மன்சூர் அல் ஜமாலை விடுதலை செய்!
மன்சூர்
அல் ஜமாலை விடுதலை செய்!
<=><=><=><=><=><=><=><=><=><=><=><=>
மாதம்: 13
தொடர்: 83
நபி {ஸல்} அவர்களை
நான் கனவில் பார்த்தேன்
<><><><><><><><><><><><><><><><><>
|•
|•
|•
|•
|•
அஹ்மத் பின் யஜீத் அல் முஹல்லபீ (ரஹ்) அவர்கள் கூறுவதாவது;
அப்பாஸியா கலீஃபாக்களில் ஒருவரான அல் முஃதமித் (ரஹ்) அவர்களிடம் ஒரு இரவு இருந்தோம்.
அவர் தன் படுக்கையில் தலையணையிலிருந்து தலையை தூக்கிக் கொண்டு "நீங்கள் யாரும் இங்கிருந்து செல்லக்கூடாது" என சொன்ன பிறகு அரை மணி நேரத்திற்கும் மேலாக உறங்கி விழித்தார்.
"சிறையில் உள்ள மன்சூர் அல் ஜம்மால் (ஒட்டகத்தை வைத்து தொழில் செய்கிறவர்) என்பவரை அழைத்து வாருங்கள்" என்று கூறினார்; அவ்வாறே அவர் அழைத்து வரப்பட்டார்.
கலீஃபா: எவ்வளவு காலமாக நீ சிறையில் இருக்கின்றாய்?
அவர்: மூன்று ஆண்டுகளாக....
கலீஃபா: உனது உண்மையான பிரச்சனையை சொல்!
அவர் : நான் மவ்சூல் நகரைச் சேர்ந்தவன்; எனக்கு ஒரு ஒட்டகம் இருந்தது; அதை வைத்து வேலைகள் செய்து என் குடும்பத்தை காப்பாற்றி வந்தேன்.
இந்நிலையில் மவ்சூல் நகரில் வேலைகள் குறைந்ததால் வருவாய் குறைந்து விட்டது; அதனால் இராக்கில் உள்ள சாம்ரா நகரத்துக்கு போகலாம் என்று எண்ணி புறப்பட்டேன்; அங்கு வேலைகள் அதிகம் இருக்கும் என்று எண்ணி என் ஒட்டகத்தோடு வந்தேன்.
இந்நிலையில் நான் நகரத்தை நெருங்கி வந்த போது சில ராணுவ வீரர்கள் வழிப்பறி செய்யும் திருடர்களை பிடித்திருந்தனர்; அவர்கள் பத்து பேர் இருந்தார்கள்.
அவர்களில் ஒருவன் ஒரு ராணுவ அதிகாரியிடம் பணம் கொடுத்து தன்னை விடுவிக்கச் சொல்லி சொன்னான்; அவரும் பணத்தைப் பெற்றுக் கொண்டு தப்பிச்செல்ல விட்டு விட்டார்.
இந்த சூழ்நிலையில் நான் அங்கு வந்தபோது என்னை அவர்கள் பிடித்து பத்தாவது ஆளாக சேர்த்துக் கொண்டார்கள்; என் ஒட்டகத்தையும் பறித்துக் கொண்டார்கள்.
அல்லாஹ்விற்காக என்னை விட்டு விடுங்கள் என்று நான் கெஞ்சினேன்; என் சூழ்நிலைகளை எடுத்துச் சொன்னேன்; ஆனால் அவர்கள் எதையும் கேட்பதாக இல்லை; என்னை சிறை பிடித்து விட்டார்கள்;
பிறகு நான் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறேன்; என்னோடு வந்த சிலர் இறந்து விட்டார்கள்; பலர் விடுவிக்கப்பட்டு விட்டார்கள்; நான் மட்டும் நீண்ட நாட்களாக சிறையில் இருக்கின்றேன்.
இதைக் கேட்டதும் மன்னர் அல் முஃதமித் (ரஹ்) அவர்கள், "ஐநூறு தீனார்களைக் கொண்டு வாருங்கள்" என்று கூறினார். கொண்டுவரப்பட்டது;
"இதை மன்சூருக்கு கொடுங்கள்! மேலும் ஒவ்வொரு மாதமும் அவருக்கு 30 தீனார்களை வழங்குங்கள்; நமது அரசின் ஒட்டகம் சார்ந்த பணிகளை அவரிடம் ஒப்படையுங்கள்" என்று கூறினார்.
பிறகு மன்னர் எங்களிடம் திரும்பி, "இப்போது உறங்கிய உறக்கத்தில் நபி (ஸல்) அவர்களைக் கனவில் கண்டேன்; அப்பொழுது அவர்கள் 'அஹமதே! உடனே சிறைச் சாலைக்குச் செல்! மன்சூர் அல் ஜம்மாலை உடனே விடுதலை செய்! அவர் அநீதி இழைக்கப்பட்டு இருக்கிறார்; அவருக்கு நன்மையை செய்' என்று கூறினார்கள்.
அதனால் நீங்கள் பார்த்தபடி அவருக்கு நான் நன்மைகளை செய்து விட்டேன்" என்று மன்னர் கூறினார்.
பின்னர் மன்னர் உறங்கி விட்டார்; நாங்கள் அங்கிருந்து வெளியேறி விட்டோம்" என அல் முஹல்லபீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
நூல்: அதந்கிரதுல் ஹம்தூனிய்யா
வடக்கு ஈராக்கில் உள்ள சாம்ரா எனும் தலைநகரை மையமாகக் கொண்டு, 15ஆவது அப்பாஸியா கலீஃபாவான அல் முஃதமித் (ரஹ்) அவர்கள் கி.பி. 870 - 892 / ஹிஜ்ரி 256 - 279 காலகட்டத்தில் ஆட்சி செய்தார்கள்.
Comments
Post a Comment