ஹஜ்ஜு
ஹஜ் செய்யாமலே
ஹஜ் செய்த நன்மை
=÷=÷=÷=÷=÷÷=÷=÷=÷=÷=÷
எல்லாம் வல்ல இறைவன் இந்த உம்மத்தினருக்கு பேரருள் செய்திருக்கிறான். அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி (ஸல்) அவர்களின் காரணமாக இந்த இஸ்லாமிய சமூகத்தினருக்கு பெரும் வெற்றிகளையும் பாக்கியங்களையும் நன்மைகளையும் அல்லாஹ் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறான்.
இஸ்லாத்தில் உள்ள சில வகை அமல்கள் எல்லோராலும் செய்ய இயலாது. செய்வதற்கான உடல் ஆரோக்கியமும், பொருளாதார வசதியும் சூழ்நிலைகளும் அமையப்பெற்று இருக்காது. அதே நேரம் அதை செய்ய இயலாதவர்களும் அதன் நன்மையை பெறுவதற்காக அல்லாஹ், எல்லோராலும் செய்ய சாத்தியப்படும் அமலை இந்த சமூகத்தினருக்கு வழங்கி இருக்கிறான்.
இந்த வகையான அமல்களை இந்த சமூகம் செய்யும் போது, மிகப்பெரும் நன்மையும் மறுமையில் உயர்வும் பெறும்.
அந்த வகையில் உள்ள ஒரு அமல்தான் ஹஜ். இது ஆரோக்கியமும் பொருள் வசதியும் உள்ளவர்களுக்கு மட்டுமே சாத்தியமான ஓர் அமல். இது அனைவருக்கும் சாத்தியமான ஓர் அமல் அல்ல!
ஆனாலும் ஏழைகளும் ஹஜ் செய்த நன்மையை, உம்ரா செய்த நன்மையை பெற வேண்டுமானால் அவர்கள் தாம் இருக்கிற இடத்திலேயே இருந்தவாறு கீழ்காணும் அமல்களை செய்யும் போது அவர்களுக்கு ஹஜ் மற்றும் உம்ரா செய்த நன்மை முழுமையாக கிடைத்து விடும் என இஸ்லாம் வழிகாட்டி இருக்கிறது.
வாருங்கள் அவை எவை என விரிவாகக் காண்போம்.
1. அபூதர் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்களிடம் சில தோழர்கள் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! செல்வந்தர்கள் நன்மைகளை அள்ளிச் செல்கிறார்கள்; அவர்கள் நாங்கள் தொழுவது போன்றே தொழுகிறார்கள்; நாங்கள் நோன்பு நோற்பது போன்று அவர்களும் நோன்பு நோற்கிறார்கள்; அவர்களிடம் உள்ள மேல்மிச்சமான செல்வங்களில் தாராளமாக தர்மம் செய்கிறார்கள். (இதனால் அவர்கள் அதிகமான நன்மைகளை சம்பாதிக்கிறார்கள் அவ்வாறு எங்களால் இயலவில்லையே! என்று வினவியதற்கு) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "அல்லாஹ் உங்களுக்கு இஷா தொழுகையை வழங்கவில்லையா? அதை நீங்கள் ஜமாஅத்தோடு தொழுதால், ஒரு ஹஜ் செய்த நன்மை கிடைக்கும். ஃபஜ்ருடைய தொழுகையை ஜமாஅத்தோடு தொழுதால், ஒரு உம்ரா செய்த நன்மை கிடைக்கும்.
நூல் : முஸ்லிம்,
முஸ்னது அஹமத்
2. அனஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக நான் யுத்தத்தில் கலந்து கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறேன். ஆனால், அதற்கான ஆற்றல் என்னிடம் இல்லை (நான் என்ன செய்வது?)" எனக் கேட்டார்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உனது பெற்றோரில் எவரேனும் உயிரோடு இருக்கிறார்களா?
அவர் : ஆம்! எனது தாய் என்னோடு இருக்கிறார்.
நபி (ஸல்) அவர்கள், "உமது தாயாருக்கு பணிவிடைகளை செய்வீராக! பணிவிடைகள் செய்ய வேண்டும் என்று அல்லாஹ்விடத்தில் கேட்பீராக ! அப்படி நீங்கள் செய்தால், ஒரு ஹஜ், ஒரு உம்ரா, மற்றும் ஒரு போர்க்களத்தில் கலந்து கொண்ட நன்மை கிடைக்கும்" என்று கூறினார்கள்.
நூல் : தப்ரானீ, பைஹகி, அபூ யஅலா.
3. கலீப் என்கிற கிராமப்புற நபித்தோழர் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! ஒருமுறை நான் ஹஜ்ஜுக்காக இவ்வாறு இவ்வாறு எல்லாம் தயாராக இருந்தேன். ஆனால், (சில காரணங்களால்) என்னால் போக இயலவில்லை. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "கலீப் ! ஜும்ஆவை விடாமல் தொழுது வாருங்கள்; நிச்சயமாக அது ஏழைகளின் ஹஜ் ஆகும்.
நூல்: வஸாயிலுஷ் ஷீஆ
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஜும்ஆ தொழுகை ஏழைகளின் ஹஜ் ஆகும்.
நூல் : பைஹகி இப்புனு அஸாகிர், ஃபைலுல் கதீர்
4. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
யார் இமாம் ஜமாஅத்தோடு ஃபஜ்ருடைய தொழுகையை தொழுதுவிட்டு அதே இடத்தில் அமர்ந்திருந்து சூரியன் உதயமாகிற வரை திக்ருகள் செய்து கொண்டிருந்து விட்டு இரண்டு ரகஅத்துகள் தொழுகிறாரோ அவருக்கு, ஒரு ஹஜ் மற்றும் ஒரு உம்ரா செய்த முழுமையான கூலி கிடைக்கும்.
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "அவருக்கு முழுமையான முழுமையான முழுமையான கூலி கிடைக்கும்" என்று மூன்று முறை கூறினார்கள்.
நூல் : திர்மிதீ
5. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்ஸாரிப் பெண் உம்மு ஸினான் (ரலி) அவர்களிடம், "நீ ஏன் எங்களுடன் ஹஜ்ஜு செய்ய வரவில்லை" எனக் கேட்டார்கள்.
அதற்கு அப்பெண், “எங்களிடம் இருந்த தண்ணீர் கொண்டு வருவதற்கான ஓர் ஒட்டகத்தில் எனது கணவரும் எனது மகனும் உங்களுடன் வந்துவிட்டனர். இன்னொரு ஒட்டகத்தை விட்டுச் சென்றுள்ளனர். அதன் மூலம் நாங்கள் கிணற்றிலிருந்து வயலுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருக்கிறோம். (அதனால் என்னால் வர இயலவில்லை)" என்றார்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமலான் வந்து விட்டால் நீ உம்ரா செய்வாயாக! ஏனெனில் ரமளானில் உம்ரா செய்வது ஹஜ்ஜுக்கு நிகராகும் எனக் கூறினார்கள். அல்லது அது போன்ற கருத்தைக் கூறினார்கள். நூல்: புகாரி 1782.
ரமளானில் நிறைவேற்றும் உம்ரா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் செய்த ஹஜ்ஜுக்குச் சமமானது என மேற்கண்ட ஹதீஸ் கூறுகிறது.
உம்மு மஅசில் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஜ்ஜத்துல் விதாவு செய்ய செல்வதாக ஒரு நாள் ஒரு தொழுகைக்குப் பின்னர் அறிவித்ததும் நானும் வருவதாக வாக்களித்தேன். இதை என் மனைவி உம்மு மஅசிலிடம் சென்று, "நான் நபிகளாருடன் ஹஜ் செய்யப் போகிறேன்" என்று கூறினேன்.
உடனே எனது மனைவி, "நானும்தான் நபிகளாருடன் ஹஜ் செய்ய வேண்டும்" என்று கூறினார். அதனை சொல்வதற்காக நாங்கள் இருவரும் நபிகளாரிடம் சென்றோம்.
என் மனைவி : அல்லாஹ்வின் தூதரே! உங்களுடன் நானும் ஹஜ் செய்ய விரும்புகிறேன். ஆனால் அபு மஅகிலிடம் ஒரு ஒட்டகம்தான் இருக்கிறது. நான் (அபூமஅசில்) ஆம்! அவர் சொல்வது உண்மைதான்?
நான் அதை அல்லாஹ்வின் பாதையில் செலுத்திவிட்டேன்.
நபி (ஸல்) : அதில் அவரே பயணித்து அவர் ஹஜ் செய்யட்டும்.
என் மனைவி : அல்லாஹ்வின் தூதரே! நானும் ஒரு பெண். எனக்கு வயதாகிவிட்டது. நோய்களும் உள்ளது. உங்களோடு செய்யும் இந்த ஹஜ்ஜுக்கு நிகரான அமல் ஏதும் உள்ளதா?
நபி (ஸல்) : ரமளான் மாதத்தில் செய்யும் ஓர் உம்ராவானது. ஒரு ஹஜ்ஜுக்கு நிகரான (பயனுடைய)தாகும். நூல்: திர்மிதீ 861.
6. அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது;
ஏழை மக்கள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “செல்வம் பெற்றவர்கள் உயர்வான பதவிகளையும் நிலையான பாக்கியத்தையும் பெற்றுக் கொள்கின்றார்கள். நாங்கள் தொழுவது போலவே அவர்களும் தொழுகின்றார்கள்.
மேலும் நாங்கள் நோன்பு வைப்பது போலவே அவர்களும் நோன்பு நோற்கின்றனர்.
ஆயினும் அவர்களுக்குப் பொருளாதாரச் சிறப்பு இருப்பதால் தங்கள் பொருளாதாரத்தின் மூலம் ஹஜ் செய்கின்றனர். உம்ரா செய்கின்றனர். அறப்போர் செய்கின்றனர். தர்மமும் செய்கின்றனர்” என்று முறையிட்டனர்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் உங்களுக்கு ஒரு காரியத்தைக் கற்றுத் தருகின்றேன். அதை நீங்கள் செய்து வந்தால் உங்களை முந்தி விட்டவர்களை நீங்களும் பிடித்து விடுவீர்கள். உங்களுக்குப் பிந்தி வருபவர்கள் உங்களைப் பிடிக்க இயலாது. நீங்கள் எந்த மக்களுடன் வாழ்கின்றீர்களோ அவர்களும் அந்தக் காரியத்தைச் செய்தால் தவிர அவர்களில் நீங்கள் மிகச் சிறந்தவராவீர்கள்.
(அந்தக் காரியமாவது) ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் 33 தடவை இறைவனைத் துதியுங்கள். 33 தடவை இறைவனைப் புகழுங்கள். 33 தடவை இறைவனைப் பெருமைப் படுத்துங்கள்” என்று கூறினார்கள்.
இது வஷயத்தில் நாங்கள் பலவாறாகக் கூறிக் கொண்டோம். சிலர், சுப்ஹானல்லாஹ் 33 தடவையும், அல்ஹம்துலில்லாஹ் 33 தடவையும், அல்லாஹு அக்பர் 34 தடவையும் கூறலானோம். நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று இது பற்றிக் கேட்டேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வல்லாஹு அக்பர் என்று 33 தடவை கூறுங்கள். இதனால் ஒவ்வொரு வார்த்தையும் 33 தடவைகள் கூறியதாக அமையும்” என்று விளக்கமளித்தார்கள்.
நூல் : புகாரி 843
7. அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: யார் ஹஜ் செய்யவோ, உம்ரா செய்யவோ, யுத்தம் செய்யவோ தன் வீட்டிலிருந்து வெளியேறி விட்டாரோ அவர் இறைவழியில் இறந்து போனால் அவருக்கு அல்லாஹ் ஒரு போர்க்களத்தில் கலந்துக் கொண்ட நன்மையும் ஒரு ஹஜ், ஓர் உம்ரா செய்த நன்மையும் வழங்குகிறான்.
நூல்: பைஹகீ.
ஹுஸைன் பின் அலீ (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி ஸல் அவர்கள் கூறினார்கள். ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தவருக்கு இரண்டு ஹஜ்ஜும், இரண்டு உம்ராவும் (செய்த நன்மை) கிடைக்கும்.
நூல் : ஷுஃபுல் ஈமான் - பைஹகீ
8. அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "ஒருவர் தனது இல்லத்திலிருந்து உழூச்செய்து கொண்டு ஃபர்லான தொழுகைக்காக (பள்ளிவாசலுக்கு) வெளியேறிச் செல்கிறார் என்றால் அவருடைய கூலி ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்து வெளியேறிச் செல்பவருக்கு கிடைக்கும் கூலியைப் போன்றாகும்”.
மேலும், எவர் தன் இல்லத்திலிருந்து லுஹாத் தொழுகைக்காக வெளியேறுகின்றரோ அவருக்கு உம்ரா செய்தவரின் கூலியைப் போன்ற கூலி கிடைக்கும்,
மேலும் எவர் ஒரு தொழுகைக்கும் இன்னொரு தொழுகைக்கும் இடையில் எவ்வித வீணான செயல்களையும் செய்யவில்லையனால் அவரின் பெயர் இல்லிய்யீன் (சொர்க்கவாசி)களில் பதிவு செய்யப்படும்”.
நூல்: அபூதாவுத், முஸ்னது அஹ்மத்
9. ஹஸன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். உனது முஸ்லிமான சகோதரருடைய தேவையை நிறைவேற்ற நீ செய்யும் உதவிக்கு பகரமாக அல்லாஹ் உனக்கு ஒரு ஹஜ் செய்த நன்மையை வழங்குவான்.
நூல் : லதாஇஃபுல் மஆரிஃப்
10. உஸைத் பின் ஹுழைர் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
நன்கு உளூ செய்து கொண்டு மஸ்ஜித் குபாஃவில் இரண்டு ரகஅத்துகளில் ஃபாத்திஹா சூராவும் இதர சூராக்களும் ஓதி தொழுதால் ஓர் உம்ரா செய்த நன்மை கிடைக்கும்"
நூல் : திர்மிதீ, இப்னுமாஜா
11. இப்னு ராஜப் (ரஹ்) அவர்கள் அறிவிப்பதாவது; முக்னிஃப் பின் ஸலீம் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். சில நபித்தோழர்கள் சொல்லி இருக்கிறார்கள். நோன்பு பெருநாள் தொழுகைக்காக வீட்டை விட்டு வெளியேறிச் சென்று தொழுதால், ஓர் உம்ரா செய்த நன்மை கிடைக்கும். ஹஜ் பெருநாள் தொழுகைக்காக வீட்டை விட்டு வெளியேறிச் சென்று தொழுதால், ஒரு ஹஜ் செய்த நன்மை கிடைக்கும்.
நூல் : லதாஇஃபுல் மஆரிஃப்
12. தொழுகைக்கு ஹஜ் நன்மை :
அபீ உமாமா பின் ஸஹ்ல் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது; நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
"யார் தூய்மையான நிலையில் என் மஸ்ஜிதில் தொழுவதற்காக மட்டும் தன் இல்லத்தை விட்டு வெளியேறுகிறாரோ அவர் அங்கு தொழுது முடிக்கும் வரை ஹஜ்ஜுடைய காலங்களில் இருந்தவர் போலாவார்(ஹஜ் செய்த நன்மை கிடைக்கும்)"
நூல்: தாரிஹுல் கபீர்
ஜைது பின் அஸ்லம் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"யார் என் மஸ்ஜிதில் தொழுவதற்காக, திக்ரு செய்வதற்காக, கல்வி கற்பிப்பதற்காக, அல்லது கல்வி கற்க வருகிறாறோ அவர் (அக்காரியத்தை முடிக்கும் வரை) முழுமையான ஒரு ஹஜ்ஜை நிறைவேற்றியவரைப் போல் ஆவார்."
மற்றொரு அறிவிப்பில் முழுமையான ஒரு உம்ராவை நிறைவேற்றியவரை போல் ஆவார் என காணப்படுகிறது.
நூல் : தப்ரானீ , ஹாகிம்.
மேற்கண்ட ஹதீஸ்களின் அடிப்படையில் ஹஜ் மற்றும் உம்ரா செய்யாமலே அதன் நற்கூலியை பெறுவதற்கான வழிகளை கண்டோம்.
நேற்று வரை ஹஜ் மற்றும் உம்ரா செய்வது ஏக்க பெருமூச்சாக இருந்தது. மேலும் நமக்கும் இந்த வாய்ப்பு கிடைக்குமா? என்று ஏங்கி இருந்த, இவ்வாண்டு ஹஜ் செய்யக் கூடியவர்களுக்கு இன்று இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அது இறைவன் நமக்கு அளித்த பெரும் பாக்கியமே!
நேற்று வரை ஹஜ் மற்றும் உம்ரா செய்யாமலே ஹஜ் மற்றும் உம்ரா செய்ததற்கான நன்மையை பெறும் வழிகளை பின்பற்றி செயல்பட்டு வந்தோம்.
இன்று அல்லாஹ் அதை உண்மையாக, தத்ரூபமாக செய்து முடிக்கும் வாய்ப்புகளை வழங்கி இருக்கிறான். அல்ஹம்துலில்லாஹ்!
இந்தக் கட்டுரையை வாசிக்கும் அனைவரும் எனக்காகவும், என் குடும்பத்தினருக்காகவும் ஆரோக்கியம் மற்றும் ஈமானோடு வாழ பிரார்த்திக்குமாறு அன்போடு வேண்டுகிறேன்.
மேலும் இதயக் குரல் ஆசிரியர், அவர் குடும்பத்தினர் அனைவரும் ஆரோக்கியத்தோடும் சீரோடும் சிறப்பு வாழ்வதற்கும், ஹஜ் மற்றும் உம்ரா பல செய்வதற்கும் பிரார்த்திக்குமாறு வேண்டுகிறேன்.
Comments
Post a Comment