونَ بَعْدَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عليه وسلَّمَ نَبِيٌّ عَاشَ ابنُهُ، ولَكِنْ لا نَبِيَّ بَعْدَهُ). رواه البخاري
இஸ்மாயில் பின் காலித் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நான் இப்னு அபீ அவ்ஃபா (ரலி) அவர்களிடம் "நீங்கள் நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் (ரலி) அவர்களைப் பார்த்து இருக்கிறீர்களா?" என்று கேட்டேன்.
(நான் அவரைப் பார்த்திருக்கின்றேன்;) அவர் சிறு வயதில் மரணித்து விட்டார். முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மகனார் மட்டும் வாழ்ந்திருந்தால், அவர் நபியாக ஆகியிருப்பார்; ஆனாலும் நபிகளாருக்கு பிறகு நபித்துவம் என்பதே இல்லை. நூல் : புகாரி
2. "பொதுவாகவே ஆண் பிள்ளைகள் தான் பெற்றோருக்குத் தேவையான வாழ்வாதாரங்களை வழங்கி கவனித்துக் கொள்ள வேண்டும் என்பது உலக நடைமுறை.
ஆனால் நபி (ஸல்) அவர்கள், தாம் வாழும் வரை எந்த பிள்ளைகளுடைய வருவாயையும் எதிர்பார்த்து இல்லை. அல்லாஹு ஒருவனையே நம்பி இருக்கின்றார் என்கிற கருத்தை மக்களிடையே சேர்க்க வேண்டும் என்பதற்காகவே அல்லாஹ் நபிகளாருக்கு ஆண் குழந்தைகளை வழங்கவில்லை" எனவும் கூறுகிறார்கள்.
இந்தக் கருத்தை வலு சேர்க்கும் விதமான ஒரு வசனத்தைப் பாருங்கள்.
قُلْ لَا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا الْمَوَدَّةَ فِي الْقُرْبَى
உறவினர்கள் (என்னிடம்) அன்பாக இருக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு கூலி (பணம் காசு ) எதையும் நான் உங்களிடம் கேட்கவில்லை என்று (நபியே!) நீர் கூறுவீராக! 42 : 23
எனது குடும்பத்தினர் என் மீது பேரன்பு கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த எதிர்பார்ப்பும் எனது குடும்பத்தினரிடம் எனக்கு இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் சொல்லி வந்தார்கள். அதையே அல்லாஹ் வசனமாக அருளி விட்டான்.
நபிகளாரின் இந்த வேண்டுகோளை ஏற்றுத்தான் ஹசன் ஹுசைன் (ரலி) அவர்கள் உட்பட வேறு யாரும் நபி (ஸல்) அவர்களிடம் இருந்து வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை.
தன்னை நபி என்றும் சொல்லிக் கொள்ளவும் இல்லை. அப்படிச் சொன்னால் மறுமை நாளில் நபிகளாரின் அன்பில் இருந்தும், ஷஃபாஅத்திலிருந்தும் தூரமாக்கப்படுவோம் என்பதில் உறுதியாக இருந்தார்கள்.
3. "இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு குழந்தை பாக்கியமே இல்லாமல் அல்லாஹ் சோதித்தான்.
மேலும் நெருப்பு குன்றத்தில் எறியப்படுகிற நேரம் வரை அல்லாஹ் சோதித்தான்.
இப்படி ஒவ்வொரு நபியும் சோதனைகளுக்குள் ஆக்கப்பட்டு இருக்கிறார்கள். அவ்வாறுதான் நபி (ஸல்) அவர்களும் ஆண் குழந்தைகள் இல்லாமல் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார்கள்" எனவும் கூறுகிறார்கள்.
இந்தக் கருத்தை வலு சேர்க்கும் ஒரு ஹதீஸைப் பாருங்கள்.
عن سعد بن أبي وقاص -رضي الله عنه- أنّه قال: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَيُّ النَّاسِ أَشَدُّ بَلَاءً؟ قَالَ: «الأَنْبِيَاءُ ثُمَّ الأَمْثَلُ فَالأَمْثَلُ، فَيُبْتَلَى الرَّجُلُ عَلَى حَسَبِ دِينِهِ، فَإِنْ كَانَ دِينُهُ صُلْبًا اشْتَدَّ بَلَاؤُهُ، وَإِنْ كَانَ فِي دِينِهِ رِقَّةٌ ابْتُلِيَ عَلَى حَسَبِ دِينِهِ، فَمَا يَبْرَحُ البَلَاءُ بِالعَبْدِ حَتَّى يَتْرُكَهُ يَمْشِي عَلَى الأَرْضِ مَا عَلَيْهِ خَطِيئَةٌ» رواه الترمذي
ஸஃத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! மக்களில் அதிகமாகச் சோதிக்கப்பட்டவர்கள் யார்?” என்று கேட்டேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நபிமார்கள்; பிறகு அவர்களைப் போன்றவர்கள்; பிறகு அவர்களைப் போன்றவர்கள்.
ஒவ்வொரு மனிதனும் அவனுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்குச் சோதிக்கப்படுவான்.
அவனுடைய மார்க்கப் பிடிப்பு உறுதியாக இருந்தால் அவனுடைய சோதனைகள் அதிகரிக்கப்படும்.
அவனுடைய மார்க்கப் பிடிப்பு உறுதியற்றதாக இருந்தால் அவனுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்கு அவன் சோதிக்கப்படுவான்.
ஒரு அடியான் பூமியில் நடமாடிக் கொண்டிருக்கும் காலமெல்லாம் அவன் மீது எந்தப் பாவங்களும் இல்லாமல் ஆகின்ற வரை அவனை விட்டும் சோதனைகள் நீங்காமலேயே இருக்கும்” என்று கூறினார்கள்.
நூல் : திர்மிதீ - 2398
நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ், பல்வேறு வகையானத் துன்பங்களை வழங்கியது போன்றே ஆண் குழந்தை இல்லை என்கிற மிகப்பெரும் துன்பத்தையும், சோதனையையும் வழங்கினான். அவை அனைத்திலும் நபிகள் நாயகம் அவர்கள் வெற்றி வாகை சூடினார்கள்.
நபி (ஸல்) அவர்களின் புகழ்
எவ்வளவு பரவி இருக்கிறது?
=_==_==_==_==_==_==_==_=
وقال محمد بن إسحاق : عن يزيد بن رومان قال : كان العاص بن وائل إذا ذكر رسول الله صلى الله عليه وسلم يقول : دعوه ، فإنه رجل أبتر لا عقب له ، فإذا هلك انقطع ذكره .
நபி (ஸல்) அவர்கள் குறித்து சொல்லப்பட்ட போது ஆஸ் பின் வாயில் என்பவன் கூறினான். அவரை விடுங்கள்; அவர் சந்ததி அற்ற மனிதர்; அவருக்கு எதிர்காலமே இல்லை; அவர் இறந்து போனால் அவரைப் பற்றி பேச யாருமே இருக்க மாட்டார்கள்.
நூல்: தஃப்ஸீர் தப்ரீ
இப்படி சொன்னவனுக்கு பதில் அளிக்கும் விதமாக சில வரிகள்.
வளர்ப்புத் தாய் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் நபி (ஸல்) அவர்களின் ஒவ்வொரு பருவத்தையும் புகழ்ந்துப் பேசி வந்தார்கள்.
இளைஞராக இருந்தபோது குடும்பத்தினர் பேசிய புகழ் வார்த்தைகள் அனைத்தும் அவருக்கு உரியது தான் என அவரின் செய்கைகளை கண்டு ஊர் மக்கள் ஒப்பு கொண்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் தன் நடத்தையை மென்மேலும் அழகு படுத்திக் கொண்டே சென்றதால் அவர்களின் புகழும் ஓங்கியது.
சிறுவராக, இளைஞராக, ஆடு மேய்ப்பாளராக, வியாபாரியாக, கணவனாக, தந்தையாக இருந்த அனைத்துத் தருணங்களிலும் தன் புகழ் ஓங்கும்படியே வாழ்ந்தார்கள்.
அதிலும் நபியாக தன்னை அறிவித்துக் கொண்ட போதும், அது சார்ந்த புரட்சிகரமான பல கருத்துக்களை உதிர்த்த போதும் அவர்களின் புகழ் மேலும் பெருகியது.
இன்று உலகம் முழுவதிலும் 200 கோடி முஸ்லிம்கள் இருக்கிறார்கள். உலகில் உள்ள சாதி மதங்கள் வாரியாக அந்த மக்களை பிரித்துப் பார்த்தால் முஸ்லிம் மக்கள் தொகை தான் மிக அதிகமாகக் காணப்படும்.
200 கோடி முஸ்லிம்களுக்கு ஒரு கோடி பள்ளிவாசல்கள் உலகம் முழுவதிலும் இருக்கும்.
ஒரு கோடி பள்ளிவாசலிலும் தினம் தினம் ஐந்து முறை பாங்கின் மூலம் பத்து முறை நபி (ஸல்) அவர்களின் பெயரும் இகாமத்தின் மூலம் பத்து முறை நபி (ஸல்) அவர்களின் பெயரும் நினைவு கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக இருபது கோடி முறை நபி ஸல் அவர்களின் பெயர் பள்ளிவாசலில் ஓங்கி ஒழிக்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி ஒரு பள்ளிவாசலுக்கு ஒரு நேரத் தொழுகைக்கு 25 பேர் தொழ வருவதாக வைத்துக் கொண்டால் 25 கோடி பேர் ஒரு நேரத் தொழுகையில் ஒன்று கூடுகிறார்கள்.
இவர்கள் தொழுகையில் ஸலவாத் ஓதுவார்கள். அதன் மூலம் நபி ஸல் அவர்களின் பெயரை நான்கு முறை சொல்வார்கள். அதனால் தொழுவோரின் மூலம் ஒரு நாளில் ஒரு நேர தொழுகையின் போது மட்டும் 100 கோடி முறை நபி (ஸல்) அவர்களின் பெயர் உச்சரிக்கப்படுகிறது.
லா அகீப லஹு அவரைப் பின்பற்ற ஆட்கள் இல்லை என்று சொன்னான் ஆனால் இன்று 200 கோடி பேர் நபிகள் நாயகத்தை பின் துயர்ந்து வருகிறார்கள்.
*ஃப இதா ஹலக இன்கதஅ திக்ருஹு" அவர் அழிந்தால் அவரை நினைத்துப் பார்க்க ஒருவரும் இருக்க மாட்டார்கள் என்று சொன்னான்.
ஆனால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரும் நபிகள் நாயகம் அவர்களை பல நூறு முறை நினைத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பதே உண்மை.
அப்தர் - சந்ததி அற்றவர் என்று சொன்னான். ஆனால் நபி (ஸல்) அவர்கள் மூலமாக பிறந்த குழந்தைகளின் சந்ததியினர் இன்றும் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த சந்ததிகள் மென்மேலும் பெருகவும் அவர்கள் அனைத்து வாழ்வாதாரங்களையும் பெற்று வளமாக வாழவும் ஒவ்வொரு முஸ்லிமும் தொழுகையில் ஸலவாத்து ஓதுவது மூலம் "அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் - முஹம்மது நபிக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும்" என பிரார்த்தனை செய்து கொண்டும் அவரை நினைத்து கொண்டுமே இந்த சமுதாயம் இருக்கிறது.
தொழுகையில் ஸலவாத்தை ஓதவில்லை என்றால் அதாவது நபி (ஸல்) அவர்களின் பெயரைச் சொல்லி நபிகளாருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் பிரார்த்தனை செய்யவில்லை என்றால் அவருடைய தொழுகை கூடாது எனும் நிலையை அல்லாஹ் அமைத்திருக்கின்றான்.
அதாவது நபி (ஸல்) அவர்களின் பெயரையும், அவர்களின் நினைவையும் ஒவ்வொரு முஸ்லிமும் ஒவ்வொரு நாளும் நினைத்துக் கொண்டும் சொல்லிக் கொண்டும் இருக்க வேண்டும் என இறைவன் இயற்கையாகவே அமைத்திருக்கின்றான்.
Comments
Post a Comment