தாவூத் நபியைப் போன்று தீர்ப்புச் சொன்ன அலீ ரலி :
தாவூத் நபியைப் போன்று
தீர்ப்புச் சொன்ன அலீ ரலி :
=========================
وَفَصلَ الْخِطَابِ
வழக்குகளில் தீர்ப்பு கூறும் வல்லமையை அளித்தோம். 38;20
இதற்கு ஓர் உதாரணம் சொல்ல வேண்டுமானால் அலீ (ரலி) அவர்கள் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வைக் கூறலாம்.
ஒரு பள்ளிவாசலில் ஒர் இளைஞர் அமர்ந்து அழுதுக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்த அலீ (ரலி) அவர்கள் அவரிடம் சென்று, "ஏன் அழுகிறாய்?" என்று கேட்டார்கள்.
அதற்கு அவர், "எனது தந்தை பத்து நபர்களோடு வியாபாரம் செய்யச் சென்றிருந்தார்; ஒன்பது நபர்கள் திரும்பி வந்து விட்டார்கள்; எனது தந்தை திரும்பி வரவில்லை ; அவர் இறந்துவிட்டதாக வந்தவர்கள் சொன்னார்கள்; அவர் இறந்தாரா? உயிரோடு இருக்கின்றாரா? அல்லது எப்படி இறந்தார்? என்கிற சந்தேகம் எனக்குள் இருக்கின்றது" எனக் கூறினார்.
அலி (ரலி) அவர்கள்
والله لأَحْكُمَنَّ فِيهِمْ بِحُكْمٍ مَا حَكَمَ بِه خَلْقٌ قَبْلِي إِلَّا دَاوُدُ النَّبِيُّ عليه السلام
"இறைவன் மீது ஆணையாக! நபி தாவூத் (அலை) அவர்கள் தீர்ப்புச் சொன்னது போல் இவரின் விஷயத்தில் நான் தீர்ப்புச் சொல்லுவேன்" என்று கூறினார்கள்.
அந்த ஒன்பது நபரையும் அழைத்து பள்ளிவாசலின் பல்வேறுப் பகுதிகளில் தனித்தனியாக அமர வைத்துக் கொண்டார்கள்.
தன்னோடு ஐந்து நபர்களை அழைத்துக் கொண்டு ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகச் சென்று விசாரித்தார்கள்.
அப்பொழுது தன்னோடு அழைத்துச் சென்றவர்களிடம், "நான் அல்லாஹு அக்பர் என்று தக்பீர் சொல்லும் போது நீங்களும் சேர்ந்து சப்தமாக தக்பீர் சொல்ல வேண்டும்" என்று சொல்லி அழைத்துச் சென்றார்கள் .
முதல் நபரிடம் சென்று, "உனது ஊர் எது? உனது பெயர் என்ன? உனது தந்தையின் பெயர் என்ன? இறந்தவருக்கும் உனக்கும் என்ன தொடர்பு? அவர் எங்கு இறந்தார்? எதன் காரணமாக இறந்தார்? அவரை எங்குப் புதைத்தீர்கள்? யார் ஜனாஸா தொழ வைத்தது? யார் அவரைக் குளிப்பாட்டியது? யார் யார் குழிக்குள் இறங்கியது? என்பதுப் போன்று கேள்வி கேட்டார்கள்.
அவர், உண்மையோ பொய்யோ ஏதோ ஒரு பதிலைச் சொன்னார்.
ஒரு கட்டத்தில் அலீ (ரலி) அவர்கள் தக்பீர் கூறினார்கள். உடன் இருந்தவர்களும் சேர்ந்தார் போல் சப்தமாகத் தக்பீர் கூறினார்கள்.
பின்னர் இரண்டாமவரிடம் சென்று இதைப் போன்று கேள்வி கேட்டுக் கொண்டே வந்தார்கள். அவரும் உண்மையோ பொய்யோ ஏதோ ஒரு பதிலைச் சொல்லிக்கொண்டே வந்தார். அலீ (ரலி) அவர்கள் தக்பீர் கூறினார்கள். உடன் வந்திருந்தவர்களும் சப்தமாகத் தக்பீர் கூறினார்கள் .
இந்தக் காட்சியைப் பார்த்த மற்ற ஏழு நபர்களும் அரண்டுப் போனார்கள். "இருவரும் உண்மையை சொல்லிவிட்டார்கள் போல் தெரிகிறது" என நினைத்துக் கொண்டார்கள் .
மூன்றாமவரிடம் சென்றதும் அவர், "நான் அவரை கொலை செய்யவில்லை; நான் அதைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன்; அவர்தான் காலைப் பிடித்தார்; இவர் கையைப் பிடித்தார்; இன்னவர் கழுத்தைப் பிடித்தார்" என்று உண்மையை சொல்லிவிட்டார். பிறகு அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட்டது.
நூல்: பிஹாருல் அன்வார், அல் காஃபீ
Comments
Post a Comment