உலகின் முதல் முன்மாதிரி மனிதர் நபிகள் நாயகம்
உலகின் முதல்
முன்மாதிரி மனிதர் நபிகள் நாயகம்
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
தொடர்ச்சி : 2
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷|->
لَّقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا
அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது; ( யாருக்கு என்றால் ) அல்லாஹ்வையும், மறுமை நாளையும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்வோருக்கு தான்.
(அல்குர்ஆன் 33:21)
أُسْوَةٌ حَسَنَةٌ
எனும் சொல் திருக்குர்ஆனில் மூன்று இடங்களில் இடம்பெற்றுள்ளது. 33 : 21 / 60 : 4,6/
33 : 21 ஆம் வசனம் நபி (ஸல்) அவர்களின் வாழ்வியலை பேசுகிறது. 60 : 4,6 ஆகிய இரண்டு வசனங்களும் இப்ராஹீம் (அலை) அவர்களையும் அவரோடு இருந்த முஸ்லிம்களின் வாழ்க்கை முறையையும் குறித்துப் பேசுகிறது.
இன்றைய, "21 ஆம் நூற்றாண்டில் வாழ்வோரும் நபி (ஸல்) அவர்கள் மற்றும் இப்ராஹீம் (அலை) அவர்கள் மற்றும் இப்ராஹீம் (அலை) அவர்களோடு வாழ்ந்த முஸ்லிம்கள் ஆகிய மூவரை நீங்கள் கண்மூடித்தனமாக பின்பற்றி நடங்கள்; அவர்களின் வாழ்வியல் உங்களுக்கு அழகிய வழிகாட்டுதலை தரும்" என அல்லாஹ் சாட்சி அளிக்கிறான்.
நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களையும் இணைத்துக் கொண்டு, "என் தோழர்களில் எவரை நீங்கள் பின்பற்றினாலும் நேர்வழி அடைவீர்கள்" ( திர்மிதீ ) என்று சொல்லி அவர்களையும் உஸ்வத்துன் ஹசனா எனும் உயரிய சொல்லில் இணைத்திருக்கிறார்கள்.
நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் மக்கமா நகரத்தை பாதுகாக்கப்பட்ட நகரமாகவும், அருள் வளம் நிறைந்த நகரமாகவும் ஆகுவதற்கு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். அவ்வாறே அல்லாஹ்வும் ஏற்றுக் கொண்டான்.
நபி (ஸல்) அவர்கள் மதீனாவை நோய் நொடியில் இருந்து பாதுகாக்கப்பட்ட நகரமாகவும், மக்காவை விட அதிக அருள் வளம் நிறைந்த நகரமாகவும் ஆகுவதற்கு பிரார்த்தனை செய்தார்கள். அல்லாஹ் அதனையும் ஏற்றுக் கொண்டான்.
அந்த வரிசையில் தான் இப்ராஹீம் நபியும் அவரோடு இருந்தவர்களும் அழகிய முன்மாதிரியாக இருப்பது போன்று நபி (ஸல்) அவர்களும் அவரோடு வாழ்ந்த தோழர்களும் அழகிய முன்மாதிரி என்னும் சொல்லாடலுக்குள் கட்டுப்படுவார்கள்.
நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் மற்றும் இவ்விருவரை பின்பற்றியவர்களின் வாழ்வியலை நாம் பின்பற்றி வாழ பொது அனுமதி இருக்கிறது .
ஆனால் நம்மிடையே நபி இப்ராஹிம் (அலை) மற்றும் அவரைப் பின் துயர்ந்தவர்களின் ஆதாரப்பூர்வமான வரலாறு இல்லை.
எனவே ஆதாரப்பூர்வமான வரலாறு உள்ள நபி (ஸல்) அவர்களையும் அவர்களின் தோழர்களையும் நாம் பின்பற்றி நடக்க கடமைப்பட்டுள்ளோம்.
அதைப்போல் மற்றொரு கருத்தையும் நாம் இங்கு நினைவு கூர வேண்டும்.
ஸூரதுல் அஹ்ஸாப் அருளப்பட்ட வரிசையில் 90 வது சூராவாகும். இந்த சூராவில் தான் 33 : 21 வசனம் அமையப் பெற்றுள்ளது. ஸூரதுல் மும்தஹினா அருளப்பட்ட வரிசையில் 91 வது சூராவாகும். இந்த சூராவில் தான் 60 : 4 ,6 ஆகிய வசனங்கள் இடம் பெற்றுள்ளது.
இப்ராஹிம் (அலை) அவர்களையும் அவருடைய தோழர்களையும் பின்பற்றுங்கள் என்று அல்லாஹ் சொல்லி இருந்தாலும் அல்லாஹ் திருக்குர்ஆன் வழியாக முதன் முதலில் நபி (ஸல்) அவர்களைத்தான் "உஸ்வத்துன் ஹசனா - அழகிய முன்மாதிரி இருக்கிறது அவரை நீங்கள் பின்பற்றுங்கள்" என்று சொல்லி இருக்கிறான்.
அதற்குப் பிறகுதான் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் குறித்தும் அவருடைய தோழர்கள் குறித்தும் சொல்லி இருக்கிறான் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
எனவே இறைவனால் உஸ்வத்துன் ஹசனா என முதன் முதலில் முன்மொழியப் பட்டவர் நபி (ஸல்) அவர்கள் ஆவார்கள். அவர்களை கண்மூடித்தனமாக நாம் பின்பற்றலாம்.
தொடரும்.....
Comments
Post a Comment