எனது வாழ்வை வளமாக்கியவர்களில் ஒருவர் கிப்லா ஹள்ரத் :
எனது வாழ்வை வளமாக்கியவர்களில் ஒருவர் கிப்லா ஹள்ரத் :
================================
ஒரு முறை ஓ. எம். ஹள்ரத் அவர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது சொன்னார்கள்.
நான் பாகியாத் ஸாலிஹாத் அரபுக் கல்லூரியில் நான்காம் வகுப்பு சேர சென்றிருந்தேன். அப்பொழுது கிப்லா ஹள்ரத் அவர்கள்தான் என்னை பரீட்சை கேட்டார்கள்.
அல்ஃபியாவில் இருந்து வாசிக்க சொன்னார்கள். நான் வாசித்து முடித்ததும், "நீ நான்காம் வகுப்பிலேயே சேர்ந்து கொள்" என்று அனுமதித்தார்கள்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு எனது குடும்ப கஷ்டம் மற்றும் வறுமை நிலையை ஹள்ரத் அவர்கள் தெரிந்து கொண்டு முதல் வகுப்பில் எனக்கு இரண்டு பாடங்களைப் போட்டார்கள்.
அதாவது உருது தமிழ் மாணவர்கள் அனைவரும் உருது ஆசிரியரிடம் பாடம் படித்தார்கள். அந்த வகுப்பில் உள்ள தமிழ் மாணவர்களுக்கு உருது விளங்காததால் அந்தப் பாடமும் விளங்காமல் இருந்தது.
விளங்காதப் பாடத்தை தமிழ் மாணவர்கள் தமிழ் மொழியில் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக அந்த மாணவர்கள் அனைவரும் என்னிடத்தில் வந்து படித்துக் கொள்ள வேண்டும் என ஹள்ரத் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
அந்த வகையில் நான் ஹிதாயத்துந் நஹ்வு ஓதி கொடுத்தேன். ஒரு பாடத்திற்கு 15 ரூபாய் என இரண்டு பாடங்களுக்காக எனக்கு மாதம் 30 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது. அதன் காரணமாக எனது பொருளாதாரப் பிரச்சனை முடிவுக்கு வந்தது.
அதனால் எப்பொழுதும் ஹள்ரத் அவர்கள் மீது நான் பேரன்பு கொண்டிருந்தேன்.
நான் ஹள்ரத் அவர்களிடம் நேரடியாக எந்த பாடமும் படிக்கவில்லை. ஹள்ரத் அவர்கள் பெரியப் பாடங்களை மட்டுமே நடத்திக் கொண்டிருந்தார்கள். ஹள்ரத் அவர்கள் பாகியாத்தில் இருந்த காலத்தில் நான் இரண்டு வருடம் ஓதினேன்.
பின்னர் ஹள்ரத் அவர்கள் கேரளா மற்றும் காயல்பட்டினங்களுக்குச் சென்று ஓதி கொடுத்தார்கள் .
ஹள்ரத் அவர்கள் பாகியத்தில் இருந்த காலத்தில் வெளி மாநிலங்களில் இருந்து தொப்பிகளை வரவைத்து வெள்ளிக்கிழமைகளில் என்னை விற்று வரும்படி சொல்லுவார்கள். நான் விற்று வந்து பணத்தை கொடுப்பேன். அதிலிருந்து ஹள்ரத் அவர்கள் எனக்கு ஒரு தொகையை கொடுப்பார்கள்.
ஹள்ரத் அவர்கள் தமது சொந்த ஊரான உத்தம பாளையத்திற்கு சென்று வரும் பொழுதெல்லாம் ஏலக்காய், கிராம்பு, பட்டை, மிளகு போன்றவைகளை கொண்டு வந்து வேலூரில் சில கடைகளுக்கு விற்பனை செய்வார்கள். அந்த பொருட்களை கொண்டுச் சென்று கொடுப்பது பணம் வசூலித்து வருவது போன்ற பணிகளையும் சில சமயங்களில் செய்வேன் அதற்காகவும் ஹள்ரத் அவர்கள் எனக்கு சிறிது பணம் தருவார்கள்.
இப்படி பாகியாத்தில் நான் ஓதும் காலத்தில் என் பொருளாதாரப் பிரச்சினைகளை நீக்கி முழுமையாக ஓதுவதின் பக்கம் கவனத்தை திருப்பி விட்டார்கள்.
எனவே எனக்கு கிப்லா ஹள்ரத் அவர்கள் மீது எப்பொழுதும் அலாதி பிரியம் இருந்தது.
நான் ஓதி முடித்ததும் கிப்லா ஹள்ரத் அவர்கள், "நீங்கள் ராஜகிரி காஸிமியா மதரஸாவிற்குச் சென்று ஓதிக்கொடுங்கள்; அது நான் ஓதிய மதரஸா; நீங்கள் பைலாவி எல்லாம் ஓதி கொடுப்பீர்கள்" என்று கூறினார்கள்.
நான் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பைலாவியை ஓதி கொடுத்திருக்கிறேன் அது அவர்களின் துஆ தான்!
Comments
Post a Comment