தொடர் : 20. என் உள்ளத்தில் இல்லை
என் உள்ளத்தில் இல்லை:
===========================
நேற்றைய தொடர்ச்சி.....20
மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்
====================================
•°•°•°•°
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களின் சிறப்புதன்மைகளை செவியேற்றிருந்த ஓர் இறைநேசர் அவர்களைக் காண வெகு தொலைவிலிருந்து நடந்து பக்தாதிற்கு வந்தார்.
வரும் வழியில் பல ஏக்கர் நிலங்களில் பேரீத்தம் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. பேரீத்த மரங்கள் மிகச் செழிப்போடு இருந்தது மட்டுமில்லாமல் அதிகமான பழ குலைகளை தாங்கியும் நின்றது.
இவ்வளவு செழிப்பான தோட்டத்தை இதற்கு முன் வேறு எங்கும் பார்த்திராத அவ்விறைநேசர் அங்கு சென்ற ஒருவரிடம் "இது யாருடைய தோப்பு?" எனக் கேட்டார்.
அவர் இது முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களுடையது" எனக் கூறினார். இவ்விறை நேசருக்கு திடுக்கம் ஏற்பட்டது. இப்படி நிலத்தின் மீதும் செல்வத்தின் மீதும் ஆசை வைத்துள்ள ஒருவர் எப்படி இறை நேசராக இருப்பார்? என எண்ணினார்.
ஆனாலும் அவர் தொடர்ந்து பக்தாது நகருக்குள் சென்றார். அங்கிருந்த பெரிய மளிகைக் கடை ஒன்றில் அதிகமான கூட்டம் காணப்பட்டது.
அவர்கள் அனைவரும் அக்கடையில் சாமான்கள் வாங்குவதற்காகதான் நிற்கிறார்கள் என்பதை அறிந்துக் கொண்டவர், "இது யாருடைய பல்பொருள் அங்காடி? என ஒருவரிடம் விசாரித்தார்.
இது முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களுடையது எனக் கூறிச் சென்றார். அவ்விறை நேசருக்கு மேலும் வியப்பானது; "அவர் இறைநேசர்தானா? நாம் தவறான விலாசத்திற்கு வந்து விட்டோமா?" என எண்ணினார்.
ஆனாலும் அவரை பார்த்துவிட வேண்டும் எனும் எண்ணத்தில் சென்று கொண்டு இருந்தார்கள்; அப்பொழுது மிகவும் அழகான மிகப்பெரிய மாளிகை ஒன்றைப் பார்த்தார்கள்.
அச்சமயம் தம்மை கடந்து சென்ற ஒருவரிடம், "இது யாருடைய மாளிகை" எனக் கேட்டார்; அதற்கு அவர், "இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களுடையது" எனக் கூறிச் சென்றார்.
வெகு தொலைவில் இருந்து வந்திருந்த இறைநேசருக்கு, "இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் இறைநேசரே அல்ல! இவரைக் காணவே வேண்டாம் என எண்ணித் திரும்பினார்.
ஆனாலும் மனம் கேட்கவில்லை சரி... இவ்வளவு தூரம் வந்துவிட்டோம், ஒரு முறை பார்த்துவிட்டுத்தான் செல்வோமே என மாளிகைக்குள் சென்று அதில் அவர்களின் அறைக்குள் சென்று ஸலாம் கூறினார்.
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் அவருக்கு பதில் கூறிவிட்டு
انما فى الارض فى الارض ليس في قلبي
"பூமியில் இருப்பது, பூமியில் தான் இருக்கிறது; அவை என் இதயத்தில் இல்லை” என அவ்விறை நேசரின் உள்ளத்து வினாவிற்கு பதில் கூறினார்கள்.
அவ்விறை நேசரும் வருத்தம் தெரிவித்தார். பிறகு இருவரும் பல மணி நேரம் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.
நூல் : நூருல் அப்ஸார்
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் ஹலாலான அனைத்து வியாபாரங் களையும் செய்தார்கள். பல கோடி கணக்கான பொற்காசுகளை வைத்துக்கொண்டு மிகப் பெரிய அளவில் வியாபாரம் செய்தார்கள்.
அவைகளை கொண்டு தாம் வளமாக வாழவில்லை. வரியவர்கள், ஏழை எளியவர்கள், ஏழை மாணவர்கள், கல்வி மற்றும் நிராதரவான வழி போக்கர்களுக்கு என செலவளித்தார்கள்.
இவர்கள் நேரடியாக இருந்து வணிகம் செய்யவில்லை. அது அதற்கும் ஆட்கள் வைத்து செய்தார்கள். சிறமப்படுபவர்களுக்கு கொடுப்பதற்காகவே சம்பாதித்த உலகின் ஒரே நபர் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் மட்டுமாகத்தான் இருக்க முடியும்.
இமாம் அவர்கள் தாம் உணவருந்தும் போது விருந்தாளிகள், பசித்தவர்கள் இல்லாமல் தனிமையில் உணவு சாப்பிட்டதே இல்லை.
மேலும் அவர்கள் பசித்தவர்களுக்கு உணவளிப்பதையே மிகச் சிறந்த செயலாக கூறுவார்கள். ஆகவே வாசகர்களாகிய நீங்கள் அவர்களுடைய வாழ்க்கையை பின்பற்றுங்கள்; அல்லாஹ் அருள் செய்வான்.
தொடரும்........
Comments
Post a Comment