உலகத்தின் இறுதி ஹஜ்
சூஃபிகளின் ஹஜ் : - 25
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•
உலகத்தின் இறுதி ஹஜ்
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷
நபி (ஸல்) அவர்கள் தாம் ஹஜ்ஜுக்குச் சென்ற சமயம் பெண்களிடம், “இதுவே நீங்கள் செய்யும் ஹஜ்ஜாகும். இதற்குப் பிறகு உங்கள் வீட்டு பாய்களின் மீது நீங்கள் இருக்க வேண்டும்." எனக் கூறினார்கள்.
நூல் : திர்மிதீ
இந்த ஹதீஸின் காரணமாக உம்மு ஹாத்துல் முஃமினீன் ஜைனப் (ரலி) அவர்களும், சௌதா (ரலி) அவர்களும் இதற்குப் பிறகு ஒரு ஹஜ்ஜும் செய்யவில்லை.
"நபி (ஸல்) அவர்களின் இந்த அருள் மொழியை நாமே நேரில் கேட்டிருக்க, பிரயாணத்திற்காக வீட்டை விட்டு எப்படி வெளிக் கிளம்புவது?' ' என்று அவர்கள் ஹஜ்ஜுக்குச் செல்லவில்லை.
ஆனால் நபிகள் நாயகத்தின் மற்ற மனைவிமார்கள் நபி (ஸல்) அவர்களின் மனைவியர் கீழ்காணும் ஹதீஸ்களின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஹஜ், உம்ரா செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
வயதானவர், பலவீனர், பெண்கள் ஆகியவர்களின் ஜிஹாத் ஹஜ்ஜாகும்."
நூல் : திர்மிதீ
சூஃபிகளில் சிலர் தம் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே ஹஜ் செய்தவர்கள் இருக்கிறார்கள். ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே ஹஜ் செய்து இருக்கிறார்கள் என்பதே அவர்கள் கூறும் காரணம்.
அதே சமயம் இவர்கள் அடிக்கடி மக்காவிற்கு செல்வார்கள். உம்ரா செய்வார்கள். அதிகமாக தவாஃப் செய்வார்கள். மக்காவில் தங்கி இருப்பார்கள்.
அதே சமயம் வேறு சில சூஃபிகள் பல ஹஜ்ஜுகளை செய்து இருக்கிறார்கள். பல ஹஜ்ஜிகளை செய்த சூஃபிகள், "ஹஜ் செய்வதற்காக மீண்டும் மீண்டும் இஹ்ராம் ஆடையை அணியும் போது உடலிலும் உள்ளத்திலும் உள்ள ஆசைகளையும் அகற்றி விடுகிறோம்; அதனாலேயே மீண்டும் மீண்டும் ஹஜ்ஜுகளை செய்கிறோம்"எனக் கூறுகிறார்கள்.
சூரியன் உதயமாகும் ஒவ்வொரு நாளிலும் கஅபாவை ஒரு அப்தால், மற்றும் ஒரு அவ்தாத் தவாஃப் செய்கிறார்கள்.
அப்தால், அவ்தாத் எனும் சொல் இறைநேசர்களின் படித்தரத்தை குறிக்கும். இவ்வாறான இறைநேசர்கள் கஅபாவிற்கு வருவது நின்று போனால், அன்றிலிருந்து ஏழு வருடங்களில் கஅபா வானத்திற்கு உயர்த்தப்பட்டுவிடும்.
பின்னர் குர்ஆன் உயர்த்தப்படும். அதற்குப் பிறகு மனித இதயங்களில் உள்ள திருக்குர்ஆன் வசனங்கள் உயர்த்தப்படும். அதற்கும் பிறகு ஹஜருல் அஸ்வது கல்லும், மகாம இப்ராஹிம் கல்லும் உயர்த்தப்பட்டுவிடும்.
நூல் : அல் மவ்ஸூஅதுஸ் ஸூஃபியா
Comments
Post a Comment