தாஹா நபியின் தலைமைத்துவப் பண்புகள்
தாஹா நபியின்
தலைமைத்துவப் பண்புகள்
திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பாளர், மவ்லவீ, B. M. கலீலுர் ரஹ்மான் மன்பயீ
இமாம் : மஸ்ஜித் தக்வா மதரஸா பிலால்
சாந்தோம் சென்னை.
நல்ல சிந்தனைகளும் நல்ல ஆளுமை பண்புகளும் ஒரு சேர ஒருவரிடம் அமைந்துவிட்டால் அவர் சிறந்த தலைவராக, தன் நேரத்தை திட்டமிடுகிறவராக, பேச்சிலும் மொழியிலும் கவனம் செலுத்துகிறவராக, பணியாற்றும் உடல் வலிமை பெற்றவராக, போரிடும் ஆற்றல் பெற்றவராக, தளபதியாக தலைமை ஏற்கும் துணிவு உடையவராக, நாட்டை ஆளுகிற திறனுடையவராக, வணிகராக, நல்ல குடும்பத் தலைவராக ஆன்மீகத் தலைவராக ஆகிவிட முடியும்.
அனைத்து ஆற்றல்களும், குண நலன்களும், மனிதநேய மாண்புகளும், ஒருங்கே பெற்ற ஒப்பற்ற தலைவர் நபிகள் நாயகம் அவர்கள் இன்றும் கலங்கரை விளக்கமாக இருந்து ஒளி வீசி வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் எழுத படிக்கத் தெரியாத ஒரு உம்மி நபி என்று, வரலாற்றில் அழைக்கப்பட்டவர்; அவர் ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கினார்.
அதுவும் எப்படிப்பட்ட ஒரு சூழல் என்று பார்த்தால் உலகில் மிகப் பெரிய சாம்ராஜ்ஜியங்கள் - கிறிஸ்தவ சாம்ராஜ்ஜியம், எகிப்திய சாம்ராஜ்ஜியம், பாரசீக சாம்ராஜ்யம் ஆகியன ஆட்சி செய்து கொண்டிருந்த நிலையில், அவர் அரபு மக்களைத் திரட்டி ஒரு மிகப்பெரிய சமுதாயத்தை உருவாக்கினார்.
அதனால் நபிகள் நாயகம் அவர்கள் ஆளுமை மிக்கவராக உலக அறிஞர்களால் பார்க்கப்பட்ட வருகிறார்கள்.
"என் புத்தகத்தை படி ! என்னைப் படிக்காதே!" என்று சொன்ன அறிஞர்களுக்கு மத்தியில் நபிகள் நாயகம் அவர்கள் மட்டும் "என்னை முழுமையாக பின்பற்றுவோர் நேர்வழி பெறுவர்" என்று சொன்ன கருத்திலிருந்து தான் மரணிக்கின்ற வரை பின் வாங்கவில்லை!
நபிகள் நாயகம் அவர்கள் வணங்கப்படுகிறவர்களில் ஒருவராக இல்லாதிருக்கும் நிலையில், அவரின் வாழ்வியலும் வழிகாட்டுதலும் இன்றும் உலகின் பெருவாரியான மக்களால் பின்பற்றப்பட்டு வருவது அந்தந்த கால அறிஞர்களிடையே பிரமிப்பை ஏற்படுத்தி வருகிறது.
நபிகள் நாயகம் அவர்கள் ஊருக்கு உபதேசம் செய்யும் உத்தமராக இருக்கவில்லை; எந்த மாற்றமும் அவரிடமிருந்தே துவங்கும் உண்மையாளராக இருந்தார்.
நபிகள் நாயகம் அவர்களிடம் உயர்ந்த பண்புகள் இருந்ததாலே, குறைந்த காலத்தில் சமூகம், அரசியல், பொருளாதாரம், ஆன்மிகம் என அனைத்துத் துறையிலும் மிகப் பெரிய மாற்றங்களை அவர்களால் உண்டாக்க முடிந்தது.
உலகம் எத்தனையோ சீர்திருத்தவாதிகளையும், ஆன்மிக போதகர்களையும், தத்துவ ஞானிகளையும், சிந்தனையாளர்களையும், மன்னர்களையும், கவிஞர்களையும், அரசியல் தலைவர்களையும் சந்தித்துள்ளது;
மனித சமூகத்திற்கு பணிபுரிந்தவர்களின் வரிசையில் முதல் இடத்தை பெற்றிருப்பவர் நமது நாயகம் (ஸல்) அவர்கள் மட்டுமே!
ஒப்பற்ற தலைவர் :
=====================
நபிகள் நாயகம் அவர்கள் அரபு நாட்டில் பிறந்திருந்தாலும் அவர்களுடைய கொள்கை அரபு நாட்டைத் தாண்டி உலகம் முழுவதும் சென்று சேர்ந்து இருக்கிறது.
அவர்களை பின்பற்றுவோரில் 25 விழுக்காட்டினர் மட்டுமே அரபுகள்; மீதமுள்ள அனைவரும் அரபி அல்லாதவர்கள் என்பதிலிருந்தே அவர்கள் உலக மக்கள் அனைவருக்காகவும் செய்திகளை அருளியவர்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நபிகள் நாயகத்தை பின்பற்றுவோர் அவர்களை ஓர் இறைத்தூதர் என்று நம்புவதோடு நிறுத்திக் கொள்ளவில்லை; அவர் போதித்த விஷயங்களை அவர்களுடைய அழகிய வாழ்வியலையும், அழகிய முன்மாதிரிகளையும் இன்றளவும் குறைவின்றி பின்பற்றி வருகிறார்கள் என்றால் அது அவர்கள் மீதுள்ள நேசத்தை காட்டுவதோடு , அவர்களது கொள்கைகள் எப்போதும் எல்லோராலும் பின்பற்றத்தக்க சிரமம் இல்லாத மனித இயற்கைக்கு உட்பட்டதாகவும் உள்ளது என்பதை உணர்த்துகிறது.
உலகில் வாழ்ந்த ஆன்மிகத் தலைவர்கள், அறிஞர்கள் ஆகியோருடைய வரலாறு முறையாக பதிவு செய்யப்படவில்லை.
ஆனால் நபிகள் நாயகத்தின் வரலாறு இறைவனால் அருளப்பட்ட குர்ஆனில் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே பதிவு செய்யப்பட்டு விட்டது. அவர்கள் இறந்த பிறகு அவர்களுடைய தோழர்கள் சொன்ன செய்திகள் மூலம் முழுமையாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
எனவேதான் பிலிப் கே. ஹிட்டி "நபிகளார், வரலாற்றின் முழு ஒளியில் பிறந்தவர் - Mohammed was born in full light of history " என்று கூறினார்.
பொதுவாகவே மதங்கள் இறை நம்பிக்கை, மரணத்திற்குப் பிறகு சொர்க்கம், நரகம், விசாரணை போன்ற விஷயங்களைப் பேசும்.
மதம் சாராதவர்கள் அரசியல், பொருளாதாரம், சமூகம் போன்ற அன்றாட மனிதனின் பிரச்சனைகள் குறித்து பேசுவார்கள்.
ஆனால், நபிகள் நாயகம் அவர்கள் மட்டுமே இவ்விரு துறை சார்ந்த விஷயங்களைப் பேசி ஒரு சமநிலையை உருவாக்கினார்கள்;
மனிதர்கள் சந்திக்கின்ற பிரச்சனைகளுக்கு தீர்வுகளையும் வழங்கினார்கள்.
நபிகள் நாயகம் அவர்கள் அடைந்த வெற்றிகளுக்கு முதன்மைக் காரணம் அவர்களது எளிய, நேரடியாகப் பேசுகின்ற, நடைமுறை சார்ந்த நேர்மையான கோட்பாடுகள்தாம்.
மற்றொன்று அவர்களிடம் காணப்பட்ட வாய்மை, எளிமை, பணிவு, நீதி, அன்பு, கருணை, மன்னித்தல், ஈகை, அடித்தள மக்களை நேசித்தல் போன்ற பண்பு நலன்களும் ஆகும்.
நபிகளார், ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய அனைத்துப் பண்புகளும் ஒருசேர அமையப் பெற்றவர்களாக இருந்தார்கள்.
பெருமானார் மீது புனைவுகள் :
உலக வரலாற்றில் இஸ்லாமியர்களிடம் தோற்றுப்போன ரோம, பைசாந்திய, பாரசீக, ஐரோப்பிய பேரரசுகள் இஸ்லாத்தின் மீது கொண்ட பெரும் கோபத்தின் காரணமாக நபிகள் நாயகத்தை அவர்கள் தவறாகப் புரிந்து கொள்ளவில்லை;
மாறாக பிறர் தவறாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே வரலாறை தவறாக திரித்து எழுதினார்கள்.
நபிகள் நாயகம் அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து வந்த போது மதீனாவில் 2000 முஸ்லிம்களே இருந்தார்கள்; ஆனால் முஸ்லிம் அல்லாதவர்கள் மதீனாவிலும் தன்னை சுற்றிலும் 20 ஆயிரத்திற்கும் மேல் இருந்தார்கள்.
சிறுபான்மையினராக இருந்த முஸ்லிம்கள், பெரும்பான்மையினரையும் உள்ளடக்கி ஆட்சி செய்வது எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
ஆனால், நபிகள் நாயகம் அவர்கள் சிறந்த உத்திகள் மூலம் நேர்மையான முறையில் மதீனாவை சுற்றி வாழ்ந்த இனக் குழுவினரோடு சமாதான உடன்படிக்கையை எழுத்து வடிவில் செய்து கொண்டு சுமூகமாக வாழ்ந்தார்கள்; ஆட்சி செய்தார்கள்.
விரட்டப்பட்டவர் பெற்ற வெற்றி :
எந்த நாட்டை விட்டு நபிகள் நாயகம் அவர்களும், அவர்களுடைய தோழர்களும் விரட்டப்பட்டு வெளியில் வந்தார்களோ அந்த மக்கா நகரத்து மனிதர்களை பத்ரு, உஹத் போர்கள் மூலம் தோல்வியடையச் செய்து, எதிரிகளை முஸ்லிம்களின் பக்கமும் நியாயம் இருக்கிறது என்பதை உணரச் செய்தார்கள்.
அதே நேரம் மதீனாவை சுற்றி வாழ்ந்த எதிரிகளிடம் போர் செய்து அவர்களையும் முடக்கினார்கள்.
ஹுதைபியா உடன்படிக்கையும், அதற்குப் பிறகு மக்கா வெற்றியையும் பெற்று மாபெரும் வல்லரசாக மக்களுக்கு நல்லறசாக உருவானார்கள்.
செய்த போர்கள் அனைத்திலும் வெற்றி பெற்று வந்த நபிகள் நாயகம் அவர்கள் விரும்பி இருந்தால் முழு அரபு நாட்டையும் வெற்றி கொண்டிருக்க முடியும்.
ஆனால், அவர்களது நோக்கம் முழு அரபு நாட்டையும் இஸ்லாத்தை ஏற்க வைக்க வேண்டும் என்பதில் தான் கவனம் இருந்தது.
அதை தன் மரணத்திற்கு முன்பு சாதித்துக் காட்டினார்கள்; ஆம்! மக்கா, மதீனாவில் முஸ்லிம் அல்லாதவர்கள் எவரும் இல்லை!
ஹுதைபியா உடன்படிக்கையில் எதிரிகள் முன்வைத்த அனைத்து ஷரத்துகளும் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிராகவே இருந்தது.
ஆனாலும் அதை நபிகள் நாயகம் அவர்கள் ஏற்றுக் கொண்டதற்கு காரணம் முஸ்லிம்கள் போரை தவிர்த்து சமாதானத்தை விரும்புகின்றனர் என்பதை இதன் மூலம் உணர்த்ததான்!
மேலும் இஸ்லாம் அனைத்து தரப்பு மக்களிடமும் சென்று சேர வேண்டுமானால் வாழும் இடத்தில் ஓர் அமைதியான சூழல் நிலவ வேண்டும் என்பதை நபிகள் நாயகம் அவர்கள் அறிந்து இருந்ததால்தான்.
மக்காவில் 13 வருடங்களும், மதீனாவில் 8 வருடங்களும் என 21 வருடங்கள் மக்கா வாழ் மக்களால் பெரும் இன்னல்களை சந்தித்த நபிகள் நாயகம் அவர்கள் மக்காவை வெற்றி கொண்ட பிறகு நினைத்திருந்தால் மக்காவில் வசித்த அனைவரையும் பழிவாங்கி இருக்கலாம்.
ஆனால் மன்னித்தார்கள்; மன்னித்ததால் எதிரிகளின் இதயங்களை ஈர்த்தார்கள்; எதிரிகள் ஒவ்வொருவரும் இஸ்லாத்தில் இணைந்து முந்தைய தவறுகளுக்கு நபிகளாரிடம் மன்னிப்பு கேட்டார்கள்.
பனூ முஸ்தலிக் போரின் போது மதீனாவில் பொருளாதார நெருக்கடி தலைவிரித்தாடியது; அந்த சந்தர்ப்பத்தில் அந்தப் போரில் பிடிக்கப்பட்ட கைதிகளில் ஒருவரான ஜுவைரியா (ரலி) என்பவரை நபிகள் நாயகம் அவர்கள் மறுமணம் செய்து கொண்டார்கள்.
அதனால் அந்த போரில் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் பிணைத்தொகை எதுவும் பெறாமல் நபிகளாரின் மனைவியின் உறவினர் என்கிற அடிப்படையில் நபித்தோழர்கள் அனைவரையும் விடுதலை செய்தார்கள்.
நபிகளாரோ அல்லது தோழர்களோ நினைத்திருந்தால் பிணை கைதிகள் ஒவ்வொரிடம் இருந்தும் ஒரு தொகையை பெற்றுக்கொண்டு விடுதலை செய்திருந்தால், முஸ்லிம்களின் பொருளாதாரப் பிரச்சனை தீர்ந்திருக்கும்; ஆனால் அதை செய்யவில்லை.
காரணம் எதிரிகளை கவர்வதிலும், இஸ்லாத்தின்பால் ஈர்பதிலுமே நபிகளார் கவனமாக இருந்தார்கள் என்பதையே இந்த நிகழ்வு உணர்த்துகிறது.
அரசியல் ஆளுமை :
நபிகள் நாயகம் அவர்களுடைய அணியில் பெரும்பாலும் ஏழைகளே இருந்தார்கள்; பொருளாதாரத்தில் வலிமை குன்றியவர்களாகவே இருந்தார்கள்; ஆனாலும் வழியென திணிக்கப்பட்ட அனைத்து போர்களிலும் வெற்றி வாகை சூடினார்கள்.
ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு மக்கா வெற்றிக்கு பின்னர் மக்காவிலிருந்து 27 கிலோமீட்டர் தொலைவில் ஜிஃரானா எனும் இடத்தில் வாழ்ந்து வந்த பனீ ஹவாஜீன் கோத்திரத்தார் நபிகளாரை எதிர்த்து போரிட்டுத் தோல்வியடைந்தார்கள்.
இந்தப் போரில் 24,000 ஒட்டகங்கள், 40,000 ஆடுகள், 4000 அவுன்ஸ் வெள்ளி, 6000 கைதிகள் ஆகியவை முஸ்லிம்களுக்குக் கிடைத்தன.
இஸ்லாமியச் சட்டப்படி போரில் கிடைத்த பொருட்களில் ஐந்தில் ஒரு பகுதி அரசுக்கு சென்று விடும். மற்றவை போரில் ஈடுபட்டவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் (போர் வீரர்களுக்கு ஊதியம் கொடுப்பது என்ற நடைமுறை அன்று கிடையாது)
எனவே, முஸ்லிம் வீரர்கள் தமக்குக் கிடைக்க இருக்கும் பெரும் போர்ப் பரிசுகளுக்காகக் காத்திருந்தனர்.
ஆனால், நபிகளாரின் சிந்தனையோ வேறு விதமாக இருந்தது. ஹவாஜீன்களின் எதிர்ப்பை மழுங்கச் செய்து அவர்களை இஸ்லாத்தில் சேர்த்து விடவேண்டும் என்பதே நபிகளாரின் நோக்கமாக இருந்தது.
கைப்பற்றப்பட்ட பொருட்களைத் திருப்பித்தரவும், கைதிகளை விடுவிக்கவும் நபிகளார் விரும்பினார்கள். அரசுக்கு வரவேண்டிய ஐந்தில் ஒரு பகுதி செல்வத்தைப் பற்றி முடிவு எடுக்கும் அதிகாரம் நபிகளார் கையில் இருந்தது.
ஆனால், முஸ்லிம் வீரர்களுக்குச் சேர வேண்டிய பொருட்களைத் திருப்பித் தருவது குறித்து அவ்வீரர்கள் தாம் முடிவு எடுக்க வேண்டும்.
இத்தகைய சூழலில் தோல்வியுற்ற ஹவாஜீன்கள் பெருமானாரிடம் தம் மீது கருணை காட்டுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
போரில் கிடைத்த பொருட்களில் பெரும் பகுதி வீரர்களுக்கே போய்ச் சேரும் என்பதாக நபிகளார் எடுத்துக் கூறினார்கள்.
அத்தோடு, அவர்களை இஸ்லாத்தில் இணைந்து விடுமாறும் கூறினார்கள். அதனை ஹவாஜீன்கள் ஏற்றுக் கொண்டு, தமது பொருட்களைத் திருப்பித்தருமாறு மீண்டும் வேண்டினார்கள்.
முதலில் நபிகள் நாயகம் தமது பங்கையும் அவர்களது ஹாஷிம் கோத்திரத்தாருக்கு உரிய பங்கையும் திருப்பித்தர முன்வந்தார்கள்.
நபிகளாரின் முன் மாதிரியைப் பின்பற்றி ஒரு சிறு பிரிவினரைத் தவிர பெருவாரியான மக்கத்து முஹாஜிர்களும், அன்சாரிகளும் தமது பங்குகளை ஹவாஜீன்களுக்குத் திருப்பித் தருவதற்கு முன்வந்தனர்.
போர்ப் பொருள்களையும், கைதிகளையும் திருப்பித் தர மறுத்தவர்களுக்கு பெருமானார் கணிசமான ஈட்டுத்தொகை கொடுத்து அவர்களையும் சம்மதிக்க வைத்தனர். இவ்வாறு அனைத்து ஹவாஜீன்களும் விடுவிக்கப்பட்டனர்.
அதேநேரம் அனைத்து ஹவாஜீன்களும் இஸ்லாத்திற்கு இணைந்து இன்பமாக வாழ்ந்தார்கள். நிலங்களை வெற்றி கொள்வதை விட உள்ளங்களை வெற்றி கொள்வதே பெருமானாரின் இலக்காக இருந்தது.
நபிகள் நாயகம் அவர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் கையாளுமுறை, இதுவரை எவரும் கையாண்டிறாத முறையாக இருந்தது.
இந்த நிகழ்வுக்கு பிறகு தான் அல்லாஹ்
وما أرسلناك إلا رحمة للعالمين}(الأنبياء:107)
நபியே உம்மை நாம் அகிலத்தாருக்கு அருளாகவே அன்றி அனுப்பி வைக்கவில்லை 21: 107 என் வசனத்தை அல்லாஹ் அருளினான்.
புகாரி, முஸ்லிம், நஸாயீ, அபூதாவூத் போன்ற நூல்களில் இடம் பெற்றுள்ள ஹதீஸ்களின் தொகுப்பு தான் மேலுள்ள கருத்து.
தொண்டர்களுக்கு
தொண்டு செய்த தொண்டாளர் :
நபித்தோழர் அபூ ஹத்ரத் அல் ஸல்மீ (ரலி) அவர்கள் ஒரு யூதரிடமிருந்து கடன் வாங்கியிருந்தார்கள். உரிய நேரத்தில் கடனை அவரால் திருப்பிச் செலுத்த இயலவில்லை.
இதனால் சினம்கொண்ட யூதர் அபூ ஹத்ரத் (ரலி) அவர்களை நபிகளாரிடம் அழைந்து வந்து கடனைத் திருப்பிச் செலுத்த அவருக்கு உதவுமாறு கோரினார்.
நபிகளார் அபூ ஹத்ரத்தை நோக்கி ''உரிய நேரத்தில் கடனைச் செலுத்த வேண்டும்!" என்று கூறினார்கள்.
"இறைத்தூதரே! என்னிடத்தில் நான் உடுத்தியிருக்கும் துணிகளைத் தவிர வேறு எதுவும் இல்லை! இறைவன் எனக்கு உதவினால், நான் பின்னர் கடனைச் செலுத்தி விடுவேன்!" என்று கூறினார்.
கடனைத் திருப்பித் தரும் தவணையை நீட்டித்தருமாறு நபிகளார் யூதரிடம் வேண்டியும் அதனை அவர் மறுத்து விட்டார். நபிகளார் யூதரை நோக்கி, "இப்போது என்னிடத்தில எந்தப் பணமும் இல்லை!. ஆனால் எனது ஆடையின் கீழ்ப்பகுதியை (இஜார்) உமக்குத் தருகிறேன்!" என்று கூறிவிட்டுத் தமது உடலின் கீழ்ப்பகுதியைத் தமது தலைபாகையினால் மறைத்துக்கொண்டு அவர்களது உடையின் கீழ்ப்பகுதியை யூதருக்கு கொடுத்து விட்டார்கள்; அதனால் திருப்தி அடைந்தவராக யூதர் வீடு திரும்பினார்.
நூல் : முஸ்னது அஹ்மத்
இயக்கப் பணிக்காக தொண்டர்களை பயன்படுத்திவிட்டு அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம், பொருளாதார சூழ்நிலைகள், அவர்கள் படும் சிரமங்கள் ஆகியவற்றை கவனத்தில் கொள்ளாமல் இருப்பவன் தலைவன் அல்ல! சுயநலமிக்க தலைவர்களால் எந்த இயக்கமும் நிலைத்து நிற்காது என்பது வரலாறு.
நபிகள் நாயகம் அவர்கள் தம் தோழர்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்தி அவர்களின் தேவைகளை நிறைவு செய்தார்கள்; அவர்களின் சிரமங்கள் நீங்க நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்; அவர்கள் சொந்த வாழ்வில் முன்னேற உதவிகளையும், உற்சாகத்தையும் வழங்கி வந்தார்கள்.
தொண்டர்களுக்காக வாழ்ந்த ஒரு தலைவரின் நிகழ்ச்சியை தான் நீங்கள் மேலே கண்டீர்கள்.
கைதிகளை நடத்திய விதம் :
பனீ அப்துத் தார் கோத்திரத்தைச் சேர்ந்த கலீஃபா பின் கியாத் (ரலி) அவர்கள் முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்களின் சகோதரர் அபூ அஜீஸ் என்ற பத்ரில் பிடிக்கப்பட்ட கைதியை கவனிக்கும் பொறுப்பை பெற்றார்கள்.
ஏழையான அந்தத் தோழர் தமது தேவைகளைக் குறைத்துக் கொண்டு, பேரீத்தம் பழங்களை மட்டும் சாப்பிட்டு தனது உணவை முடித்துக் கொண்டார். இவ்வாறு பல நாள் உணவு எதுவும் சாப்பிடாமல் பேரித்தம் பழத்தோடு நிறுத்திக் கொண்டார்.
அன்றைய அரேபியாவில் போர்க் கைதிகளைக் கொல்வதும், அவர்களை அடிமையாக ஆக்குவதும் நடைமுறையில் இருந்த எதார்த்தமான ஒரு பழக்கம் தான்!
ஒரு முறை கைதி அபூ அஜீஸ் அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்ட போது நபித் தோழர் கலீஃபா பின் கியாத் (ரலி) அவர்களை நோக்கி, "நாம் இருவரும் ஏன் இந்த உணவை நமக்குள் பங்கிட்டு உண்ணக்கூடாது?" எனக் கேட்டார். அதற்கு நபித்தோழர், "استوصوا بالأسارى خيرا "
நபி (ஸல்) அவர்கள் கைதிகளைக் கருணையுடன் நடத்துங்கள்" என்று எங்களிடம் கூறியுள்ளார்கள்.
நாங்கள் இறை அன்பைப் பெறவும் நபியின் அன்பை பெறவும் இவ்வாறு செய்கிறோம்" என்று கூறினார்கள்.
கைதி அபூ அஜீஸ் உள்ளம் நெகிழ்ந்தவராக இறை நெறியை ஏற்றார்.
நூல்: இப்னு அஸீர், உஸுதுல் காபா
எதிரிகளையும், மாற்றுக் கருத்து உடையவர்களையும், போரில் பிடிபட்ட கைதிகளையும் நடத்திய விதத்தை வைத்து ஒரு தலைவனின் மனிதாபிமானத்தை எடை போடலாம்.
எதிரிகளுடன் கண்ணியமாகவும், பெருந்தன்மையுடனும் நடந்துகொள்பவரே ஒரு முன் மாதிரித் தலைவராக இருக்க முடியும்.
நபிகள் நாயகத்தின் மீது பல போர்கள் திணிக்கப்பட்டன. அப்போர்களில் பிடிபட்ட கைதிகளை அவர்கள் எவ்வாறு நடத்தினார்கள், எதிரிகளிடம் எப்படி நடந்து கொண்டார்கள் என்பது மனித குலத்திற்கு ஒரு சிறந்த படிப்பினையாகும்.
முஸ்லிம் அல்லாதவர்களால் கொண்டாடப்பட்ட நபிகள் நாயகம் :
ஒருமுறை குறைஷிகளின் முக்கியத் தலைவர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அவ்வேளையில் அவர்களிடையே இருந்த மிகவும் அனுபவமிக்க நளுர் பின் ஹாரிஸ் என்பவர் கூறினார்.
"குறைஷிகளே! உங்களுக்கு ஏற்பட்டுள்ள பேரிடரை நீக்க எந்தத் திட்டமும் உங்களிடம் இல்லை; முஹம்மத் சிறுவயது முதல் உங்கள் முன்னிலையிலேயே வளர்ந்துள்ளார்.
அனைவராலும் விரும்பப்படுவராகவும், நேர்மை நம்பிக்கை உடையவராகவும் இருக்கிறார். அவர் இப்போது பெரியவராகி, முதிர்ச்சி அடைந்து உங்களிடம் சில செய்திகளைச் சொன்னால் அவரை மந்திரவாதி, சூனியக்காரர், கவிஞர், பைத்தியக்காரர் என்று சொல்கிறீர்கள்.
இறைவன் மீது ஆணையாக! நான் அவர் வழங்கும் செய்தியைக் கேட்டுள்ளேன்! நீங்கள் சொல்லும் எதுவும் அவரிடத்தில் இல்லை! உங்கள் மீது ஒரு புதிய பேரிடர் விழுந்துள்ளது; அவரை நீங்கள் எதிர்கொள்ள இயலாமல் நிலை குலைந்து போய் இருக்கின்றீர்கள்" என்று கூறினார்.
இந்த நளுர் பின் ஹாரிஸ் சம்பந்தமாக திருக்குர்ஆனில் பத்துக்கும் மேற்பட்ட வசனங்கள் அருளப்பட்டுள்ளது. இவன் நபிகளாருக்கும் இஸ்லாத்திற்கும் எதிரானவன் தான்! ஆனால் அவன் நபிகள் நாயகம் குறித்து உண்மையவே பேசினான்.
"every saint had a past and every sinner has a future"
''ஒவ்வொரு புனிதருக்கும் ஒரு கடந்தகாலம் உண்டு. ஒவ்வொரு பாவிக்கும் ஒரு எதிர்காலம் உண்டு" என்பார்கள்.
எனவே, எல்லாப் புனிதர்களும் தொடக்கத்தில் பல தவறுகளைச் செய்திருப்பர். பின்னர், தங்களைத் திருத்திக் கொண்டு புனிதராக மாறியிருப்பர் என்பதே அதன் கருத்து.
ஆனால், இறைத்தூதர்கள் என்ற பொறுப்பில் இருப்பவர்களுக்கு இது பொருந்துவதில்லை - அவர்களின் வாழ்க்கை தொடக்கத்திலிருந்தே தூய்மையானதாக இருக்கும்.
அந்த வகையில் பிறப்பு முதல் இறப்பு வரை தூய்மையாளராக மட்டுமே வாழ்ந்த தூயவர்தான் நபிகள் நாயகம் அவர்கள்.
இதை நபிகள் நாயகம் அவர்கள் வாழ்ந்த காலத்தில் முஸ்லிமல்லாத அனைவரும் ஒப்புக்கொண்ட ஓர் உண்மை.
நபிகளாரின் பரம எதிரியான அபூஜஹல் ஒரு முறை நபிகளாரை நோக்கி, "முஹம்மதே! நீர் பொய்யர் அல்லர்! நீ கொண்டு வந்துள்ள செய்தி தான் பொய்யானது" என்று கூறினான்.
ஒருவரின் இளமைப் பருவத்திலும் பதவி, புகழ் ஆகியவற்றை அடைந்த நிலையிலும் நிலை தடுமாறாமல் உறுதியாக இருப்பவர்களே மனித குலத்தின் முன்மாதிரியாக திகழ முடியும்; இவை இரண்டுமே நபிகளாரிடம் காணப்படுகின்றது.
அதையே நளுர் பின் ஹாரிஸ் உடைய வாக்கு மூலமும், அபூ ஜஹல் உடைய வாக்கு மூலமும் உறுதிப்படுத்துகிறது.
*தன்னிலிருந்து மாற்றம் தொடங்கட்டும் :*
"சொன்னதைச் செய்! - அதை நீயே முதலில் செய்! மாற்றம் உன்னிலிருந்தே தொடங்கட்டும்!" இக்கோட்பாட்டைப் பின்பற்றுபவர்கள் மட்டுமே வாழ்வில் வெற்றி பெற முடியும்! சமூகத்தில் தாக்கங்களை ஏற்படுத்த முடியும்! ஊருக்கு உபதேசம் செய்யுவோரால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது!'
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 23 ஆண்டுகளில் அரேபிய மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டார்கள். அரேபியச் சமூகத்தில் முழுமையான மாற்றங்களைக் கொண்டு வந்தார்கள்.
அதற்கான காரணங்களில் ஒன்று தாம் சொன்னதைச் செய்வார்கள். எல்லோருக்கும் முன்னதாகச் செய்வார்கள். சமயக் கடமைகள், நற்பண்புகள், சமூக சேவை, அநீதிகளுக்கு எதிரான போராட்டம் என எல்லாவற்றிலும் அவர்களே முதல் ஆளாக நிற்பார்கள்.
மஸ்ஜிதுந் நபவி பள்ளிவாசலில் ஒருவர் சிறுநீர் கழித்து விட்டார்; அதை நபிகள் நாயகம் அவர்களே சுத்தம் செய்தார்கள்; நபிகள் நாயகம் அவர்கள் சொல்லியிருந்தால் அதை செய்வதற்கு பல நூறு பேர் முன் வந்திருப்பார்கள்.
இதே மஸ்ஜிதுந் நபவி பள்ளிவாசல் கட்டப்படும் போது கல், மண் சுமந்து இருக்கிறார்கள்;
ஒரு பயணத்தின் போது சமையல் வேலை நடந்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தாமும் சென்று விறகு பொறுக்கி வந்து கொடுத்தார்கள்; அடுப்பை தள்ளிவிட்டுக்கொண்டிருந்தார்கள்.
போர்க்களங்களில் முதல் வரிசையில் நின்றார்கள்; அகல் போரின் போது அனைவருக்கும் குளி தோண்டும் அளவை கொடுத்துவிட்டு தாம் குளி தோண்டும் அளவையும் அளவிட்டு முதலில் பணியை தொடங்கி முடித்தும் காட்டினார்கள்.
நபிகள் நாயகம் அவர்கள் சொன்னதை செய்தார்கள்; அதையும் முதலில் செய்தார்கள்; மக்களுக்கு உத்தரவிட்டதை விட அதிகமாக தாமே முன்வந்து செய்தார்கள் என்பதே வரலாறு.
*பணிவான பண்பாளர் நபிகள் நாயகம் :*
நபிகள் நாயகம் அவர்கள் தமது தோழர் அபூ ஹுரைரா (ரலி) அவர்களுடன் மதீனா கடைத்தெருவிற்குக் கால்சட்டை (கீழாடை) வாங்கச் சென்றார்கள்.
நபிகளார் ஒரு கால் சட்டையை எடுத்து அக்கால முறைப்படி கடைக்காரரிடம் கொடுத்து எடைபோடச் சொன்னார்கள்;
அப்போது அவர்கள் அக்கடைக்காரரிடம் "சரியாக எடை போடுங்கள்! எனக்கு எந்தச் சலுகையும் வேண்டாம்!" என்று கூறினார்கள்.
இதனைக் கண்டு ஆச்சரியமுற்ற கடைக்காரர், "எல்லா நுகர்வோரும் விலையைக் குறைக்கும்படியும், எடையை அவர்களுக்குச் சாதகமாக இருக்கும்படியும்" கூறுவர்.
ஆனால், இவர் அப்படியில்லையே என்று நபிகளாரை நோக்கி, "என்னிடம் இதுவரை யாரும் இப்படிப் பேசக் கேட்டதில்லை! நீங்கள் யார்?" என்று வினவினார்.
தோழர் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கடைக்காரரை, நோக்கி "உங்களுக்கு என்ன ஆனது? நபிகள் நாயகம் அவர்களை அடையாளம் காண முடியவில்லையா?" என்று கேட்டார்கள்.
கடைக்காரர் நபிகளாரைப் பற்றி கேள்விப்பட்டிருந்தார். ஆனால், அதுவரை நேரில் சந்தித்ததில்லை. நபிகளாரின் முகத்தை உற்றுப் பார்த்தார்.
நேர்மையும், வாய்மையும் உள்ள ஒரு மனிதரின் முகமாக அது இருந்தது. கடைக்காரர் எழுந்து பெருமானாரின் கரத்தில் முத்தமிட்டார்.
பணிவை விரும்பும் நபிகளார் இதனால் திகைப்புற்று தமது கரங்களை அவரிடமிருந்து விடுவித்துக் கொண்டு "இது நிராகரிப்போரின் வழிமுறை! அவர்கள்தாம், தமது மன்னர்களையும், ஆட்சியாளர்களையும் இவ்வாறு கண்ணியப்படுத்துவார்கள்! ஆனால், நான் உங்களில் ஒருவன்!" என்றார்கள்.
கடைக்காரர் நபிகளாரின் பணிவால் மேலும் கவரப்பட்டார். நபிகளார் துணியைக் கடைக்காரரிடமிருந்து பெற்றுக்கொண்டு கடையைவிட்டுப் புறப்பட்டார்கள்.
நபிதோழர் அபூ ஹுரைரா (ரலி) அந்தத் துணியை தன்னிடம் தருமாறு கூறினார்கள். நபிகளார் அபூ ஹுரைராவின் இந்தச் செயலைப் பாராட்டினார்கள். ஆனால், துணியை அவரிடம் தர மறுத்துத் தாமே சுமந்து வந்தார்கள்.
இதன் மூலம் மக்கள் ஒவ்வொருவரும் அவரவர் பணிகளை அவரவரே செய்ய வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்பினார்கள்.
''நான் எனது சுமையை சுமப்பேன்! அவரவர் சுமையை அவரவரே சுமக்க வேண்டும். ஆனால், ஒருவர் பலவீனமான வராகவோ, நோயாளியாகவோ, இயலாதவராகவோ இருந்தால் அவருக்கு மற்றவர்கள் உதவ வேண்டும்" என்று தோழர் அபூ ஹுரைரா (ரலி) அவர்களை நோக்கி நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்.
நூல் : ஜாதுல் மஆத், இப்னு ஹிஷாம்
ஒரு மனிதனின் மரியாதையை உயர்த்துவது பணிவுதான். பணிவான மனிதர்கள் எவரையும் எளிதில் கவர்ந்து விடுவார்கள்.
ஆனால், பலர் அலட்டிக் கொள்வதும், ஆணவமாக நடப்பதுமே பெருமை என்று எண்ணுகின்றனர்.
பணிவாக நடந்தால் தம்மை எவரும் மதிக்கமாட்டார்கள் என்று எண்ணி ஏமாந்து போகின்றனர்.
ஆணவத்திற்கு முன் அனைவரும் அடங்கிப் போவதைப் பார்த்து அதுவே சரி என்றும் எண்ணுகின்றனர். ஆனால், அது ஒரு பொய்யான மரியாதை என்பது எவருக்கும் புரிவதில்லை.
*ஏற்றம் தரும் பணிவு:*
அரேபி நாட்டில் தான தர்மங்களை தாராளமாக வழங்குவதில் புகழ்பெற்றவர் ஹாதிம் தை; இவரின் மகன் அதீ பின் ஹாதிம் என்பவர் நபிகள் நாயகம் அவர்களை சந்திக்க வந்தார்.
அப்போது அவர் கிறித்தவராக இருந்தார். ஒருபுறம் நபிகளாரின் தோழர்கள் நபிகளாருக்குக் காட்டிய பணிவையும் மரியாதையும் கண்டார்.
இன்னொரு புறம் புனிதப் போருக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப் படுவதையும் கண்டார். முஹம்மது ஒரு இறைத்தூதரா?
அல்லது அரசரா? என்று குழம்பிய நிலையில் இருந்தபோது, ஒரு அடிமைப் பெண் பெருமானாரைத் தனிமையில் சந்தித்து ஆலோசனை கேட்க விரும்பினார்.
"நீ விரும்பும் இடத்திற்கு வருகிறேன் வா!" எனக் கூறி அந்த அடிமைப் பெண்ணுடன் புறப்பட்டு சென்றார்கள் நபிகள் நாயகம் அவர்கள்.
எந்த அரசனும் இத்தனை பணிவாகவும், தன்னடக்கம் உடையவராகவும் இருப்பதில்லை. உடனே தனது கழுத்திலிருந்த சிலுவையைக் கழற்றிவிட்டு இஸ்லாத்தில் இணைந்தார் அதீ பின் ஹாதிம்.
ஏற்கெனவே பெருமானாரைச் சந்தித்து இஸ்லாம் பற்றிய உரையாடல்களை அவர் நிகழ்த்தி இருந்தார். நபிகளாரின் அடக்கமும், எளிமையும், பணிவும் அவரை இந்த முடிவு எடுக்கும்படித் தூண்டியது.
நூல் : இப்னு ஹஷாம்
நபிகள் நாயகம் அவர்கள் பணிவின் இலக்கணமாக, அடையாளமாகத் திகழ்ந்தார்கள்; பணிவு தரும் செயல்களையே செய்தார்கள்; புகழ்பாடுவதை வெறுத்தார்கள்; கூட்டங்களில் மக்கள் எழுந்து நின்று மரியாதை செய்வதைக் கண்டித்தார்கள்; ஏழைகளின் அழைப்பையும் ஏற்று செயல்பட்டார்கள்; அவர்களது வெற்றிக்குப் பணிவு ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது.
*முடிவுரை :*
(நபியே!) நன்மையும் தீமையும் சமமாகாது; ஒருவர் செய்த தீமையை நன்மையைக் கொண்டு நீர் எதிர்கொள்வீராக; அப்போது உமக்கும் அவருக்குமிடையே பகைமை இருந்தாலும் கூட அவர் உற்ற நண்பரைப் போன்று ஆகிவிடுவார். 41 : 34
மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு நற்குணங்களை போதிக்கின்றான்; நற்குணங்களை போதிப்பவர்களில் அல்லாஹுவை விட சிறந்தவர் வேறு யாரும் உண்டா?
சிறந்த ஒருவனிடம் இருந்து பெற்ற அறிவுரையை, செவித்தாழ்த்திக் கேட்டு ஏற்றுக் கொண்ட ஒருவரின் வரலாற்றில் நிகழ்ந்த சில சம்பவங்களைதான் உங்களுக்கு நான் சொல்லி இருக்கின்றேன்.
நபி (ஸல்) அவர்களிடம் இருந்த குணங்கள் அனைத்தும் ஒவ்வொரு தலைவரிடமும் இருக்க வேண்டிய குணங்களாகும்.
தாம் கொண்ட கொள்கையில் நம்பிக்கை கொண்டு, அதில் உறுதியாக இருந்து, தொடர்ந்து நிலையாக நின்று மக்களை அதன் பால் ஈர்த்த பாங்கு அவரைப் போன்று வேறு யாரும் இல்லை என்று வரலாறு சொல்லும் உண்மை!
ஏனென்றால் பல தலைவர்கள் தமது கொள்கைகளை காலத்திற்கு ஏற்றவாறு திருத்திக் கொண்டும், மாற்றிக் கொண்டும் இருந்திருக்கிறார்கள்; தம் வாழ்நாளில் தமது கொள்கைகளை மாற்றிக் கொள்ளாத ஒரே தலைவர் நபிகள் நாயகம் அவர்கள் மட்டுமே!
எதிராளிகளின் கோபமான பேச்சும் நடவடிக்கையும் தன்னில் எந்த சலனமும் உண்டாகாமல் எதிர்கொண்ட முறை மக்களை நபிகளாரின்பால் நெருங்கி வர காரணமாக அமைந்தது.
எந்த ஒரு அசாதாரண சூழ்நிலையிலும் உடனுக்குடன் நல்ல முடிவை எடுத்து செயல்படுத்தியும், சொல்லி செயல்பட தூண்டியும் மக்களின் கவனத்தை நபி (ஸல்) அவர்கள் பெற்றார்கள்.
ஒப்பனையற்ற, ஒப்பற்ற தலைவரான நபிகள் நாயகம் அவர்களை பின்பற்றுகிற ஒவ்வொருவரும் வாழும்போதும், மரணத்திற்குப் பிறகும் நல்லதையே அறுவடை செய்வார்கள்.
நபிகள் நாயகத்தை நேசியுங்கள்; நபிகள் நாயகத்தை வாசியுங்கள்; நபிகள் நாயகத்தைப் புரிந்து கொள்ளுங்கள்; புரிந்ததை நடைமுறைப்படுத்துங்கள்; நலம் பெறுவீர்!
Comments
Post a Comment