திருக்குர்ஆன் தமிழ் அகராதி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?
திருக்குர்ஆன் தமிழ்
தர்ஜமா தஃப்ஸீர் ஒரு ஆய்வு
=====≠======================
திருக்குர்ஆன் தமிழ் அகராதி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?
==============================
2004 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை சென்னைப் புதுக் கல்லூரியில் நான் படித்துக் கொண்டிருந்த காலத்தில் எனது பேராசிரியர்களில் ஒருவரான கண்ணியத்திற்கும், பெரும் மதிப்பிற்கும் உரிய Dr. காரமத்துல்லாஹ் பஹ்மனி அவர்கள் நான் பார்த்து வியந்த மாபெரும் அறிஞர்.
பல்கலைக்கழகங்களில் பல முனைவர்கள் ஒன்றிணைந்து பல வருடங்களாக ஆய்வு செய்து எழுதி வெளியிட வேண்டிய பணிகளை எனது ஆசிரியர் அவர்கள் சில ஆண்டுகளில் தனியாக பல ஆய்வு நூல்களை எழுதி சமூகத்திற்கு வழங்கி இருக்கிறார்கள்.
அப்படி வழங்கப்பட்ட நூல்களில் ஒன்றுதான், "அல்ஃபாளில் ஃகுர்ஆன் - திருக்ஃகுர்ஆன் சொல்லகராதி".
இதில் திருக்குர்ஆனுடைய ஒவ்வொரு சொல்லையும் அரபு மொழி அகர வரிசை அடிப்படையில் தொகுத்து, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பொருளையும், அந்த வார்த்தைகள் இடம் பெறும் அத்தியாயம் மற்றும் வசனங்களின் எண்களையும் குறிப்பிட்டு இருக்கிறார்.
மொத்த அரபி எழுத்துகள் 28 இல் 8 ஆவது எழுத்து தால்' (د )
இந்த எழுத்தில் தொடங்கும் சொற்கள் பல திருக்குர்ஆனில் இடம் பெறுகின்றன. அவற்றில் 'தகல' எனும் இறந்தகால வினைச் சொல்லை எடுத்துக்கொள்வோம். இதற்கு 'நுழைந்தான்' என்று பொருள்.
இச்சொல் குர்ஆனில் ஐந்து இடங்களில் இடம்பெறுகிறது அவ்வசனங்கள்: 3:37,12:36, 18:35, 28:15, 71:28.
முதல் வசனத்தில் 'குல்லமா தகல' Jis litம் எனும் சொற்றொடர் இடம் பெறுகிறது. இதற்கு ஆங்கிலத்தில் 'Every Time He Entered' எனும் பொருள் இடம் பெறுகிறது.
தமிழில், 'நுழையும் போதெல்லாம்' எனும் பொருள் இடம்பெறுகிறது.
அவ்வாறே, அடுத்தடுத்த வசனங்களில் இடம்பெறும் இச்சொல்லுக்கு, அந்தந்த வசனங்களின் நிலைக்கேற்ப பொருள் அளிக்கப்பட்டுள்ளது.
திருக்குர்ஆனுக்கு சொல்லகராதி தமிழில் இதுவரை வெளி வரவில்லை; அந்தக் குறையை இந்த பேரகராதி நிவர்த்தி செய்து இருக்கிறது.
அதாவது திருக்குர்ஆன் தமிழில் பல்வேறு வடிவங்களில் வெளிவந்துள்ளது.
1. தர்ஜமா
2. தஃப்ஸீர்
3. திருக்குர்ஆன் சொல்லகராதி
4. அர்வி - அரபு தமிழ் மொழியில் திருக்குர்ஆன் தர்ஜமா மற்றும் தஃப்ஸீர்.
5. தமிழ் ஒலி பெயர்ப்பில் (அதாவது 'அல்ஹம்து' என அரபு மொழியில் இல்லாமல் தமிழ் மொழியில்.... சாகுல் ஹமீது அண்ட் சன்ஸ் ஆறு பாகங்கள் - சுமார் 20-க்கும் மேற்பட்ட ஜுசுக்களை வெளியிட்டு இருக்கிறார்கள் என எண்ணுகிறேன்.
6. சொல்லுக்கு சொல் பொருள் எனும் வகையில் மர்ஹூம் முஹம்மது சுலைமான் பாகவி அவர்கள் எழுதிய துரூசுல் குர்ஆன், முகையதீன் உலவி அவர்கள் எழுதிய முதல் ஐந்து பாகங்கள், தற்பொழுது தாருல் ஹுதா - மவ்லவீ, உமர் ஷரீஃப் அவர்கள் வெளியிட்டுள்ள மூன்று பாகங்கள்.
இவ்வாறு திருக்குர்ஆனுக்கு பலரும் பல வகைகளில் சேவையாற்றி இருக்கிறார்கள். அவர்களின் சேவைகளை நாம் அங்கீகரிக்க வேண்டும். அந்த ஆலிம்களுக்கு நாம் மதிப்பளிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.
இவர்களில் வாழ்வோருக்கு உடல் ஆரோக்கியத்திற்கும் மற்றும் அனைத்து பாக்கியங்களும் பெற்று நல்வாழ்வு வாழ துஆ செய்ய வேண்டும்.
அத்துடன் காலம் சென்ற குர்ஆனிய பணியாளர்களுக்கு அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு, உயர்ந்த அந்தஸ்துகளையும் பெற்று இறை அன்மையையும் பெற்று மாப்பிள்ளைகள் உறங்குவது போல் புதைக் குழிகளில் உறங்க துஆ செய்வோம்.
குர்ஆனிய பணியை செய்ய தொடங்கி முழுமைப்படுத்தாதவர்கள் அதை முழுமைப்படுத்தவும் நாம் துஆ செய்ய கடமைப்பட்டு இருக்கின்றோம்.
எனது ஆசிரியத் தந்தை கராமத்துல்லாஹ் பஹ்மனி அவர்களின் தொலைபேசி எண் :
+919444323011
நாளை......
அரபி மொழி குர்ஆன் நம்மிடையே எப்படி வந்து சேர்ந்தது? அதை யார் எழுதியது? அதன் பின்னணிகள் என்ன?....
Comments
Post a Comment