உலகின் முதல் முன்மாதிரி மனிதர் நபிகள் நாயகம் - 6
உலகின் முதல்
முன்மாதிரி மனிதர் நபிகள் நாயகம்
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
தொடர்ச்சி : 6
=============|->
لَّقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا
அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது; ( யாருக்கு என்றால் ) அல்லாஹ்வையும், மறுமை நாளையும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்வோருக்கு தான்.
(அல்குர்ஆன் 33:21)
*Is the role model super man? - ரோல் மாடல் சூப்பர் மேனா?*
=================================
நமது வீட்டுப் பிள்ளைகளை நாம் சரியாக வளர்ப்பதற்கு முன்னுதாரணமாக காட்டத் தகுதியானவர் நபிகள் நாயகம் அவர்கள் மட்டுமே!.
பொதுவாகவே ஒன்றைப் பார்த்து தான் மற்றொன்றை உருவாக்க முடியும். ஒன்றைக் காட்டி தான் இது போன்று எனக்கு வேண்டும் என சொல்ல முடியும்.
அந்த வகையில் தான் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்தது போன்று நமது பிள்ளைகளும் வாழ வேண்டும் என நாம் ஆசைப்படுகிறோம்.
ஆனால் இன்று உலகம் முழுவதும் உள்ள வியாபாரிகள் சக்திமான், ஸ்பைடர் மேன் , சூப்பர் மேன், அக்வா மேன், பேட்மேன், அயன் மேன் , பிளாக் பேந்தர், கேப்டன் அமெரிக்கா, ஹல்க், தார், அவெஞ்சர்ஸ் டீம் போன்ற கார்ட்டூன் வழி கதாநாயகர்களை உருவாக்கி, "இவர்களை நீங்கள் பின்பற்றுங்கள்; நீங்கள் நேர்வழி அடைவீர்" என்பது போன்று தொலைக்காட்சித் தொடர்களையும், சினிமாக்களையும், பிளே ஸ்டோரில் லட்சக்கணக்கான கேம் விளையாட்டுகளையும் எடுத்து நமது இல்லத்திற்கே கொண்டு வந்து சேர்க்கிறார்கள்.
இதனால் நமது பிள்ளைகளும், இளைஞர்களும், இளைஞிகளும் நாம் எவ்வாறான வாழ்வை வாழ்வது என்பதில் பெரும் தடுமாற்றத்தில் இருக்கிறார்கள்.
அதே நேரம் இந்த சூப்பர் மேன் உருவாக்கத்தில் மற்றொரு கருத்தும் மறைந்திருக்கிறது. மேற்சொல்லப்பட்ட அத்தனை 'மேன்'களும் மக்களை காப்பது போலவும், உலகத்தை காப்பது போலவும் வடிவமைத்திருக்கிறார்கள்.
இவர்களைப் போன்று நீங்கள் இருக்க வேண்டும் என்றுதான் அந்த கதாபாத்திரங்களை உருவாக்கியவர்கள் சொல்ல வருகிறார்கள்.
சமூகம் மிகப்பெரிய அளவில் சீரழிந்து வரும் வேளையில் இவ்வாறான கதாபாத்திரங்களை மனிதர்கள் யோசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி இவ்வாறான கதாபாத்திரங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள் .
ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே அனைத்து நற்குணங்களையும், நற்செயல்களையும் ஒருங்கே பெற்ற உண்மை நாயகரான அண்ணல் நபி (ஸல்) அவர்களை நமக்கு அல்லாஹ் வழங்கி இருக்கின்றான்.
எனவே உங்கள் வீட்டுப் பிள்ளைகள் நல்லவர்களாக, உலகம் போற்றும் உத்தமர்களாக வளர வேண்டுமானால் நபிகள் நாயகம் குறித்த நற்செய்திகளை, வரலாறுகளை, சம்பவங்களை உங்களின் எல்லா சந்தர்ப்பங்களிலும் உங்கள் பிள்ளைகளுக்கு நினைவு படுத்திக் கொண்டே இருங்கள்.
அவர்களின் காதுகளுக்கும், கண்களுக்கும் சென்றடையும் வகையில் புத்தகங்களாக, பென்டிரைவுகளாக, புகைப்படங்களாக, வீடியோ காட்சிகளாக கண்ணுக்கு முன்னால் வையுங்கள்.
நீங்களும் கூட அதாவது பெற்றோரும், தாத்தா பாட்டிகளும் பிள்ளைகள் வீட்டில் இருக்கும்போது நபிகள் நாயகம் குறித்தும், இஸ்லாம் குறித்தும் பேசுங்கள்; படியுங்கள்; காட்சி ஊடகங்களில் பாருங்கள்.
அதன் காரணமாக உங்கள் பிள்ளைகள் வாழ்வின் எல்லா சந்தர்ப்பங்களிலும் நபிகள் நாயகத்தை பின்பற்றி வாழ்வதற்கு தன்னை தயார் படுத்திக் கொள்வார்கள்.
உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளாத வரை, உங்கள் பிள்ளைகளை எந்த வகையிலும் நீங்கள் மாற்றிட இயலாது.
தொடரும்.....
Comments
Post a Comment