இதயம் இறைஒளியால் நிரம்புவதே நோன்பு
இதயம் இறைஒளியால்
நிரம்புவதே நோன்பு
நேற்றைய தொடர்ச்சி....65
மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள்
=====================================
நோன்பு உடல் வழிப்பாடு மட்டுமல்ல! இதயத்தை சுத்தம் செய்யும் இனிய மாமருந்து.
நோன்பு, வயிற்றை காலியாக வைத்திருப்பதல்ல! இதயம் இறை ஒளியால் நிரம்பி இருப்பதுதான்!
உணவை தவிர்ப்பது எளிது! பாவங்களை தவிர்ப்பதே உண்மையான நோன்பு!
மனிதன் நோன்பு நோற்கும் பொழுது, அவனுடைய கண், நாவு, காது, ஆகியன கூட நோன்பு நோற்க வேண்டும்.
கப்பலில் இருந்து நங்கூரத்தை கடலில் போட்டு கப்பலை உறுதிப்படுத்துவது போன்றது நோன்பு; மனிதனின் இதயத்தையும், உடலையும் உறுதியாக வைத்திருக்கும்.
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் ஒவ்வொரு ரமலானையும் எதிர்பார்த்து காத்திருந்து நோன்பு நோற்பார்கள்.
நோன்பு நோற்பதற்கு சிறிதளவுதான் உணவை பயன்படுத்துவார்கள்; சில சமயங்களில் ஒரு பேரித்தம் பழத்தை சாப்பிட்டு ஸஹர் செய்வார்கள்.
நஃபில் நோன்பு என்று எதுவெல்லாம் உள்ளனவோ அவை அனைத்தையும் நேமமாக நூற்று வந்தார்கள்.
இளமைக் காலத்தில் ஒரு முறை இரண்டு வருடங்கள் தினமும் நோன்பு நோற்று தன் ஈமானை வலுப்படுத்திக் கொண்டார்கள்.
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் நடத்தி வந்த பாடசாலையில் ஒவ்வொரு நாள் ஸஹர் நேரத்திலும் 400 பேருக்கும் மேற்பட்டோர் உணவு உண்ணுவார்கள்.
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் ரமலான் மாதத்தில் பஸராவிலிருந்து பக்தாத் நோக்கி பயணமானார்கள்.
பயணத்திலும் தொடர்ந்து நோன்பு நோற்றுக் கொண்டே இருந்தார்கள்; கடும் வெப்பத்தின் காரணமாக பசி, தாகம் மற்றும் மிகவும் உடல் சோர்ந்து பக்தாத் நகரத்திற்குள் நுழைந்தார்கள்.
அங்கிருந்த ஒரு வீட்டு வாசலில் வந்த இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் இளைப்பாறினார்கள். அப்பொழுது அந்த வீட்டில் வசித்த வயதான பெண்மணி! "மகனே! நீண்ட தூரமாக இருந்து வந்திருக்கிறாய் போல் தெரிகிறது; பசி தாகமாக இருக்கின்றதா?" என்று கேட்டார்.
அதற்கு இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள், "நான் நோன்பு நோற்று இருக்கிறேன்" என்று சொன்னார்கள்.
அந்தப் பெண்மணி, "இன்று பக்தாதில் கடுமையான புயல் வீசியது; என் குழந்தைகளும் கூட நோன்பு நோற்று இருக்கிறார்கள்; நானும் நோன்பு நோற்று இருக்கிறேன்; ஆனால் வீடு இருக்கின்றது இஃப்தாருக்கு என்று எதுவும் இல்லை" என்று நாதழுதழுக்க கூறினார்.
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் தன் பையில் வைத்திருந்த உணவையும் சிறிதளவு பணத்தையும் எடுத்துக் கொடுத்து, "இன்றைய இஃப்தாருக்கு இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.
அந்த வயதான பெண் மன மகிழ்வின் உச்சத்திற்கு சென்று, "மகனே! அல்லாஹ் உன்னை உலகத்திற்கு வழிகாட்டியாக ஆக்கட்டும்" என்று பிரார்த்தித்து அனுப்பி வைத்தார்.
பிற்காலத்தில் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் அந்தப் பெண்ணின் துஆவுக்கு உரியவராக முழுமையாக ஆகியிருந்ததை நீங்களும் நானும் அறிந்திருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
நோன்பாளிக்கு நோன்பு துறக்க உதவுவது உயர்ந்த செயல்! எதிர்வரும் ரமலானில் அதை நாம் செய்வோம்.
முடிவுற்றது.....
அல்ஹம்துலில்லாஹ்!
10/12/2025
கடந்த 65 நாட்களாக வெளிவந்த இந்த தகவல்கள் அனைத்தும் நூல் வடிவில் உருவம் பெற அனைவரும் துஆ செய்யுங்கள்.
Comments
Post a Comment