இவன் கொள்கைக்கு வாரிசு இல்லாதவன்
இவன்,
கொள்கைக்கு வாரிசு இல்லாதவன்
إِنَّ شَانِئَكَ هُوَ الأبْتَرُ
நபியே! உங்களை வெறுப்பவனே சந்ததியற்றவன் ....
திருக்குர்ஆனுடைய அத்தியாயங்களில் ஆகச்சிறிய அத்தியாயம் அல் கவ்ஸர். இதில் மூன்று வசனங்கள் இருக்கின்றது. மூன்று வசனங்களும் மூன்று வகையான கருத்துக்களைப் பேசுகிறது.
மூன்றாவது வசனம் தான் இது! இந்த வசனத்தின் விளக்கங்களை விரிவாக காண்போம். இந்த வசனம் ஆஸ் பின் வாயில் என்பவன் குறித்து அருளப்பட்டுள்ளது. இவர் மிகச்சிறந்த அறிவாளிகளில் ஒருவர். யாருக்கும் தோன்றிடாத சிந்தனைகளுக்குச் சொந்தக்காரர்.
அறிவாளியாக இருந்ததனாலதானோ என்னவோ இவருக்கு இஸ்லாம் ஆகும் பாக்கியம் கிடைக்கவில்லை. அபுல் ஹிகம் எனும் அபூலஹபைப் போல! ஷைத்தானை போல!
நபி (ஸல்) அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் விவரம்:
அல்-காசிம் பின் முஹம்மது 598–601
ஜைனப் பின்த் முஹம்மது 599–629
ருகாயா பின்த் முஹம்மது 601–624
உம்மு குல்தும் பின்த் முஹம்மது 603–630
பாத்திமா பின்த் முஹம்மது 605/15–632
அப்துல்லா பின் முஹம்மது 611–615
நபி (ஸல்) அவர்களுக்கு முதல் குழந்தை ஆண் குழந்தையாகவும், இறுதிக் குழந்தை ஆண் குழந்தையாகவும் பிறந்து இருந்தார்கள்.
அன்னை கதீஜா (ரலி) அவர்கள் மூலம் மொத்தம் ஆறு குழந்தைகள் பிறந்திருந்தார்கள். அவர்களின் இறுதியானவரான அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் ஒரு நாள் இரவில் காலமாகி விட்டார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு ஆண் குழந்தைகளே இல்லை. பெண் மக்கள் மட்டுமே எனும் நிலை உருவானது.
நபி (ஸல்) அவர்களுக்கு உடன் பிறந்த சகோதரர்கள் என்று எவருமில்லை. நபி (ஸல்) அவர்களுக்கு பிறந்த ஆண் குழந்தைகளில் எவரும் உயிருடன் இல்லை.
இந்நிலையில் நபி (ஸல்) அவர்கள் குரைஷிகளை மட்டும் கஅபா வளாகத்திற்குள் வரச் செய்து அவர்களுக்கு இஸ்லாமியப் பிரச்சாரம் செய்ய அழைப்பு விடுத்திருந்தார்கள்.
அவர்கள் அனைவரும் கஅபாவின் வளாகத்தில் நபிகளாரின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.
அப்பொழுது நபி (ஸல்) அவர்கள் 'பனீ ஸஹம்' எனும் வாசல் வழியாக கஅபா வளாகத்திற்குள் நுழைந்தார்கள்.
அச்சமயம் கஅபா வளாகத்தினுள் பேசிக் கொண்டிருந்த குரைஷி தலைவர்களில் ஒருவரான ஆஸ் பின் வாயில் என்பவன் "அவரை விடுங்கள் அவர் சந்ததியற்றவர்; அவருக்கு வழி தோன்றல்கள் யாரும் கிடையாது; அவர் இறந்து விட்டால் அவரது கதை அத்தோடு முடிந்து விடும்" என்று கூறினான்.
அங்கு கூடியிருந்த அனைவரும் இவ்வாறு கேலிப் பேசி சிரித்து மகிழ்ந்தார்கள். இவரைக் குறித்து தான் இந்த வசனம் அருளப்பட்டது.
பிற்காலத்தில் இவரை சிலர் இஸ்லாத்திற்கு அழைத்தார்கள். அப்பொழுது இவர், "நான் இறந்த பிறகு மீண்டும் உயிர்பெற்று வந்தாலும் முஹம்மதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்" என்று கூறினான்.
இவருடைய ஒட்டகங்களை இவர் மேய்த்துக் கொண்டிருக்கும் போது கருவேலமுள் ஒன்று இவரது காலில் குத்தியது.
அதனால் இவருடைய கால் வீங்கி சீல் சலம் வைத்து மிகப்பெரும் புண்ணாக ஆனது. மக்கா மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்த அனைத்து மருத்துவர்களும் சிகிச்சை அளித்தும் முள் குத்தியதை சரி செய்ய இயலவில்லை.
சீல் சலம் வடிவதால் இவரை பார்க்க எவரும் வருவதில்லை. இவர் நதன் - நாற்றம் எடுத்த மனிதராக ஆகிப் போனார். இவருடைய குடும்பத்தினர் கூட மிகச் சிரமப்பட்டே இவரைக் கவனித்துக் கொண்டார்கள்.
இவருடைய மகன் ஹிஷாம் அவர்கள், "கைதேர்ந்த நல்ல மருத்துவரை சிரியாவிலிருந்து அழைத்து வருகிறேன்" என்று சொல்லிவிட்டு சென்றார். அவர் மருத்துவரை அழைத்துக் கொண்டு மக்காவிற்கு வந்த போது அவருடைய தந்தை இறந்து சில நாட்கள் ஆகி இருந்தது.
இவர் நபியை "அப்தர் - ஆண் சந்ததி இல்லாதவர்" என பலித்துப் பேசியதால், எந்த ஆணும், எந்தப் பெண்ணும் இவரை நெருங்க முடியாத அளவிற்கு அல்லாஹ் தூரமாக்கி விட்டான்.
இவரும் ஒரு வகையில் அப்தர் - மக்கள் தொடர்பு இல்லாதவராக ஆகி விட்டார்.
இவருக்கு ஹிஷாம், அம்ரு என்ற இரு ஆண் மக்கள் இருந்தனர். இவர்கள் இருவரும் பிற்காலத்தில் இஸ்லாத்தில் இணைந்து விட்டார்கள். இவர்கள் ஹிஷாம் பின் அல் ஆஸ், அம்ரு பின் அல் ஆஸ் (ரலி) என அழைக்கப்பட்டார்கள்.
அல்லாஹ் சொன்னது போல் ஆஸுடைய கருத்துகளுக்கும் கொள்கைகளுக்கும் வாரிசாக எவரும் இல்லாமல் ஆகிவிட்டனர்.
இந்த வசனம் அபூ ஜஹலை குறிப்பதாகவும், உக்பா பின் அபி முஐத் என்பவனை குறித்து அருளப்பட்டதாகவும் ஹதீஸ்களில் காணப்படுகிறது.
நூல் : தஃப்ஸீர் இப்னு கஸீர்,
தஃப்ஸீர் குர்துபி.
விளக்கம் தொடரும்........
Comments
Post a Comment